தமிழகம்

விவசாயிகளின் குறைகளை எடுத்து சொன்னால் முதலமைச்சர் செவி கொடுத்து கேட்பதில்லை

பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வருத்தம்

சென்னை

விவசாயிகளின் குறைகளை எடுத்து சொன்னால் முதலமைச்சர் செவி கொடுத்து கேட்பதில்லை என்று பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நேற்று நடைபெற்ற 2022-2023-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-

       வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது என்பது வரவேற்கக்கூடிய ஒன்றுதான் என்றாலும், இந்த நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயராது என்பது தான் யதார்த்தம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, 2,000 ரூபாயாகவும், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, 4,000 ரூபாயாகவும், உயர்த்துவோம் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இது தவிர, அனைத்து விளை பொருட்களுக்கும், குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்படும் என்று, தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுகுறித்து எவ்விதமான அறிவிப்பும் இல்லாதது விவசாயிகளிடையே பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே, இந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி, விவசாய பெருங்குடி மக்களுக்கு நிம்மதி அளிக்க வேண்டுமென்று, தங்கள் வாயிலாக இந்த அரசை கேட்டுக் கொள்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சிக் காலத்தில், மழையினால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு, நிவாரண தொகையாக ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் வழங்கியபோது, அதனை அப்போது விமர்சனம் செய்தவர் முதலமைச்சர். அதோடு நிற்காமல், பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால், சென்ற ஆண்டு நவம்பரில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, தான் முன்னர் சொன்னதை மறந்துவிட்டு, ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதாவது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ன அறிவித்ததோ அதையேதான் அறிவித்தார்.

நான் கூட ஏக்கருக்கு 30,000 ரூபாய், அதாவது ஹெக்டேருக்கு 75,000 ரூபாய் அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். ஆனால், அதற்கு இந்த அரசு செவி சாய்க்கவில்லை. முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது என்ன கோரிக்கை விடுத்தாரோ அதனை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பது நியாயம்தானே! ஆகவே, விவசாயிகளின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், தங்கள் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், 11-11-2021 வரை பெய்த மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மட்டும் தான் இழப்பீடு வழங்கப்பட்டு இருக்கிறது என்றும், அதற்கு பிறகு பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு இழப்பீடு ஏதும் வழங்கப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். எனவே, மேற்படி நாளுக்குப் பின் மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும் இழப்பீடு வழங்கி, அவர்களது துன்பத்தை போக்க வேண்டுமென்று, தங்கள் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.வேளாண் நிதிநிலை அறிக்கையில், பயிர் காப்பீட்டு திட்டத்தினை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும், அதற்காக, நடப்பாண்டில் 2 ஆயிரத்து 339 கோடி ரூபாய், ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், கூறப்பட்டுள்ளது.

இது சரிதான். ஆனால், சென்ற ஆண்டு குறுவை சாகுபடியின்போது, காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, இந்த அரசு தவறிவிட்டதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இனி வருங்காலங்களில், காப்பீட்டு திட்டத்தை அரசு தவறாமல் மேற்கொள்ள வேண்டும் என்று தங்கள் வாயிலாக அரசினை கேட்டுக் கொள்கிறேன்.

விவசாயிகள் அறுவடை செய்த விளை பொருட்கள், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைக்கப்படுவதால், அதனை பாதுகாக்க, இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், 60 ஆயிரம் விவசாயிகளுக்கு தார்பாய்கள் ஐந்து கோடி ரூபாய் மானியத்தில் வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

இருந்தாலும், இது போதுமானது அல்ல என்பதுதான் விவசாயிகளின் கருத்தாக இருக்கிறது. எனவே, நெல் மூட்டைகளையும், இதர விளை பொருட்களையும் மழையில் நனையாமல் பாதுகாப்பாக வைக்க இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.