பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் அவமதிப்பு – கழக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

சென்னை
தமிழக சட்டப்பேரவையில் இருந்து நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:-
கேள்வி:- இன்றைக்கு எந்த காரணத்திற்காக வெளிநடப்பு செய்துள்ளீர்கள்?
பதில்:- நேற்றைய தினம் நிதியமைச்சர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின் மீது எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தார். ஓ.பன்னீர்செல்வம் 10 ஆண்டு காலம் நிதி அமைச்சராக இருந்தவர். முதலமைச்சராக, துணை முதலமைச்சராக
பணியாற்றிவர்.
இப்படி அனுபவம் மிக்க அவர் நிதி நிலை அறிக்கையிலே கருத்துக்களை சொல்லி கொண்டிருக்குபொழுதே இந்த துறையின் அமைச்சர் திடீரென அவையிலிருந்து வெளியேறி விட்டார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் சொல்வதை கேட்டு அதற்குரிய பதிலை சொல்லுவது தான் மரபு. ஆனால் அதற்கு மாறாக அவருடைய துறை சேர்ந்த நிதிநிலை அறிக்கையை பேசி கொண்டிருக்குபோதே வெளியேறியது வேண்டுமென்றே திட்டமிட்டு வெளியேறியது எதிர்க்கட்சிகளை அவமானப்படுத்துவதாக கருதி நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.
அவர் வெளியேறும்போது இவர் கேட்ட கேள்விக்கு முறையாக பதில் அளிக்க முடியாமல் கையில் வைத்திருந்த பேப்பரை தூக்கி எரிந்து விட்டு வெளியேறுகிறார். இது அவருடைய துறை. அவர் முறையாக அமர்ந்து பதில் அளிக்க வேண்டும்.
நிதிநிலை என்பது இந்த நாட்டின் வரவு, செலவு குறித்து நடைபெறும் விவாதம். நாங்கள் பிரதான எதிர்க்கட்சி. எல்லா துறைகளிலும் இருக்கிற பிரச்சினையை புள்ளி விபரத்தோடு அவர் எடுத்து வைக்கிறார் அதற்கு முறையாக பதில் சொல்ல வேண்டிய கடமை நிதி அமைச்சருக்கு உள்ளது. அந்த கடமையை தவறி நடந்து கொண்டிருக்கிறார். இதனை எல்லாம் கண்டித்து தான் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.
கேள்வி:- நீங்கள் வெளிநடப்பு செய்யும்போது நொண்டி சாக்கு சொல்லி அ.தி.மு.க. வெளிநடப்பு செய்கிறது. மிகை செய்கிறார்கள் என்று கருத்துக்களை தெரிவித்துள்ளாரே?
பதில்:- பேரவை தலைவர் என்பது ஆரம்பத்தில் கட்சியில் இருக்கலாம். ஆனால் பேரவை தலைவராக தேர்வாகி அந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டால் அவர் நீதியரசருக்கு சமமானவர். பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும். அப்படித்தான் எல்லோரும் எதிர்பார்க்கிறோம்.
கேள்வி:- பதிலுரையை முழுமையாக புறக்கணிப்பு செய்கிறீர்களா?
பதில்:- எங்களை மதிக்கவில்லையே.. அவர் (நிதி அமைச்சர்) தாக்கல் செய்த நிதிநிலையில் தான் நாங்கள் பேசி வருகிறோம். நாங்கள் பேசுவதையே புறக்கணிக்கும்போது நாங்கள் எப்படி எதிர்க்கட்சிக்கு மரியாதை இருக்கிறது இங்கு. எங்களுக்கு மரியாதை இல்லை. அந்த நிதிநிலையிலும் எதுவும் இல்லை. இதைத்தான் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.
இந்த பட்ஜெட்டில் தேடி, தேடி பார்த்தேன். பயனாளிகளுக்கு எந்த திட்டமும் இல்லை என்ன காரணத்தினாலோ இதனை எல்லாம் மனதிலே வைத்துக்கொண்டு, அவர் எரிச்சலோடு, வெளியே சென்ற காரணத்தினால் முறையாகப் பதில் சொல்ல தவறிய காரணத்தினால், எதிர்க்கட்சியை அவமானப்படுத்திய காரணத்தினால், நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.
நேற்று முன்தினம் முதலமைச்சர் விதி எண் 110-ன் கீழ் கழகத்தின் சார்பாக 2011-ம் ஆண்டிலிருந்து 2021 வரை எவ்வளவு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. எவ்வளவு நிறைவேற்றப்பட்டுள்ளது. எவ்வளவு பணி நடைபெற்று வருகிறது. எவ்வளவு கைவிடப்பட்டது என்று சொன்னார். ஆனால் உண்மை செய்தியை மறைத்து விட்டார். அரசு சட்டமன்றத்தில் வைத்த புத்தகத்தில் அவர்களே தெரிவித்துள்ளார்கள் .நாங்கள் சொல்லவில்லை. நாட்டின் முதலமைச்சரே
தெளிவுபடுத்தியுள்ளார். அம்மா அவர்கள் இருக்கும்போது சரி, அம்மா மறைவுக்கு பிறகும் அம்மாவின் அரசு 10 ஆண்டுகளில் கழக ஆட்சியின் சார்பாக சட்டமன்றத்தில் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய 110 விதியில் 1704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசு தாக்கல் செய்துள்ள புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதில் நிறைவேற்றப்பட்ட பணிகள் 1167. நடைபெற்று வரும் பணிகள் 491. ஆக மொத்தம் 1058 பணிகள் இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. 1167 நிறைவுபெற்று விட்டன. 491 இன்றைக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது.
ஒரு திட்டத்தை அரசு அறிவித்தால் ஒரே ஆண்டில் நிறைவேற்ற முடியாது. ரயில்வே பாலம், உயர்மட்ட பாலம் இருக்கிறது. இவை மூன்று ஆண்டு கால திட்டமாக இருக்கும். சாலை போடும்போது பல்வேறு பிரச்சினைகள் இருக்கும். அவை போடுவதற்கு இரண்டு, மூன்று ஆண்டு காலம் ஆகும். ஒரு திட்டத்தை ஒரே வருடத்தில் நிறைவேற்ற முடியாது.
அது அவர்களுக்கும் தெரியும். இதுதான் நடைமுறை. அது எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி. இடையில் கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டது. 2020-ம் ஆண்டிலிருந்து 2021-ம் ஆண்டு கடுமையான கொரோனா தொற்று இருந்தது. கொரோனாவால் பத்திரிகையாளர்கள் கூட பல பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கும் உதவி செய்வோம் என்று அறிவித்து நாங்கள் உதவி செய்தோம்.
அப்படிப்பட்ட 9 மாத காலத்தில் எந்த பணியும் நடைபெறவில்லை. அறிவிக்கப்பட்ட பணிகள் எல்லாம் கொரோனா வைரஸ் தொற்றாலே நிறுத்தப்பட்டு விட்டன. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் பணிகள் மந்தமாக இருந்ததே தவிர அரசால் அல்ல. கொரோனா தொற்று இருந்த காலத்தில் முழுமையாக பணி செய்ய முடியாத ஒரு சூழ்நிலை. இதுதான் அவர் அளித்த புள்ளி விவரம்.
20 அரசாணைகள் பிறப்பிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதில் 17 2020- 21 காலம். அதாவது கொரோனா காலம். அதிகாரிகளுக்கு விடுமுறை அளித்திருந்தோம்,. பல பணிகளுக்கு விடுமுறை விட்டோம். அலுவலர்கள் வராத காரணத்தினால் முழுமையாக அவர்களை பயன்படுத்தி தேவையான திட்டத்தை தயாரிக்க முடியவில்லை. இதனால் அரசாணை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டது. அதற்குள் தேர்தல் வந்து விட்டது.
தேர்தல் வந்த காரணத்தினால் நிறைவேற்ற முடியவில்லை. 26 அறிவிப்புகள் கைவிடப்பட்டதாக அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைக்க வேண்டும். நிலம் எடுக்க வேண்டும். இப்படி பல பிரச்சினைகள் இருக்கின்ற காரணத்தினால் 26 அறிவிப்புகள் கைவிடப்பட்டன. 1704 அறிவிப்புகளில் 26 மட்டும் தான் கைவிட்டுள்ளோம்.
97 சதவீத பணிகள் நிறைவேற்றிய அரசு அம்மாவின் அரசு. 2011-லிருந்து 2021 வரை சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 97 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது அவர் (முதல்வர்) அளித்த புள்ளி விபரம். நாங்கள் அளித்த புள்ளி விபரம் இல்லை. முதலமைச்சர் அளித்த புத்தகத்தில் இருக்கின்ற புள்ளி விவரத்தை தான் நாங்கள் சொல்கிறோம்.
கேள்வி:- ஆனால் முதல்வர் குறிப்பிடும்போது 25 சதவீதம் தான் முடிந்துள்ளது என்று குறிப்பிடுகிறாரே?
பதில்:- அவர் அளித்துள்ள புத்தகத்தை பார்த்து நீங்கள் தீர்மானியுங்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு, எங்கள் மீது ஏதாவது குற்றம் சொல்ல வேண்டும், பழி சுமத்த வேண்டும் என்று செயல்படுகிறார்கள். சட்டப்பேரவையில் அம்மா அவர்கள் இருக்கும்போது விதி 110 என்றாலே மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அந்த அளவிற்கு மக்களிடையே வரவேற்பு இருந்தது. இதனை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நிறைய திட்டங்கள் மூலமாக மக்களுக்கு நல்லது செய்தார். இது வரலாற்று சிறப்பு மிக்கது.
110 விதி என்றாலே மக்கள் உடனே தொலைக்காட்சியை பார்ப்பார்கள். இன்றைக்கு என்ன திட்டம்
என்று மக்கள் எதிர்நோக்கி இருந்தார்கள். அப்படி மக்கள் எதிர்நோக்கிய திட்டங்களை எல்லாம் அம்மாவின் அரசு 10 ஆண்டு காலம் நிறைவேற்றி நாட்டு மக்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளோம்.
இதில் ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக தான் திட்டமிட்டு முதலமைச்சர் இந்த குறையை சொல்லியுள்ளார். இதில் எந்த குறையும் கிடையாது இதனை ஊடகத்தினர் தெளிவாக வெளியிட வேண்டும். ஏனென்றால் ஆளும் கட்சியின்
செய்தி தான் எப்போதும் வருகிறது.
எதிர்க்கட்சிகள் சொல்கின்ற செய்திகள் எதுவும் வரவில்லை. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஒரு வண்டிக்கு இரண்டு சக்கரம் போன்றது. இரண்டும் சரியாக இருந்தால் தான் இலக்கை அடைய முடியும். எனவே நீங்கள் எந்த அளவுக்கு ஆளும் கட்சிக்கு வாய்ப்பு அளிக்கிறீர்களோ, அதே வாய்ப்பை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும்.
புத்தகத்தை படித்தால் தெரியும். மொத்த அறிவிப்புகள் 1704 அறிவிப்புகள். இவற்றில் நிறைவேற்றப்பட்டவை 68 சதவீதம். இதனை அவரே ஒத்துக் கொள்கிறார். நடைபெற்று வரும் பணிகள் 491. பணிகள் எல்லாம் அரசாணை போட்டு நடைபெற்று வருகிறது. இரண்டும் சேர்த்தால் 1658 அறிவிப்புகள். 20 பணிகள் கொரோனா தொற்று இருந்த காலம்.
முழுமையாக அரசு அதிகாரிகள் பணிக்கு வரவில்லை. அந்த கால கட்டத்தில் அரசாணை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது. பிறகு இரண்டாவது மாதமே தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் விதிமுறைப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. 26 பணிகள் கைவிடப்பட்டதாக கூறியுள்ளார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. 1704-ல் 26 அறிவிப்புகள் தான் கைவிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது.
மத்திய அரசிடமிருந்து அனுமதி வாங்க வேண்டும். நில எடுப்பு பிரச்சினை இருக்கும். இப்படி பல காரணத்திற்காக கைவிடப்பட்டன. இதில் என்ன தவறு இருக்கிறது. இதனை பெரிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்து முதலமைச்சர், கழக ஆட்சியிலே சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ்
அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை என்ற தவறான செய்தியை இன்றைக்கு ஊடகத்திலும், பத்திரிகையிலும் வெளிப்படுத்தி எங்களை குறை சொல்லி வருகிறார்.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.