சிறப்பு செய்திகள்

3-ம் கட்ட கழக அமைப்பு தேர்தல் – கழக நிர்வாகிகள்- தொண்டர்கள் போட்டி போட்டு விருப்ப மனு

சென்னை

மூன்றாவது கட்ட கழக அமைப்பு தேர்தல் நேற்று நடைபெற்றது. ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், பேரூராட்சி கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கு கழக நிர்வாகிகள், ெதாண்டர்கள் போட்டி போட்டு விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கழக அமைப்பு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலும், இரண்டாம் கட்டமாக கிளை கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள், நகர வார்டு கழக நிர்வாகிகள், மாநகராட்சி வட்ட கழக நிர்வாகிகள் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதன்படி 3-ம் கட்டமாக ராணிப்பேட்டை, வேலூர் மாநகர், வேலூர் புறநகர், திருப்பத்தூர், திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,

சேலம் புறநகர், சேலம் மாநகர், தருமபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, நாமக்கல், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு, திருப்பூர் புறநகர் மேற்கு, கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், பேரூராட்சி கழக நிர்வாகிகள்,

பகுதி கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கு மார்ச் 27-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று மேற்கண்ட மாவட்டங்களில் 3-ம் கட்ட கழக அமைப்பு தேர்தல் நடைபெற்றது. காலை 10 மணிக்கு தேர்தல் தொடங்கியதும் ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், பேரூராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் போட்டி போட்டு விருப்ப மனுக்களை உரிய கட்டணம் செலுத்தி பெற்று பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களிடம் வழங்கினர்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஓமலூரில் உள்ள நடராஜ செட்டியார் திருமண மண்டபம், ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களில் கழக நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களான புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான பி.கே.வைரமுத்து, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.செம்மலை,

சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜமுத்து, ஜெயங்கரன், சித்ரா, நல்லதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தேர்தல் நடைபெறும் 25 மாவட்டங்களில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர்.