சிறப்பு செய்திகள்

ஸ்டாலின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலா – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சேலம்

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கழக அமைப்பு தேர்தல் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கே இருக்கின்ற சர்வதேச உலக வர்த்தக கண்காட்சியிலே தமிழ்நாடு அரங்கினை தொடங்கி வைப்பதற்காக சென்றதாகவும், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காகவும் சென்றுள்ளதாகவும் பத்திரிகையிலும், ஊடகத்திலும் செய்தி வந்துள்ளது.

ஆனால் ஸ்டாலினின் துபாய் பயணத்தை குடும்ப சுற்றுலாவாகத் தான் மக்கள் பார்க்கிறார்கள். அதற்கென்று தனி விமானத்தை எடுத்து குடும்ப உறுப்பினர்களுடன் துபாய் சென்றிருக்கிறார். அதற்கு முன்பாகவே ஸ்டாலினின் மகன் உதயநிதி சென்றுள்ளார்.

துபாய் சென்றது தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காகவா அல்லது குடும்பத்திற்கு புதிய தொழில் தொடங்குவதற்காகவா என்று மக்கள் பேசி கொண்டிருக்கிறார்கள். மக்கள் பார்வைக்கு அப்படித்தான் தெரிகிறது.

ஸ்டாலினுடன் அந்த துறையை சேர்ந்த அமைச்சர்கள், அந்த துறை செயலாளர்கள் சென்று இருந்தால் பரவாயில்லை. குடும்பமே துபாய்க்கு சென்றிருக்கின்றபோது மக்கள் பார்வைக்கு, மக்கள் பேசுவது என்னவென்றால், தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய, தமிழ்நாட்டிற்கு தொழில் தொடங்க அங்கே செல்லவில்லை. துபாய்க்கு சென்றது அவருடைய தனிப்பட்ட காரணங்களுக்காக என்று பேசி கொண்டிருக்கிறார்கள்.

அங்கே இவர்கள் புதிய தொழில் தொடங்குவதற்காக தான் என்று மக்கள் பேசிக்கொள்வதை எங்களால் கேட்க முடிகிறது. அது மட்டுமல்ல சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடங்கப்பட்ட நாள் 01.10.2021. முடிவடையும் நாள் 31.03.2022. இன்னும் நான்கு நாட்களில் முடிவடைய உள்ளது.

முடியும் தருவாயில் ஸ்டாலின் தமிழ்நாட்டின் சார்பாக சர்வதேச வர்த்தக கண்காட்சியில் தமிழ்நாட்டின் சார்பாக அரங்கு அமைத்து தொடங்கி வைப்பது வேடிக்கையாக உள்ளது. ஏற்கனவே 1.10.2021-ல் துவக்கி வைத்து இருந்தால் பரவாயில்லை. இதை ஒரு சாக்காக வைத்து துபாய் செல்வதற்கு இதை பயன்படுத்தி இருக்கிறார்.

நான் வெளிநாடு சென்ற பொழுது, அப்பொழுது எதிர்க்கட்சி தலைவராக இருந்த இப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார், அதில் எடப்பாடி பழனிசாமி முதலீட்டை பெற வேண்டும் என்று வெளிநாடு செல்லவில்லை.

நியாயமாக முதலீட்டாளர்களை சந்திக்க செல்ல வேண்டுமென்றால் முதலமைச்சர் செல்லலாம், அத்துறை அமைச்சர் செல்லலாம். அதை விட்டு விட்டு அமைச்சர்கள் படையோடு சென்றதாக குற்றம் கூறி கழக அமைச்சரவை இல்லை, கழக சுற்றுலா அமைச்சரவை என்ற பட்டத்தை கொடுப்பதாக கூறினார்.

இப்படி நான் வெளிநாடு சென்ற பொழுது ஒரு கருத்தை சொல்லியிருந்தார். நான் வெளிநாடு சென்ற பொழுது எல்லோரும் பயணம் செய்யும் விமானத்தில் பயணம் செய்தேன். அந்தந்த துறையின் செயலாளர்கள் இருந்தார்கள், அமைச்சர்கள் இருந்தார்கள். அப்போது என்னோடு சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் சி.விஜயபாஸ்கரை லண்டனுக்கு அழைத்துக் கொண்டு சென்றேன்.

தமிழ்நாட்டில் ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்துவதற்காக அங்கே இருக்கின்ற அமைப்பை சேர்ந்தவர்களோடு கலந்து ஆலோசித்து ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஆய்வு செய்தோம்.

அதோடு அதிநவீன மருத்துவ கருவிகளை எப்படி பயன்படுத்துவது, எதை எதை வாங்குவது என்று அங்கே இருக்கின்ற மருத்துவர்களுடைய கருத்துக்களை கேட்பதற்காக சென்றோம். அதோடு மருத்துவ மேம்பாடு எப்படி செய்யப்பட வேண்டும் என்பதற்கும் நாங்கள் சென்றோம்.

அதுமட்டுமல்ல கிங்ஸ் மருத்துவமனை செயல்பாடு எப்படி உள்ளதோ? அதேபோல நம்முடைய தமிழ்நாட்டினுடைய மருத்துவமனையும் மேம்பாடு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் போய் பார்வையிட்டோம். லண்டனுக்கு நம்முடைய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக இருந்த மருத்துவர் விஜயபாஸ்கர் தான் வந்தார்.

மேலும் அந்த துறை செயலாளர்கள் தான் வந்தனர். வேறு எந்த அமைச்சர்களும் வரவில்லை. அன்றைய எதிர்க்கட்சி தலைவரும், இன்றைய முதலமைச்சருமான ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரச்சாரம் செய்தார். ஆனால் நாங்கள் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலே, பல திட்டங்களை தமிழ்நாட்டில் தொடங்க வேண்டும் என்ற அடிப்படையில் சென்றோம்.

அதன் பிறகு நாங்கள் அமெரிக்கா மற்றும் துபாய் சென்றோம். அங்கேயும் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜியை அழைத்து சென்றோம். அதேபோல் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த ஆர்.பி.உதயகுமார் ஆகிய இரண்டு பேரும் தான் வந்தனர். இவர் சொல்வதை போல் அமைச்சர் படை யாரும் வரவில்லை.

இரண்டு அமைச்சர்கள் மட்டும் தான் வந்தனர். இது அனைத்து பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கும் தெரியும். ஆகவே வேண்டும் என்றே ஒரு அவதூறு பிரச்சாரத்தை அன்றைய தினம் செய்தார். ஆக்கப்பூர்வமான திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக நாங்கள் போகும்போது அமெரிக்காவில் பவ்போலோ கால்நடை பால் பண்ணைக்கு சென்று பார்வையிட்டு அங்கே எப்படி பசுக்களை வளர்க்கிறார்கள் என்றெல்லாம் தெரிந்து தான் நம்முடைய தலைவாசல் கூட்ரோட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை தொடங்கினோம்.

வெளிநாட்டிற்கு சென்றது மட்டுமல்லாமல் இப்படி திட்டங்களை கொண்டு வந்தோம். இன்றைக்கு அந்த பணி எல்லாம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

அதேபோல் அமெரிக்காவிற்கு சென்ற போது கலிபோர்னியாவில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய எலக்ட்ரானிக் கார் தயாரிப்பு டெஸ்லா தொழிற்சாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டேன். அந்த தொழிற்சாலை தமிழகத்தில் உருவாக்குவதற்கு முயற்சி எடுத்தோம். ஆட்சி மாற்றம் வந்து விட்டது. அதையெல்லாம் பார்த்து வந்த பிறகு தான் இன்றைக்கு மின்சார வாகன கொள்கை 2019 இ.டி.பி. உருவாக்கப்பட்டது.

இதற்காக தனியாக மின்சார வாகன உற்பத்தி பூங்கா ஒன்றும் கும்முடிபூண்டி அருகில் சிப்காட் அமைக்க ஆணையிட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனால் இன்றைக்கு ஓசூரில் எவலட் நிறுவனம், போச்சம்பள்ளியில் ஓலா நிறுவனம் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி கொண்டிருக்கிறது.

இவை எல்லாம் சென்று பார்த்து வந்ததால்தான் இன்றைக்கு தமிழ்நாட்டில் வந்துள்ளது. மேலும் ஹூண்டாய் எலக்ட்ரிக் காரை 2019-ம் ஆண்டு முதல் தலைமை செயலகத்தில் கொண்டு வந்து நானே துவக்கி வைத்தேன்.

அதற்கு பிறகு அம்மாவுடைய அரசு தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் நிறைய திட்டங்களை நாங்கள் கொண்டு வந்தோம்ஹூண்டாய் எலக்ட்ரிக் கார் 2019, எம்.ஜி. எக்ஸ்ட்ரா 2019, ஓலா ஸ்கூட்டர் 2020, எஸ்.வி.எம். 2021 உள்ளிட்ட பல நிறுவனங்களை தமிழ்நாட்டில் நிறுவினோம்.

இதுமட்டுமின்றி அம்மா இருக்கும் போது 2015-ம் ஆண்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு முதன் முதலில் தமிழகத்தில் நடத்தி சுமார் 92 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடிக்கு தொழில் முதலீடு ஈர்ப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

புதிய தொழில் வந்தது. அம்மா மறைவிற்கு பிறகு நான் முதல்வராக இருந்த போது 2019-ம் ஆண்டில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நான் நடத்தினேன். இதில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது ரூ.3 லட்சத்து 5 ஆயிரம் கோடியில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதில் பல தொழில்கள் வந்துள்ளது.

ஹீலம் நிறுவனத்திற்கு நான் அடிக்கல் நாட்டினேன். பிறகு ஸ்டாலின் போய் மறுபடியும் அடிக்கல் நாட்டுகிறார். ஸ்டிக்கர் ஒட்டுவது தான் அவருடைய வேலை. இப்பொழுது கூட வெளிநாட்டிற்கு போயிருக்கிறார். துபாயில் சர்வதேச வர்த்தக கண்காட்சியை தொடங்கி வைக்கும் போது தமிழ்நாடு அரங்கில் கழக அரசு கொண்டு வந்த திட்டங்கள் தான் இடம் பெற்றுள்ளன. பத்து மாதம் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை. ஜி.டி.பி. குறித்து பேசும் போது 2020 மற்றும் 2021-ம் ஆண்டு குறித்து பேசுகிறார்.

ஆனால் அப்போது அம்மாவின் ஆட்சி நடந்தது. நான் முதலமைச்சராக இருந்த போது உள்ள புள்ளி விவரங்கள் கொடுத்துள்ளார். ஆகவே ஆட்சி பொறுப்பேற்று 2021-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து இதுவரை பத்து மாதங்களாக எந்த திட்டமும் கொண்டு வந்து நிறைவேற்றவில்லை.

எந்த புதிய தொழிற்சாலை கொண்டு வந்து முடிவுற்று பணிகளை ெதாடங்க வில்லை. ஆகவே கழக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பர படுத்தி வரும் அரசு தி.மு.க. அரசு.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.