சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து கழகம் சார்பில் விரைவில் போராட்டம்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி
சேலம்,
விடியா தி.மு.க. ஆட்சியில் பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகரித்து விட்டது. எனவே சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து கழகம் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி:- அரசு ஊழியர்கள் சம்பளம் அதிகமாக கேட்கிறார்கள். எனவே பால் மற்றும் போக்குவரத்து கட்டணங்களை உயர்த்தப்படும் என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளாரே?
பதில்:- பார்த்து கொண்டிருக்கிறோம். ஏற்கனவே இவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முதன்மை மாநிலம், முதன்மை மாநிலம் என்று சொல்கிறார். அதுமட்டுமல்ல எல்லா இடத்துக்கும் செல்லும்பொழுது அரசு நிகழ்ச்சி, பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் பேசும்பொழுது தமிழ்நாட்டிற்கே முதன்மை முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் என்று சொல்கிறார்.
என்ன செய்தார்கள். தமிழ்நாட்டுக்கு இவர் முதலமைச்சர் ஆனதிலிருந்து பாலியல் பலாத்காரம் அதிகரித்துள்ளது. சட்டம்- ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது மக்கள் அதை அச்சத்தோடு பார்க்கிறார்கள்.
கேள்வி:- சட்டம்- ஒழுங்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதை முன்னெடுத்து பா.ஜ.க. நிறைய போராட்டங்கள் செய்கிறதே
பதில்:- நாங்களும் போராடி இருப்போம். சட்டமன்ற நிகழ்ச்சி இருந்தது. தற்போது அடுத்த மாத இறுதிக்குள் கழக அமைப்பு தேர்தல் நடத்தி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும், அதனால் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடியாது பல கட்டமாக நடத்த வேண்டும் என்பதால் போராட்டம் நடத்துவதற்கு சற்று காலதாமதம் ஆகிவிட்டது.
விரைவில் கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், தலைமை கழக நிர்வாகிகளும் நானும் கலந்து பேசி போராட்டங்கள் அறிவிக்க உள்ளோம்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.