தற்போதைய செய்திகள்

தி.மு.க.வின் பி-டீம் அறப்போர் இயக்கம் -கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை பேட்டி

கோவை

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் புகார் கூறியுள்ள அறப்போர் இயக்கம் தி.மு.க.வின் பி-டீம் என்று கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை கூறி உள்ளார்.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி மறைமுக தேர்தலின் போது வன்முறையில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கழக அமைப்பு செயலாளரும், கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செ.தாமோதரன், கழக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் எஸ்.இன்பதுரை ஆகியோர் நேற்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

இதன்பின்னர் கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெள்ளலூர் பேரூராட்சியில் நடந்த மறைமுக தேர்தலுக்கு ஆயுதங்களுடன் அடியாட்களை அழைத்து வந்து அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதி மீதும், நீதிமன்ற உத்தரவை மீறிய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை வெள்ளலூர் பேரூராட்சி மறைமுக தேர்தலில் உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத அரசு அதிகாரிகள் மற்றும் அத்துமீறி போலீஸ் வாகனத்தை உடைத்தும் அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அ.தி.மு.க.வினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியின் மறைமுக தேர்தலில் தி.மு.க.வினரால் பெரிய வன்முறை நிகழ்த்தப்பட்டது. ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் தேவையான போலீஸ் பாதுகாப்பு போடவில்லை.

குணசேகரி என்ற திமுக பெண் கவுன்சிலர் வாக்குச்சீட்டை கிழித்தெறிகிறார். கரூரில் இருந்து 100 வாகனத்தில் பலர் இங்கு வந்துள்ளனர். வெள்ளலூர் பேரூராட்சியில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை.

எனவே அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலை சீர்குலைத்த நபர்கள் மீது வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மறைமுக தேர்தலின் போது உயர்நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது.

வெள்ளலூர் நடைபெற்ற பேரூராட்சி மறைமுக தேர்தலில் ஜனநாயகம் காப்பாற்றப்படவில்லை. தி.மு.க.வினர் வேண்டுமென்றே அராஜகத்தில் ஈடுபட்டு பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஆனால் இந்த சம்பவத்தில் கழகத்தை சேர்ந்த 9பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பெண்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இரண்டு பெண்களை காவல்துறையினர் விடுவித்துள்ளனர்.

மேலும் தி.மு.க.வை சேர்ந்த சேனாதிபதி அங்கு ஆயுதங்களுடன் இருந்தார். அந்த வீடியோ ஆதாரமும் எங்களிடம் உள்ளது. தி.மு.க. வை சேர்ந்த சேனாதிபதியை தேர்தல் பார்வையாளர்களாக யாரேனும் நியமித்தார்களா?

தமிழ்நாட்டில் கோவையை முதல்வருக்கு பிடிக்கவில்லை. எனவே தான் இங்கு வன்முறை கட்டவிழ்த்தப்பட்டுள்ளது.யார் இந்த அறப்போர் இயக்கம். தேவையில்லாமல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.

தி.மு.க.வின் பி-டீம் இந்த அறப்போர் இயக்கம். தி.மு.க.வுக்கு எப்போது சரிவு ஏற்படுகிறதோ. அப்போதெல்லாம் இந்த அறப்போர் இயக்கம் செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறார்கள்.

மேலும் இந்த வன்முறை சம்பவத்தை மறைக்கும் நோக்கில் அறப்போர் இயக்கத்தை கொண்டு வேண்டுமென்றே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் புகார் உள்ளதாக செய்தியாளர் சந்திப்பை வைத்து இதனை திசை திருப்பி உள்ளனர். அறப்போர் இயக்கம் முடிந்தால் பொங்கல் பரிசு தொகுப்பில் நடைபெற்ற ஊழலை வெளிக்கொண்டு வர ஆய்வுகளை நடத்தட்டும்.

வெள்ளலூர் பேரூராட்சியில் கழகத்தின் வெற்றியை மறைப்பதற்காக இந்த அறப்போர் இயக்கம் செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறார்கள். வெள்ளலூர் பேரூராட்சி மறைமுக தேர்தலில் தி.மு.க.வினர் நடத்திய வன்முறை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்.

இவ்வாறு கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை கூறினார்.

பேட்டியின்போது கோவை புறநகர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே.தாமோதரன், கோவை புறநகர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன், வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மருதாசலம், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் வால்பாறை ஐ.கணேசன், இ.ஆர்.சிவகுமார், ராமச்சந்திரன்,முத்து இளங்கோவன், எஸ்.சுரேஷ்குமார், அருள்மணி, எஸ்.முருகேசன், ஆறுச்சாமி, சூரியகுமார், நாச்சிமுத்து, உஷா மற்றும் வெள்ளலூர் பேரூராட்சி கழக கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.