சிறப்பு செய்திகள்

தி.மு.க. கவுன்சிலர்கள் தொடர் அராஜகம் – கடும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

சென்னை

சென்னை கொடுங்கையூர் சோலையம்மன் நகர் பகுதியை சேர்ந்த தம்பதி தேவி-பாபு. இவர்களது பூர்வீக சொத்து கொடுங்கையூர் 34-வது வட்டத்தில் உள்ள கொய்யாத்தோப்பு பிரதான சாலையில் அமைந்துள்ள அந்த இடத்தில் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 34-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சர்மிளா காந்தி, அவரது கணவர் கருணாநிதி ஆகியோர் தங்கள் அலுவலகத்திற்கு வருமாறு தேவி-பாபு தம்பதியை நேற்று அழைத்துள்ளனர்.

அதன்படி தேவியும், அவரது கணவரும், கவுன்சிலரின் அலுவலகத்திற்கு சென்று உள்ளனர். அங்கு அவர்களிடம், தற்போது கட்டுமான பணி நடைபெற்று வரும் இடம் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமானது என்றும், மூன்று அடி தூரம் தள்ளி கட்டடம் கட்டுவதால் அதனை உடனே நிறுத்த வேண்டும் எனவும் தி.மு.க. கவுன்சிலரின் கணவரான கருணாநிதி கூறியுள்ளார்.

இல்லையெனில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் கட்டத்தை இடித்து அகற்றுவேன் எனவும் அவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.அதற்கு சம்பந்தப்பட்ட அந்த இடம் எங்களது பெற்றோர் வாங்கியது என்றும், அதற்கான முறையான ஆவணங்கள் எங்களிடம் இருப்பதாக தேவியும், அவரது கணவரும் தெரிவித்தனர்.

மேலும், அந்த ஆவணங்களை வட்டாட்சியரிடம் சமர்ப்பித்து அதற்கான வரைபடத்தையும் பெற்றுள்ளதால் நாங்கள் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என அவர்கள் தரப்பு நியாயத்தை விளக்கிக் கூறினர்.

ஆனால் அதை ஏற்காமல் தி.மு.க. கவுன்சிலரான சர்மிளா காந்தி, அவரது கணவர் கருணாநிதி ஆகியோர் தம்பதியை மிரட்டி இருக்கிறார்கள். கவுன்சிலராக இருக்கிறேன் என்பதால் எங்களை மிரட்டுவதா என்று தேவி வாக்குவாதம் செய்துள்ளார்.

அப்போது அங்கிருந்த கவுன்சிலரின் கணவர் கருணாநிதியின் ஆதரவாளர்கள் தேவிக்கு மிரட்டல் விடுக்கு் தொணியில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க. கவுன்சிலர்கள் உருட்டு, மிரட்டல் செயல்களில் ஈடுபடுவது அம்பலமாகி இருக்கிறது.

இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் தி.மு.க. கவுன்சிலர்கள் தொடர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் பணி செய்யாமல் மாறாக மாமூல் வசூலிக்கும் பணியும், தொடர்ந்து ரவுடியிசமும் செய்து வந்தால் மக்களே அதற்கு தக்க தண்டனையும் கொடுப்பார்கள்.

மக்களை அச்சுறுத்தி வரும் இத்தகைய நபர்கள் மீது கண்துடைப்பு கைது நாடகமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, சர்ச்சைக்குரிய கவுன்சிலர்களை பதவி நீக்கம் செய்யுமா இந்த தி.மு.க. அரசு?

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதேபால் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கவுன்சிலராக பொறுப்பேற்று முதல் கூட்டம் கூட நடக்கவில்லை. முதல் கூட்டம் நடக்காத நிலையிலே உள்ளாட்சித் தேர்தலில்
வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர்களின் அட்டராசிட்டிஸ் ஆரம்பம் ஆகிவிட்டது.

34-வது வட்டம் கொடுங்கையூரில் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதை சமூக ஊடகத்தில் பார்த்திருப்பீர்கள். ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டிலேயே நகை திருட்டு நடந்துள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், நடக்கிறது.

இப்போதுதான் கஞ்சாவை பிடிக்க 2.0 திட்டமாம். இதற்கு முன்னாடி என்ன ஜீரோ திட்டமா. கஞ்சா அதிக அளவில் நடமாடுகிறது என்று காவல்துறை தலைவரே ஒத்துக்கொள்கிறார். அரசே ஒத்துக்கொள்கிறது. இதுதான் நிதர்ச்சமான ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.