தற்போதைய செய்திகள்

மக்களை பாதுகாக்கும் ஒரே இயக்கம் கழகம் -முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பெருமிதம்

திண்டுக்கல்

மக்களை பாதுகாக்கும் ஒரே இயக்கம் கழகம் மட்டுமே என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பெருமிதத்துடன் கூறினார்.

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடமதுரை, எரியோடு, குஜிலியம்பாறை, வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா கழக அமைப்பு செயலாளர் வி.மருதராஜ், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளரும், முன்னாள் உறுப்பினருமான டாக்டர் வி.பி.பி.பரமசிவம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் நீர், மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், வெள்ளரி, சர்பத், மோர், பழங்கள் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் பொது மக்களின் தாகம் தீர்ப்பதற்காக புரட்சித்தலைவி அம்மா கோடைகால நீர் மோர் பந்தலை திறக்க உத்தரவிட்டிருந்தார். அவரது வழியில் தமிழக மக்களுக்கு இத்திட்டம் இன்றும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கொடுமையான கோடை வெயில் ஆனாலும், கடுமையான மழை வெள்ளம் ஆனாலும் தமிழக மக்களை கழகம் காத்து வருகிறது. மக்களை பாதுகாக்கும் ஒரே இயக்கம் கழகம் மட்டுமே.

மேலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி நல்லாட்சி புரிந்து வந்தார். அவரது மறைவிற்கு பின் அவரது வழியில்
கழக ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் அம்மாவின் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி நல்லாட்சி புரிந்தனர்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னம்பட்டி பழனிசாமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் டி.சி.ராஜ்மோகன், திண்டுக்கல் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், குஜிலியம்பாறை ஒன்றிய கழக செயலாளர் மலர்வண்ணன், எரியோடு பேரூர் கழக செயலாளர் அறிவாளி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கார்த்திக் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது வடமதுரை பா.ம.க. நகர செயலாளர் நாகராஜன் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த பலர் கழகத்தில் இணைந்தனர்.