சென்னையில் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்

சென்னை,
சொத்து வரியை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தலைமை கழகம் அறிவித்திருந்தது. அதன்படி இப்போராட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் ஒப்புதலோடு தலைமை கழகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றும் வகையில், சொத்து வரி 150 சதவீதம் உயர்வு, அம்மா அவர்களின் அரசு கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்கள் நிறுத்தம் என்று கடந்த 11 மாத காலமாக தி.மு.க. அரசு மேற்கொண்டிருக்கும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும், அராஜக ஆட்சி முறையையும் எதிர்த்து, சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் நாளை (5.4.2022) கண்டன ஆர்ப்பாட்டங்களை மாவட்ட தலைநகரங்களில் நடத்த இருக்கிறது.
மக்கள் நலனை கருத்தில் கொண்டு கழகத்தின் சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில், கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்திலும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்திலும் தலைமை ஏற்று நடத்த இருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேபோல், ஏனைய மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த தலைமை கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு கழக நிர்வாகிகளும் பங்கேற்று சிறப்பிப்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.