தமிழகம்

10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்துக்கு தி.மு.க. அரசு தான் முழு காரணம் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சேலம்

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு தி.மு.க. அரசு தான் முழு காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் புறநகர் மாவட்டத்தில் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, வீரபாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் நீர், மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், இளநீர், தர்பூசணி, குளிர்பானம் ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தலைமை கழக அறிவிப்பிற்கிணங்க சேலம் புறநகர் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்ட தலைவாசல் பகுதியில், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் நகர பகுதியிலும், ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்ட வாழப்பாடி பேரூராட்சியில், வீரபாண்டி சட்டமன்ற தொகுதியிலும் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் மக்களுக்கு தாகம் அதிகமாகிறது, தாகத்தை குறைப்பதற்காக கழகத்தின் சார்பாக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக நிர்வாகிகளும் இணைந்து நீர்மோர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

கேள்வி:- சொத்து வரி அதிகரித்துள்ளது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் உங்கள் கருத்து?

பதில்:- கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடுமையான பொருளாதார நெருக்கடி. மக்கள் வேலை இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இப்படி 2 ஆண்டு கால சோதனையில் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் தி.மு.க. அரசு வீட்டு வரியை 150 சதவீதம் உயர்த்தி இருக்கிறது. இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரமே பாதித்து நிலைகுலைந்து இருக்கின்ற இந்த சூழ்நிலையில் சொத்து வரியை உயர்த்தியது கண்டனத்திற்குரியது.

கேள்வி:- வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதற்கு சரியான புள்ளி விவரம் இல்லை என கூறியுள்ளது குறித்து?

பதில்:- இதற்கு நூற்றுக்கு நூறு சதவீதம் தி.மு.க. அரசு தான் காரணம். ஏனென்றால் கழக அரசு சரியான சட்டம் இயற்றி, தாக்கல் செய்யப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வந்தது, அதனை பொறுத்துக் கொள்ள முடியாத முதலமைச்சர் ஸ்டாலின் மூத்த வழக்கறிஞரை வைத்து வாதாடவில்லை. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு வந்தபோது மூத்த வழக்கறிஞரை வைத்து வாதாடி இருக்க வேண்டும்.

அறிக்கை தாக்கல் செய்யவில்லை. எல்லா விவரங்களும் அந்த அறிக்கையில் உள்ளது. முறையாக வாதாடவில்லை. மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதியரசரே சரியான தரவுகள் கொடுக்கப்படவில்லை என்று சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் அரசாங்கத்தின் மீது தானே தவறு. எது எதற்கோ மூத்த வழக்கறிஞர்களை வைக்கிறார்.

இது மிகப்பெரிய பிரச்சினை. அந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் அம்மா அரசு கொண்டு வந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு இதை நிறைவேற்றக்கூடாது என்ற அடிப்படையில் மூத்த வழக்கறிஞரை வைத்து நீதிமன்றத்தில் வாதாடாத காரணத்தினால் இப்படிப்பட்ட நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

கேள்வி:- சரியான முறையில் தான் கையாண்டு உள்ளோம் என்று சொல்கிறார்களே?

பதில்:- எங்கே சரியான முறையில் கையாண்டு உள்ளார்கள்? கோட்டை விட்டு வந்துள்ளார்கள். இன்றைய தினம் எல்லா அரசாங்கத்திற்கும் தெரியும்? யார் ஆட்சிக்கு வந்தாலும் அது அதிகாரிகள் தான். எங்களுக்கும் அதிகாரிகள் தான். அவர்களுக்கும் அதே அதிகாரிகள் தான். யாரும் மாறவில்லை. ஆகவே முறையாக மூத்த வழக்கறிஞரை வைத்து தான் தயார் செய்து இந்த இட ஒதுக்கீட்டை அறிவித்தோம்.

இந்த இட ஒதுக்கீடு அடிப்படையில் முழு தரவுகளை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்ய வேண்டும். மேல்முறையீடு செய்யும்போது அதை வைத்துதான் உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை விசாரிக்கும். இவர்கள் கீழேயே தரவுகளை சரியாக கொடுக்கவில்லை. இதை நான் சொல்லவில்லை. இந்த வழக்கை நடத்திய மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதியரசரே சொல்லி விட்டார். இந்த அரசாங்கம் சரியாக கையாளவில்லை.

வழக்கறிஞர் சரியான தரவுகளை தாக்கல் செய்யவில்லை என்று அப்பொழுதே தெரிவித்து விட்டார். ஒரு வழக்கு நடக்கிறது என்றால் அதற்கு உண்டான அந்த விவரங்களை எல்லாம் கொடுத்தால் தான் அந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சரியான ரெக்கார்டை கொடுக்காத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.


இந்த வழக்கை நடத்திய மதுரை உயர்நீதிமன்ற நீதியரசர் தெரிவித்த கருத்து இந்த வழக்குக்கு தேவையான தரவுகள் வழக்கறிஞர்களால் சமர்ப்பிக்கப்படவில்லை. இது யார் மேல் தப்பு. இந்த அரசாங்கம் வழக்கறிஞர் செய்த தவறு. கழகம் கொண்டு வந்த திட்டம் என்பதற்காக அப்படியே கிடப்பில் போட்டு ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இவர்கள் நீதிமன்றத்தில் சரியாக நடத்தவில்லை.

இப்பொழுது அமைச்சர் துரைமுருகன் சொல்கிறார். மூத்த வழக்கறிஞரை வைத்து இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்வோம் என்கிறார்.

அப்போதே மூத்த வழக்கறிஞரை வைத்திருந்தால் இந்த பிரச்சினைக்கு இடம் இல்லாமல் போயிருக்கும். நீதியும் கிடைத்திருக்கும். இவையெல்லாம் வேண்டுமென்றே திட்டமிட்டு இதை ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அதற்கு முறையாக ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்ல

கேள்வி:- அமைச்சர் ராஜ கண்ணப்பன் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளாரே?

பதில்: – இதை ஒரு கண்துடைப்பாகத் தான் பார்க்கிறோம். இன்றைக்கு எப்பொழுது பார்த்தாலும் சமூக நீதிக்கு பாடுபடுகிறோம் என்று சொல்கிறார்கள். இப்போது உள்ள முதலமைச்சர் ஸ்டாலினும், தி.மு.க.வினரும் சமூக நீதியை பாதுகாப்பது இது தானா?, ஒரு பட்டியல் இனத்தை சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள வட்டார வளர்ச்சி அதிகாரியை ஒரு அமைச்சர் ஜாதியை சொல்லி திட்டுகிறார்.

அவர் மனம் நொந்து ஊடகத்தின் வாயிலாக தன்னுடைய மன அழுத்தத்தை வெளியே தெரிவிக்கிறார். இதற்கு பரிகாரமாக அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கி இருந்தால் பரவாயில்லை. ஆனால் ஸ்டாலின் அடிக்கடி சொல்வது சமூக நீதியை பாதுகாப்பது? எங்கே சமூகநீதியை தமிழ்நாட்டில் பாதுகாத்து உள்ளார்கள்? இதில் வேறு இந்தியா முழுவதும் சமூகநீதியை பாதுகாக்கிறாராமாம்.

இங்கேயே பாதுகாக்க முடியாத முதலமைச்சர் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கிறாராம்? சூப்பர் முதல்வர் என்று சொல்லிக் கொள்கிறார். எங்கே இவர் சூப்பர் முதலமைச்சர்? இன்றைக்கு பட்டியலின மக்களை அமைச்சர் ஜாதி பெயரை சொல்லி தரக்குறைவாக திட்டுகிறார். இவரா சூப்பர் முதலமைச்சர்? இதுவா நிர்வாகம்?. அதுமட்டுமல்லாமல் மூன்று, நான்கு மாதமாக தொடர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் தமிழ்நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.

பத்திரிகையிலும், தொலைக்காட்சிகளிலும் வந்த செய்தியை தான் நான் சொல்கிறேன். ஊடகத்துறையினர் கொடுத்த ஆதாரத்தின் அடிப்படையில் தான் இந்த செய்தியை சொல்கிறேன். எங்கே பார்த்தாலும் இந்த நான்கு மாத காலமாக தொடர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை தடுக்க தவறிவிட்டது இந்த அரசாங்கம். ஒரு கையாலாகாத அரசாங்கமாக தான் மக்கள் பார்க்கிறார்கள்.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அரசு செயலிழந்து இருக்கிறது. சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. எங்கே பார்த்தாலும் போதை பொருள் தாராளமாக கிடைக்கிறது. இன்றைக்கு டி.ஜி.பியே கல்லூரிக்கு வெளியில் விற்கிறார்கள்.

கடுமையாக நடவடிக்கை எடுக்குமாறு சொல்கிறார். ஆகவே இப்படிப்பட்ட நிலைமை தான் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. 10 மாத கால ஆட்சியில் மக்கள் எதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி:- சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று அறிக்கையிலே போட்டு கொள்கிறாரே?

பதில்:- இதற்கு ஏற்கனவே பலமுறை பதில் சொல்லி விட்டேன். அவர் கழகத்தின் உறுப்பினராக இல்லை. அதனால் இந்த கேள்விக்கு அவசியமில்லை

கேள்வி:- இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுப்பீர்களா?

பதில்:- ஏற்கனவே காவல் ஆணையாளரிடம் புகார் கொடுத்துள்ளோம். பத்திரிகையாளர்கள் அனைவருக்குமே தெரியும். ஏற்கனவே பேட்டி அளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

காவல்துறை ஆணையாளர் தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சசிகலா கட்சியிலேயே இல்லை.இல்லாதவரை பற்றி ஏன் பேச வேண்டும். விறுவிறுப்பான செய்தி வேண்டுமென்று, எப்பொழுது பார்த்தாலும் இந்த கேள்வியை தவறாமல் கேட்கிறீர்கள்

கேள்வி:- தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதா?

பதில்:- ஆமாம், சரியாக கையாளவில்லை என்றால் அதற்கும் ஆபத்து ஏற்படும். இன்றைக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு சரியாக தரவுகள் செய்யவில்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளது. சரியாக தரவுகள் தாக்கல் செய்யவில்லை என்றால் அதற்கும் இடையூறு வரும்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.