தற்போதைய செய்திகள் மற்றவை

சொத்து வரியா? சொத்துக்களை பறிக்கும் வரியா?முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி

மதுரை

தி.மு.க. அரசு விதித்திருப்பது சொத்து வரியா? அல்லது சொத்துக்களை பறிக்கும் வரியா? என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் செம்மேரிஸ் அருகே நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.டி.ஜெயபாலன் தலைமை வகித்தார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் சேது, ஆறுமுகம், விஜயகுமார், எம்.ஏ.ஷங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சிக்கு வந்த 11 மாதங்களில் விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. இதை கட்டுப்படுத்த முடியாமல் விடியா அரசு மெத்தன போக்கை கடைபிடித்து வருவதால் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். தற்போது மக்களுக்கு மேலும் ஒரு இடியாக

சொத்து வரியை 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை திமுக அரசு உயர்த்தியுளளது. இதன் மூலம் அனைத்து மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. அரசு விதித்திருப்பது சொத்து வரியா?

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தற்போது சொத்து வரியை உயர்த்தி அறிவித்து உள்ளார்கள். இதன் மூலம் ஆட்சியாளர்கள் சொல்லாததை இன்னமும் செய்ய போகிறார்கள் என்று மக்கள் பீதியில் உள்ளனர்.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர் கெட்டு போயுள்ளது. அம்மா ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு மிக்க மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டது. தற்போது இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் வந்து விடுமோ என்று பெண்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால் பத்திரிகைகளில் அரசின் சார்பில் பல லட்சங்களை வாரி இறைத்து தங்கள் ஆட்சி உத்தமர் ஆட்சி போல ஒரு செயற்கையான விளம்பரத்தை செய்து வருகிறார்கள். உண்மையை ஒருபோதும் மறைக்க முடியாது. நிச்சயம் சொத்து வரியை உயர்த்திய ஆளும் தி.மு.க.வுக்கு வரும் தேர்தல்களில் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் அண்ணாதுரை, அலுவலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாநில இளைஞர் அணி இணை செயலாளர் ரபிக், மாநில மாணவர் அணி இணை செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.