தி.மு.க. ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடுவது உறுதி – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை
திராவிட மாடலின் தவறான கொள்கையால் அனைத்து விலைகளும் உயர்ந்து விட்டது. தி.மு.க. ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலை நிச்சயம் வரும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
ெசன்னை ராயபுரத்தில் நேற்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்வுத் தாள் அவுட் ஆகிவிட்டது. இதற்கு கல்வி அமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும். இது இந்த ஆட்சியின் கையாலாகாத தனத்தை தான் காட்டுகிறது.
கேள்வி:- இது தொடர்பாக கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதே?
பதில்:- கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுப்பது என்பது இதற்கு முற்றுப்புள்ளி கிடையாது. இது தொடர்கதையாகி விட்டது. கல்வியில் இந்த அளவுக்கு நிர்வாக சீர்கேடு என்றால், இதைவிட மோசமான நிர்வாகம் இந்தியாவிலேயே எங்கும் இருக்க முடியாது. ஒரு மாவட்ட கல்வி அலுவலரை இதற்கு பலிகடா ஆக்குவதைவிட சம்பந்தப்பட்ட அமைச்சர் தான் இதற்கு முழு
பொறுப்பேற்ற வேண்டும்.
கேள்வி:- பெண் கவுன்சிலர்களின் கணவர்களின் அத்துமீறல், மாமூல் வசூல் தொடர்கதையாக உள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?
பதில்:- திராவிட மாடல் என்பது சிறப்பான மாடல். ஆனால் இந்த ஆட்சிக்கு இது பொருந்தாது. இந்த ஆட்சி இதனை கையில்
எடுத்துக் கொண்டது சமூக நீதி, சமத்துவம். சமூகம், கல்வி, பொருளாதாரம் இந்த மூன்று நிலைகளில் தமிழக மக்களை உயர்த்த வேண்டும் என்பதுதான் திராவிட மாடல். ஆனால் இன்றைக்கு எப்படி உள்ளது? இலங்கையில் தவறான பொருளாதார கொள்கையால் அனைத்து விலைகளும் ஏறி விட்டது. மக்கள் கிளர்த்தெழுந்து விட்டார்கள்.
இங்கும் விலைவாசி உயர்வு போராட்டம் நடக்கிறது. சட்டம்- ஒழுங்கு கெட்டு விட்டது. அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லை. ஆளும் கட்சியின் அதிகார துஷ்பிரயோகம், யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை. இதுபோன்ற நிலைமை தொடர்ந்தால் மக்களே இந்த ஆட்சிக்கு எதிராக போராடும் நிலை கண்டிப்பாக ஏற்படும்.
கேள்வி:- பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்துள்ளது. கேஸ் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதே?
பதில்:- பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் இருக்கும்போது மத்திய அரசு விலையை குறைத்தது. ஆனால் மாநில அரசு விலையை குறைக்கவில்லை. விலை குறைத்திருந்தால் பெரிய சுமை குறைந்திருக்கும்.
இதனை நாங்கள் சொல்லவில்லை. லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்போது ஏன் இங்கு
குறைக்கவில்லை? இந்த விலையை குறைப்பதற்கு வக்கில்லை. துப்பில்லை இந்த விடியா அரசு கேஸ் மானியம் 100 ரூபாய் தருவதாக சொன்னார்கள்.
யாருக்காவது அளித்தார்களா? தேர்தல் வாக்குறுதியில் கொரோனா குறையும்போது தமிழகத்தில் பொருளாதாரம் உயரும்போது சொத்து வரியை ரத்து செய்வோம் என்றார்கள். இப்போது கொரோனா குறைந்துள்ளது. ஏன் சொத்து வரியை ஏற்றினீர்கள்? இதனை கண்டித்து தான் கழகத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது.
அன்றைக்கு ஸ்டாலின் சொத்து வரியா, சொத்தை அபகரிக்கின்ற வரியா? என்றார். இதைத்தான் பொதுமக்கள் இப்போது திருப்பி கேட்கிறார்கள். பொருளாதார நிபுணர்களை போட்டீர்கள். என்ன அறிக்கை அளித்தார்கள்? அவர்களுக்கு அரசு சார்பில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது. அவர்களுக்கு எவ்வளவு பணம் செலவானது? வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள்.
இந்த குழுவை நியமித்து என்ன பலன் கிடைத்தது. அரசுக்கு வீண் செலவு தான் இது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பொருளாதார வல்லுனரை போட்டா ஆட்சியை நடத்தினார். அம்மா அவர்கள் பொருளாதார வல்லுநரை வைத்தா ஆட்சியை நடத்தினார்? மக்களின் கருத்தை, நாடித் துடிப்பை தெரிந்தவர்களை தான் நாம் தலைவர்களாக கருத முடியும்.
அப்படி மக்களின் துடிப்ைப அறிந்து செயல்பட்டவர்கள்தான் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மாவும். ஆனால் இவர்களுக்கு மக்களின் நாடி துடிப்பை அறியும் பக்குவம் இல்லை. உணர்வும் இல்லை. உணர்வும், பக்குவமும் இல்லாதவரிடம் என்ன எதிர்பார்க்க முடியும். இது வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பது நிச்சயம்.
தாலிக்கு தங்கம் திட்டத்தில் 14 லட்சம் பேர் பயன்பெற்றார்கள். இப்போது என்ன நிலைமை? ஒரு உன்னதமான திட்டத்தை குளோஸ் செய்துவிட்டு பெண்களின் வயிற்றெரிச்சலை வாங்கி கட்டிக் கொண்டுள்ளது இந்த விடியா அரசு.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.