சொத்து வரி உயர்வை திரும்ப பெறும் வரை ஆர்ப்பாட்டம் தொடரும் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

தேனி,
தி.மு.க. அரசு உயர்த்தியுள்ள சொத்து வரியை திரும்ப பெறும் வரை ஆர்ப்பாட்டம் தொடரும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக கூறினார்.
தி.மு.க. அரசு அறிவித்துள்ள சொத்து வரி உயர்வை கண்டித்து தேனியில் மாவட்ட கழகம் சார்பில் இன்று நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பொன்னுப்பிள்ளை தலைமை தாங்கினார்.
மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் முன்னிலை வகித்தார். ஒன்றிய கழக செயலாளர்கள் பெரியகுளம் செல்லமுத்து, ஆண்டிபட்டி லோகிராஜன், நகர கழக செயலாளர்கள் தேனி கிருஷ்ணகுமார், போடி பழனிராஜ், மார்க்கையன்கோட்டை பேரூர் செயலாளர் அகிலன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ப்ரிதாநடேஷ், பொதுக்குழு உறுப்பினர் சேட் பா.அருணாசலம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
இக்கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கழகத்தை 1972-ல் தொடங்கினார். 1977-ல் தமிழகத்தின் முதல்வராகி தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்தார். 1991-ல் புரட்சித்தலைவி அம்மா தமிழகத்தின் முதல்வராகி 2006 வரை சுமார் 16 ஆண்டுகள் பதவி வகித்தார். 2016-லிருந்து 4 ஆண்டுகள் அம்மாவுடைய அரசு என மொத்தம் 30 ஆண்டுகள் தமிழகத்தை கழக அரசு ஆண்டுள்ளது.
இந்த பெருமையை பெற்று தந்தவர்கள் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியுமே ஆகும். நாட்டின் முன்னேற்றத்திற்கும், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும் சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவதிலும் கழக ஆட்சி சிறப்பாக செயல்பட்டுள்ளது.
ஆனால் இன்றைக்கு நாம் ஒரு விபத்தின் காரணமாக, சோர்ந்து போயிருந்த காரணத்தினால் தோல்வியை தழுவியுள்ளோம். நாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் தோல்வியை தவிர்த்திருக்கலாம். ஆனால் சமயம் பார்த்து தி.மு.க .நமது வெற்றியை பறித்து விட்டது.
தி.மு.க.வினர் பொய்யான பல வாக்குறுதிகளை தந்தார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல 505 வாக்குறுதிகளை தந்தார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தட்டுத் தடுமாறி ஓர் ஆண்டாகியும் நிறைவேற்ற முடியாத அரசாக தி.மு.க. விளங்கி கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் தி.மு.க. வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள்.
ஆட்சிக்கு வந்தால் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நிர்வாக திறமை இருக்காது என்று சொன்னோம். அவற்றையெல்லாம் மீறி மக்கள் தி.மு.க.வுக்கு வாக்களித்தனர். தி.மு.க. ஆட்சியில் துர்பாக்கிய சூழலில் தமிழகம் வீற்றிருக்கிறது. புரட்சித்தலைவி அம்மா கொண்டு வந்த மக்கள் நல திட்டங்களான தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள்.
கிராம பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு உடனடி மருத்துவம் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்ட 2000 அம்மா மினி கிளினிக்குகளை மூடியுள்ளனர். சொன்ன வாக்குறுதிகளை காப்பாற்றினீர்களா என்றால் அதுவும் இல்லை.
நீட் தேர்வை ரத்து செய்வது தான் பதவியேற்றவுடன் போடும் முதல் கையெழுத்து என முதல்வர் ஸ்டாலின் சொன்னார். ஆனால் முடியவில்லை. நாம் நீட் தேர்வை ரத்து செய்ய என்னென்ன வழிமுறைகளை செய்தோமோ அதை தான் செய்தார்கள். இந்த ஆட்சியை ஏன் கொண்டு வந்தோம் என மக்கள் நினைத்து வருத்தப்படுகிற சூழல் உருவாகியிருக்கிறது.
மகளிருக்கு உரிமை தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று சொல்லி தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகிறது. ஆனால் தரவில்லை. தி.மு.க. ஆட்சி மீது இன்றைக்கு மக்கள், தாய்மார்கள் மிகப் பெரிய கோபத்தில் உள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பை கழக ஆட்சியில் 7 ஆண்டுகள் கொடுத்தோம்.
தரமான பொருட்களை வழங்கினோம். பரிசு தொகையாக முதலில் ரூ.1000, அடுத்து ரூ.2500 வழங்கினோம். தி.மு.க. ஆட்சியில் இந்த ஆண்டு எந்த பரிசு தொகையும் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் கொடுக்கப்பட்ட பொருட்களும் தரமானதாக இல்லை. இப்படி ஒரு கேடுகெட்ட ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது.
கழக ஆட்சியில் 10 ஆண்டு காலம் மின்சார தட்டுப்பாடு இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்கியது. ஆனால் தற்போது பாதி கரண்ட் தான் வருகிறது. அறிவிக்கப்படாத மின்வெட்டு தமிழகத்தில் இருக்கிறது. இது தான் இன்றைய தமிழகத்தின் நிலைமை. கழக ஆட்சியில் 10 ஆண்டுகளாக மக்களை துன்புறுத்தக் கூடாது எனவும், மக்கள் மகிழ்ச்சியாக, மனநிறைவாக வாழ வேண்டும் என எந்த வரியையும் உயர்த்தியதும் இல்லை.
புதிதாக போட்டதும் இல்லை. இன்று நிலைமை தலைகீழாக உள்ளது. 150 சதவிகித வரி உயர்த்தப்பட்டுள்ளது. யாருமே கட்ட முடியாத நிலை உள்ளது. இவையெல்லாம் தமிழக மக்கள் மீது திணிக்கப்படுகிற வன்கொடுமையாகும். இந்த வன்கொடுமை ஆட்சி நடத்துகின்ற தி.மு.க. அரசை எதிர்த்து தான் 5-ந்தேதி (இன்று) மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். இந்த ஆர்ப்பாட்டம் தமிழகத்தையே உலுக்கி எடுக்கின்ற ஆர்ப்பாட்டமாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக தி.மு.க. அரசு மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 150 சதவிகித சொத்து வரி உயர்வை ரத்து செய்கின்ற ஆர்ப்பாட்டமாக இருக்கும். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேனியே குலுங்கும் அளவிற்கு கழக தொண்டர்கள், பொதுமக்கள் திரள வேண்டும். மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமான மாவட்டமாக தேனி மாவட்டம் திகழ வேண்டும்.
தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்தாலும் அந்த அதிகார வர்க்கத்தை எதிர்த்து உள்ளாட்சி தேர்தலில் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது கழகத்தை அசைத்து பார்ப்பதற்கு எந்த கட்சிக்கும் தெம்பும், திராணியும் இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது.
தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ள 150 சதவிகித சொத்து வரியை எதிர்த்து நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் சொத்து வரி உயர்வை தி.மு.க. அரசு வாபஸ் வாங்கும் வரை தொடரும், தொடரும்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
முடிவில் பழனிசெட்டிபட்டி பேரூர் செயலாளர் தீபன் சக்கரவர்த்தி நன்றி கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சோலைராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் டி.டி.சிவக்குமார், நகர, ஒன்றிய, பேரூர், சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.