தற்போதைய செய்திகள்

நாட்டு மக்களுக்கு ஸ்டாலின் பட்டை நாம் போட்டு விட்டார் – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் சாட்டையடி

திண்டுக்கல்

பத்து மாத தி.மு.க. ஆட்சியால் எந்த நன்மையும் இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு ஸ்டாலின் பட்டை நாமம் போட்டு விட்டார் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.

சொத்து வரியை உயர்த்திய மக்கள் விரோத தி.மு.க. அரசை கண்டித்து திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட கழகம் சார்பில் ஒட்டன்சத்திரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் என்.பி.நடராஜ், வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கழக அமைப்பு செயலாளர் வி.மருதராஜ், கழக அம்மா பேரவை மாநில இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம், நிலக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் சுப்புரத்தினம், கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் குப்புசாமி, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-

தி.மு.க ஆட்சியில் கடந்த 10 மாத கால ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன? இந்த ஆட்சியில் செய்த சாதனைகள் என்னவென்றால் திருப்பதி வெங்கடாஜலபதி நெற்றியில் இருக்கிற பட்டை நாமம் தான் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இது தான் உண்மை. வேறு எந்த நன்மையும் மக்களுக்கு கிடைக்கவில்லை.

ஊடகங்கள், பத்திரிகைகள் அனைத்திலும் ஸ்டாலின் தான் வந்து கொண்டு இருக்கிறார். வேறு எந்த செய்திகள் இருக்கிறதா என்றால் கிடையாது. அதை திறந்தார், இதை திறந்தார் எனதான் செய்தி வருகிறது. ஆனால், கழக ஆட்சியில் பணிகளை மேற்கொண்டால் இதுவெல்லாம் நாடகம் என ஸ்டாலின் கூறினார்.

கழக ஆட்சியில் சொத்து வரி விதித்த போது இது மக்களை பாதிக்கும் என நீலிக் கண்ணீர் வடித்தனர். 2018-ம் வருடம் வரி விதித்த சொத்து வரியை நீக்கி விட்டு பணம் திருப்பி செலுத்தப்பட்டது. தற்போது தி.மு.க ஆட்சியில் 150 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது.

கல்லூரிகளுக்கு 100 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. வணிக வரி நிறுவனங்களுக்கு 150 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு வரி உயர்த்த சொல்லியதாக, மக்களை ஏமாற்றுகின்றனர். வரி உயர்வினால் பணவீக்கம், விலை உயர்வு ஏற்பட்டு அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள்,

கடந்த 10 வருட கால கழக ஆட்சியில் சொத்து வரியோ, விலைவாசி உயர்வோ ஏற்றவில்லை. வரி விதிப்பதற்காக ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால், அம்மா ஆட்சியில் முதலமைச்சர் எந்த வரியையும் விதிக்க வேண்டாம் என அந்த குழுவுக்கு அறிவுறுத்தினார்.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு 150 சதவீதம் வரை வரியை உயர்த்தி இருக்கிறார்கள் என்று சொன்னால் மக்களை மடையர்களாக நினைத்து தி.மு.க மோசமான ஆட்சி நடத்தி வருகிறது என்பதை காட்டுகிறது.

கடந்த 10 மாத கால தி.மு.க ஆட்சியை பற்றி சட்டசபையில் கழக ஒருங்கிணைப்பாளரும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும் பேசுகையில் அம்மா கொண்டுவந்த தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக், நீட் தேர்வுக்கு விலக்கு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, கூட்டுறவு வங்கிகளில் வைத்த நகைக்கடன்கள் தள்ளுபடி, மாதத்திற்கு ஒருமுறை மின் கணக்கெடுப்பு,

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துதல் இவ்வாறு தி.மு.க கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லையென ஸ்டாலினிடம் நேருக்கு நேர் கேட்டார்கள். ஆனால் அதற்கு அவர் சரிவர பதில் கூறவில்லை.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என தினந்தோறும் தி.மு.க வின் கொடுமையான ஆட்சியில் நடைபெறுகிறது. இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தி.மு.க வினர் தான் என ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர். இவற்றை எல்லாம் மறைப்பதற்காக மக்களுக்கு சேவை செய்வது போல் நாடகமாடுகிறார்.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க விற்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மீது பொய் வழக்கு போடுகின்றனர். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக, நீதியாக நடந்ததா என்றால் இல்லை. ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றுள்ளனர்.

தி.மு.க.விற்காக உழைத்தவர்களுக்கு சீட்டு வழங்கப்படவில்லை. வெளியூர்களிலிருந்து வந்தவர்களை பணம் வைத்திருப்பவர்களே வேட்பாளர்கள் என அறிவித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இரு தி.மு.க அமைச்சர்களும் தில்லு, முல்லு செய்து வெற்றி பெற்றுள்ளனர்.

எம்.எல்.ஏ தேர்தலில் ஒட்டன்சத்திரத்தில் ரூ.2000 வரை கொடுத்துள்ளனர். ஒட்டன்சத்திரம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் மறு தேர்தல் வைத்தால் கழகம் மகத்தான வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. சொத்து வரி உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும். மக்கள் வயிற்றில் அடிக்கின்ற தி.மு.க ஆட்சி ஒழிவதற்கு, அழிவதற்கு கழக நிர்வாகிகள் சபதம் ஏற்று உறுதிமொழி எடுப்போம்.

இவ்வாறு திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.