ஏழை பெண்களுக்கு தி.மு.க. அரசு அநீதி – எதிர்க்கட்சி தலைவர் வேதனை

திருச்சி
தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்து ஏழை பெண்களுக்கு தி.மு.க. அரசு அநீதி இழைத்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
சொத்து வரியை உயர்த்திய மக்கள் விரோத தி.மு.க. அரசை கண்டித்து திருச்சியில் ஒருங்கிணைந்த மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் பல்வேறு திட்டங்களை கைவிட்டு விட்டனர். பல லட்சம் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்கள் திருமண வயதை எட்டும் போது பொருளாதாரம் காரணமாக அந்த பெண்ணுடைய திருமணம் தடையாகிறது. அந்த தடையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதற்காக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் திருமண உதவி திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.
முதலில் தாலிக்கு 4 கிராம் என்று அறிவித்தார். திருமண உதவித்தொகையாக ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என்று அறிவித்தார். பிறகு தேர்தல் வந்தபொழுது அம்மா அவர்கள் தேர்தல் அறிக்கையில் மீண்டும் நான் முதலமைச்சராக ஆனவுடனே 4 கிராம் தங்கத்தை எட்டு கிராமாக உயருத்தி தருவதாக அறிவித்தார்.
துரதிருஷ்டவசமாக அம்மா நம்மை விட்டு பிரிந்தாலும், அவர் கொடுத்த வாக்குறுதியின்படி அம்மாவின் அரசு 4 கிராம் தங்கத்தை 8 கிராமாக உயர்த்தி வழங்கியது. இந்த திட்டத்தால் பல லட்சக்கணக்கான ஏழை பெண்களுக்கு திருமணம் நடைபெற்றது. இன்றைக்கு லட்சக்கணக்கான குடும்பத்தில் விளக்கேற்றிய அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம்.
அந்த திட்டத்தையும் கைவிட்டு விட்டார்கள். இது ஏழை குடும்பத்தில் பிறந்த ஏழை பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கத்தின் மூலமாகவும், திருமண உதவித்தொகையின் மூலமாகவும் 90 ஆயிரம் ரூபாய் அந்த ஏழை குடும்ப பெண்களுக்கு திருமணம் ஆகும் பொழுது கிடைக்கிறது.
அதுமட்டுமல்லாமல் பெண்களின் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவும் அம்மா அவர்கள் இந்த திட்டத்தை கொண்டு வந்தார். இதனால் பெண்களின் கல்வி கற்கும் நிலை உயர்ந்தது. நாட்டிலேயே அதிக அளவில் பெண்கள் உயர்கல்வி கற்கும் மாநிலம் தமிழகம் என்ற நிலையை எட்டியுள்ளது 2011-ல் தி.மு.க ஆட்சியில் இருக்கின்ற பொழுது நூற்றுக்கு 34 பேர் அன்றைக்கு உயர்க்கல்வி படித்து வந்தார்கள்.
அம்மா கொண்டு வந்த இந்த அற்புதமான திட்டம் காரணமாக உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை நூற்றுக்கு 52 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவில் உயர்கல்வி படிக்கும் மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை பெற்றிருக்கிறோம்.
இதை எல்லாம் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இத்திட்டத்தையெல்லாம் தி.மு.க அரசாங்கம் வேண்டுமென்றே திட்டமிட்டு நிறுத்தி வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
குடிசையிலே வாழ்கின்ற ஏழை- எளிய மாணவ-மாணவிகள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் குழந்தைகளெல்லாம் மடிகணினி வாங்குவது ஒரு கனவாக தான் எண்ணி கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மடிகணினி கிடைப்பது கானல் நீராக இருந்தது.
இதை அம்மாவுடைய கவனத்திற்கு எடுத்து சென்றதன் பயனாக அம்மாவுடைய தொலைநோக்கு சிந்தனையோடு தரமான கல்வி நமது ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக, மடிகணினி எனும் அற்புதமான திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றியது அம்மாவுடைய அரசாங்கம்.
தமிழ்நாட்டில் 52 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு மடிகணினி கொடுத்திருக்கின்றோம். ஒரு மடிகணினி 12,000 ரூபாய். தொழில்நுட்பக் கல்வி, தரமான கல்வி பெறுவதற்கு மடிகணினி அவசியம். இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களால் இன்றைக்கு தமிழக மாணவர்கள் உலகத்தில் எங்கு சென்றாலும் வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலையை உருவாக்கி தந்த அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம்.
அந்த திட்டத்தையும் முடக்கப் பார்க்கிறார்கள். இதையும் நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். ஏழைகளை பற்றி கவலைப்படாத ஒரு அரசாங்கம் என்று சொன்னால் அது ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற தமிழ்நாடு அரசாங்கம் தான்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.