அம்மா அரசு மீது தி.மு.க. வீண் பழி-ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி
நேற்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைய தினம் (நேற்று) சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் வந்தது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு சம்பந்தமாக கவன ஈர்ப்பு வந்தது. இந்த கவன ஈர்ப்பு தொடர்பாக முதல்வர் பதில் அளிக்கும் போது, முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் அவசரமாக இந்த 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்து முறையாக அவர்கள் அதனை நிறைவேற்றவில்லை என்ற ஒரு தவறான செய்தியை சட்டமன்றத்திலே பதிவு செய்திருக்கிறார்.
கழகத்தை பொறுத்தவரையில் எல்லா வகுப்பை சேர்ந்தவர்களுக்கும் சமமாக பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும்
என்பது தான் புரட்சித்தலைவர் காலத்திலிருந்து, அம்மா காலத்திலிருந்து, அம்மா மறைவுக்கு பிறகும் நாங்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு 26.2.2021 அன்று சட்டமன்றத்திலே சட்டம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து பல பேர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்கள். அப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து விட்டது.
வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போதே வழக்கறிஞர் போதிய ஆதாரங்களை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்படவில்லை. அரசு மூத்த வழக்கறிஞரை வைத்து வாதாடவில்லை. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அம்பா சங்கர் ஆணையத்தினுடைய எந்த தகவல் எதையும் தாக்கல் செய்யவில்லை.
அதோடு அம்மாவின் அரசு ஜாதி வாரியாக கணக்கெடுப்பு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் குலசேகரன் தலைமையில் ஒரு ஆணையம் ஏற்படுத்தப்பட்டு, 6 மாத காலத்திற்குள் இந்த ஆணையம், தமிழகம் முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுத்து அதனை அறிக்கையாக அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையத்தை அமைத்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. ஆட்சியாளர்கள் இந்த ஆணையத்தின் கால அளவை நீடிக்கவில்லை.
நாங்கள் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆணையத்தை அமைத்தோம். அந்த ஆணையம் தொடர்ந்து செயல்பட்டிருந்தால் இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. மதுரை உயர்நீதிமன்றத்தில் சரியான தரவுகளை வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்கவில்லை.
அதனால் இந்த தீர்ப்பு நமக்கு எதிராக வந்தது. இந்த தீர்ப்பை வைத்து தான் உச்சநீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்ய வேண்டும். தி.மு.க. அரசு தான் மேல்முறையீட்டை செய்தது. இப்போது முதல்வர் சொல்கின்ற பதில் நாங்கள் உச்சநீதி மன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடினோம் என்று சொல்கிறார்.
அப்படி என்றால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து வழக்கு நடைபெற்ற போது, ஏன் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடவில்லை. ஏன் முழுமையான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை.
முழுமையான தரவுகள் கொடுக்கவில்லை. வாதத்திற்கு தேவையான ஆதாரங்களை எடுத்து வைக்கவில்லை. இதனால் மதுரை உயர்நீதிமன்றத்திலே அது கிடைக்காமல் போய் விட்டது. 10.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக வந்து விட்டது. அவை அனைத்தையும் மறைத்து இந்த அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு, அம்மா அரசு மீது பழி சுமத்துகிறது.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.