விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது-எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்

விழுப்புரம்
கழக அரசின் திட்டங்களை முடக்கிய தி.மு.க. அரசை கண்டித்து விழுப்புரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டார். அவரது கைதுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம், அம்மா இருசக்கர வாகனம், அம்மா மினி கிளினிக் ஆகிய திட்டங்களை ரத்து செய்த விடியா தி.மு.க. அரசை கண்டித்தும், தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்காதததை கண்டித்தும் விழுப்புரம் மாவட்ட கழகம் சார்பில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கழக மகளிரணி செயலாளருமான பா.வளர்மதி, கழக அமைப்பு செயலாளர் என்.முருகுமாறன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தி.மு.க அரசை கண்டித்து கண்டன உரையாற்றினர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தின் போது விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் உள்பட 1000க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த கழக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் காவல்துறையினர் அவர்கள் கடமையை செய்கின்றனர். இதற்கு நாம் கட்டுப்பட்டு அமைதியாக இருக்க வேண்டும் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டதற்கு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கேள்வி: அ.தி.மு.க அரசு கொண்டு வந்த 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து.
பதில்: இது ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட அரசு பள்ளியிலே படிக்கின்ற மாணவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்.
அதோடு தேர்தல் பற்றி குறிப்பிட்டார்கள். உள்ளாட்சித்துறை பற்றி முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சில கருத்துக்களை தெரிவித்தார். இவை அனைத்தையும் அவை குறிப்பிலிருந்து நீக்கி விட்டார்கள்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முறையாக நடைபெற்றது என்று முதல்வரும், துறை அமைச்சரும் தெரிவித்தனர். நான்
எழுந்து என்னுடைய எடப்பாடி சட்டமன்ற தொகுதியிலே வனவாசி பேரூராட்சியில் தலைவர் தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் 12 வார்டுகள். இதில் 8 வார்டுகளில் அ.தி.மு.க.வை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். ஒருவர் சுயேச்சை, மூன்று பேர் தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.
தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடைபெறும் போது தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் சத்தம் போட்டுக்கொண்டே இருந்தார். உடனே சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று நோட்டீஸ் போர்ட்டில் ஒட்டி தேர்தலை ரத்து செய்து விட்டார்கள். பிறகு நாங்கள் நீதிமன்றம் சென்று உத்தரவை பெற்று தேர்தல் நடத்தி இப்போது
ஒருமனதாக அ.தி.மு.க.வை சேர்ந்தவர் இன்றைக்கு பேரூராட்சி தலைவராக இருக்கிறார்.
அதுபோல நங்கவல்லி பேரூராட்சியில் தலைவர் தேர்தல் நடக்கும் போது, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று நோட்டீஸ் போர்ட்டில் ஒட்டி தேர்தலைத் தள்ளிவைத்து விட்டார்கள். அ.தி.மு.க.வை சேர்ந்த 8 கவுன்சிலர்கள் உள்ளார்கள்.
8 கவுன்சிலர் இருக்கும் போது ஒரு பெண்மணி சேரை தூக்கி மூலையில் போடுகிறார். இதனை வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று ஒத்திவைத்து விட்டார்கள். எங்கு எங்கு எல்லாம் அ.தி.மு.க அதிக இடங்களில் வெற்றிபெற்றதே, அங்கு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தள்ளி வைத்தார்கள்.
பிறகு மீண்டும் நீதிமன்றம் சென்று தேர்தல் வைத்து, தற்போது நாகவல்லியில் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் பேரூராட்சி தலைவராக, துணைத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். கோவை வெள்ளளூரில் எப்படி தேர்தல் நடைபெற்றது என்று ஊடகத்தின் வாயிலாக அனைவருக்கும் தெரியும்.
கடுமையாக வன்முறை நடைபெற்றது. அங்கு வெற்றிபெற்ற அ.தி.மு.க.வை சேர்ந்தவர் தேர்தல் நடக்கும் இடத்திற்கே செல்ல முடியவில்லை. நீதிமன்றம் வரை சென்று உத்தரவை பெற்று, காவல்துறை உதவியுடன் உள்ளே செல்லும்போது காவல்துறையினரை தாக்குகிறார்கள். இதனை அனைத்து தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் பார்த்தோம். இப்படிப்பட்ட அலங்கோல தேர்தல் தான் தி.மு.க ஆட்சியில் நடைபெற்றது.
நான் முதலமைச்சராக இருந்தபோது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இப்படிப்பட்ட நிகழ்வு எங்கும்
நடக்கவில்லை. அமைதியாக தேர்தல் நடைபெற்றது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றது. ஆனால் தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேண்டுமென்றே திட்டமிட்டு, தி.மு.க. அரசு தேர்தல் ஆணையத்தோடு இணைந்து செயல்பட்டது.
தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் கைப்பாவையாக இருந்தது. காவல்துறை அவர்களுக்கு காவல்துறையாக இருந்து அ.தி.மு.க வெற்றிபெற்ற இடங்களில் ஜனநாயக முறைப்படி தலைவர்களை தேர்வு செய்ய முடியாத அவல நிலை இந்த ஆட்சியில் ஏற்பட்டது.
இன்றைய தினம் (நேற்று) முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டுப்பாலியல் பலாத்காரத்தை கண்டித்தும், சொத்து வரி உயர்வை கண்டித்தும் அங்கு ஒரு உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். ஜனநாயக முறைப்படி இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.