தற்போதைய செய்திகள்

கழகத்தின் ஆட்சிக் காலமே விவசாயிகளின் பொற்காலம் – பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பெருமிதம்

சென்னை

கழகத்தின் ஆட்சிக் காலமே விவசாயிகளின் பொற்காலம் என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

சட்டசபையில் நேற்று கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலன், பால்வளம் ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சரும், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.காமராஜ் பேசியதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி விவசாயிகளின் பொற்காலம். அதற்கு காரணம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை தொடர்ந்து அறிவித்துக் கொண்டே இருந்தது அம்மாவின் அரசு. உழவர்களுக்காக வரலாற்று சிறப்பு மிக்க உழவர் பாதுகாப்பு திட்டத்தை தந்தவர் அம்மா அவர்கள்.

இதன்படி முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் ஏற்படுத்தப்பட்டு சுமார் 1 கோடியே 46 லட்சம் நபர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 1 கோடியே 37 லட்சம் என 2 கோடியே 83 லட்சம் நபர்கள் பயனடையும் வகையில் அவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம், திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் விபத்து மரண உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி கருவறை தொடங்கி கடைசி காலம் வரை திட்டங்கள் தந்தவர் அம்மா.

இந்தியாவிலேயே வறட்சிக்கு நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அம்மாவின் அரசு தான். அதேபோல உழவுக்கு மானியம், டீசலுக்கு மானியம், நடவுக்கு மானியம், குறுவை தொகுப்பு, சம்பா தொகுப்பு இவைகள் எல்லாம் வழங்கி விவசாயிகளை பாதுகாத்தவர்கள் அம்மா. எடப்பாடியார் ஆகியோர் தான்.

வறட்சி காலத்தில் பயிர் காப்பீட்டு தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் முன்னரே ஏக்கருக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்கியும், காப்பீட்டு வராத விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கியும் விவசாயிகளை பாதுகாத்த அரசு அம்மாவின் அரசு தான். பயிர் காப்பீடு பெருமளவில் விவசாயிகள் செய்திட அனைத்து நடவடிக்கைகள் மேற்கொண்டதும், பயிர் பாதிக்கப்பட்ட பொழுது அந்த ஆண்டே காப்பீடு கிடைக்க செய்ததும்,

இந்தியாவிலேயே அதிக இழப்பீட்டு தொகை பெற்று தந்ததும் அம்மாவின் அரசு தான். சொட்டு நீர் பாசனத்தை பெருமளவில் பரவலாக்கியவர் அம்மா அவர்கள்.

அத்தோடு கோடை சாகுபடியில் அதிக பரப்பில் பருத்தி, உளுந்து, எள், நிலக்கடலை போன்ற பணப் பயிர்களை சாகுபடி செய்திட வழிவகை செய்ததும் அம்மாவின் அரசு தான். விவசாயிகளின் நீண்ட நாள் கனவான அத்திக்கடவு, அவினாசி திட்டத்தை நிறைவேற்றி தந்தவர் எடப்பாடியார்.

மஞ்சள் சாகுபடி விவசாயிகளுக்காக ஈரோட்டில் வணிக வளாகம் அமைத்து தந்தது அம்மாவின் அரசு. கொரோனா காலத்தில் வியாபாரிகள் பருத்தி கொள்முதல் செய்யாத நேரத்தில் தேசிய பருத்தி கழகம் மூலம் முதல் முறையாக பருத்திக்கு குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயித்து பருத்தி முழுவதும் கொள்முதல் செய்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் சாதனை படைத்தார்.

உளுந்து மற்றும் பாசி பயிறு விலை வீழ்ச்சி அடைந்த பொழுது இந்தியாவிலேயே முதல் முறயைாக இதற்கென குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து இந்த தானியங்களை அரசே கொள்முதல் செய்ததும் அம்மாவின் அரசில் தான். உழவன் என்ற கைப்பேசி செயலியை உருவாக்கி அந்த செயலியின் மூலம் 20 வகையான சேவைகளை பெறவும், விதை, உரம், ஆகியவற்றின் இருப்பு விபரங்களை இருந்த இடத்தில் இருந்தே விவசாயிகள் தெரிந்து கொள்ளவும் வழிவகுத்தது அம்மாவின் அரசு த ான்.

மேட்டூர் அணை வரலாற்றிலேயே ஜூன் 6-ந்தேதியே குறுவை சாகுபடிப்காக தண்ணீரை திறந்தது அம்மா அவர்கள் தான். அதேபோலவே முதன்முதலில் மேட்டூர் அணையை தூர்வாரியது எடப்பாடியார். உணவு தானிய உற்பத்திக்கான இந்திய அரசின் கிரிஷி கர்மான் விருதினை 5 முறை பெற்று சாதனை படைத்தது அம்மா அரசு.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயிகளின் தலைமுறைக்கே வந்த சோதனையை முறியடித்து காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அதை செயல்படுத்தியும் காட்டியவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார். அதற்காக தான் திருவாரூரில் விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் ஒன்று கூடி ‘காவேரி காப்பாளர்’ என்ற பட்டத்தை வழங்கினார்கள்.

தமிழ்நாட்டில் 2012-ம் ஆண்டில் ஆசியாவின் முதல் மீன்வள பல்கலைக்கழகம் நாகப்பட்டினத்திலும், டாக்டர் எம்.ஜி.ஆர். பெயரில் பொன்னேரியில் ஒரு மீன்வள பொறியியல் கல்லூரியும் அம்மா அவர்களால் தொடங்கப்பட்டது. மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் மீன்பிடி துறைமுகங்கள் புதிதாக அமைத்து கொடுத்த அரசும் அம்மாவின் அரசு தான்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய சர்வதேச ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஆயிரம் கோடி மதிப்பில் அம்மாவின் அரசில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியாரால் தொடங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நமது பாரம்பரிய உரிமை. அதை இனிமேல் நடத்த முடியாதோ என்கிற ஒரு சூழ்நிலை வந்தபோது தமிழகம் முழுவதும் மக்கள் தன்னெழுச்சி போராட்டம் கிளர்த்தெழுந்தது.

அந்த வேளையில் அதனை லாவகமாக கையாண்டு ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டு தந்தது முன்னாள் முதமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

இ்வ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. பேசினார்.