சிறப்பு செய்திகள்

நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாக்க நேரடி கொள்முதல் நிலையங்களில் கூடுதல் வசதி

பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வலியுறுத்தல்

சென்னை,

நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாக்க கூடுதல் வசதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வலியுறுத்தினார்.

சட்டசபையில் நேற்று கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலன், பால்வளம் ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சரும், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.காமராஜ் பேசியதாவது:-
வேளாண்மைத்துறை நிதி நிலை அறிக்கையின்போது பல்வேறு அறிவிப்புகளை தந்தார்கள்.

அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மத்திய, மாநில அரசு நிதியிலிருந்து நிறைவேற்றப்படும் என்று கூறினார்கள். மத்திய அரசு நிதி எவ்வளவு, மாநில அரசு நிதி எவ்வளவு? என்பதை அமைச்சர் விளக்க வேண்டும். விளைவிக்கப்படும் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. உதாரணத்திற்கு உங்கள் (தி.மு.க.) தேர்தல் அறிவிப்பில் உள்ள நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.25000-ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4500-ம் வழங்கும் அறிவிப்பு இல்லை.

அனைத்து இடபொருட்களக்கும் விலை ஏற்றதாக உள்ள நிலையில் வேளாண் விளை பொருட்களுக்கு அதற்கேற்றவிலை இல்லாததும், அதற்கான திட்டங்கள் எதுவும் இல்லாததும் ஏமாற்றமளிக்கிறது.
தென்னை விவசாயிகளை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

கொப்பை தேங்காய் விலை சென்ற ஆண்டு இந்த கால கட்டத்தில் ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனை ஆனது. ஆனால் தற்பொழுது ஒரு கிலோ ரூ.87-க்கு தான் விற்பனையாகிறது. இந்த நிலையிலிருந்து தென்னை விவசாயிகளை காப்பாற்ற மத்திய அரசை வலியுறுத்தி கொப்பறை தேங்காய்க்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த டிசம்பர், ஜனவரியில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடை நேரத்தில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. தற்போது அதற்கான அறிவிப்புகள் எதுவும் இல்லை என்பது மிகுந்த ஏமாற்றத்தை தந்திருக்கிறது.

அ.தி.ம.க. ஆட்சி காலத்தில் டிராக்டர், பவர் டில்லர், அறுவடை இயந்திரம் போன்ற கருவிகள் வாங்க பதிவு செய்திருந்தால் மானியத்துடன் வழங்கப்பட்டது. ஆனால் ஓராண்டாக இதற்கான அறிவிப்பு இல்லை. பட்ஜெட்டிலும் அதற்கான அறிவிப்பு இல்லை. மீண்டும் டிராக்டர், பவர் டில்லர் மானியத்தில் வழங்கப்படுமா? கோடை குறுவை சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளிடம் திட்டமிட்டு தவறான தகவல்கள் பரப்பப்பட்டது.

இதனால் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. விவசாயிகள் மனவேதனையில் உள்ளனர். கோடை குறுவை சாகுபடியில் அரசின் நிலைி என்ன? விவசாயிகளுக்கு வறட்சியையும், வெள்ளத்தையும் தாங்கி நல்ல கொள்முதலை தருகின்ற டி.கே.எம். 9 ரக நெல்லை சாகுபடி செய்ய தடை விதித்திருக்கிறீர்கள்.

விவசாயிகளின் நலன் கருதி டி.கே.எம். 9 ரக நெல்லை விவசாயிகள் சாகுபடி செய்வதற்கு அரசு அனுமதிக்க வேண்டும். எங்களுடைய ஆட்சியில் விவசாயத்திற்கு 18 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 9 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை தான் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.

மீண்டும் 24 மணி நேரமும் விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். குடிமராமத்து திட்டம் கைவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படாததால் விவசாயிகளுக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் குடிமராமத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

கடுமையான அளவிற்கு உரத் தட்டுப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் வரையிலும் டி.ஏ.பி. மூட்டை ஒன்றுக்கு ரூ.1800 வரையிலும், விலை உயிர்த்தி விற்பனை செய்யப்பட்டது. எதிர்காலத்தில் உர தட்டுப்பாட்டை போக்கவும், விலை உயர்வை தடுக்கவும் முறையான நடவடிக்கையும், திட்டமும் தேவை.

இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட தொலைக்காட்சிகளில் மாவட்ட அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் 50,000 நெல் மூட்டைகளும், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 10,000 நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதை நாம் அனைவரும் பார்த்தோம். இது ஒரு உதாரணம் தான்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்த நெல், விவசாயிகள் கொண்டு வந்த நெல் என ஒரு லட்சம் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி போனது. எனவே நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு செல்லும் நெல்லை மழையில் நனையாமல் பாதுகாக்க கூடுதல் வசதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் விற்பனை செய்ய ஆன்லைனில் பதிவு செய்ய சொல்லி அலைக்கழிப்பதை உடனே நிறுத்த வேண்டும். முன் பதிவை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலேயே செய்ய நடவடிக்கை எடுக் வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. பேசினார்.