சிறப்பு செய்திகள்

இந்தி மொழி விஷயத்திலும் தி.மு.க. இரட்டை வேடம் -கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

சென்னை

இந்தி மொழி விஷயத்திலும் இரட்டை வேடம் போடும் தி.மு.க.வுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தான், தனது, தமக்கு என்று இல்லாமல் தமிழ், தமிழ்நாடு, தமிழினம் என இமைப்பொழுதும் சோர்வின்றி உழைத்தவர் பேரறிஞர் அண்ணா. ஆனால், அதற்கு நேர்மாறான சூழ்நிலை தமிழ்நாட்டில் இன்று நிலவுகிறது.

தன்னலத்திற்காக மத்திய இளநிலை கல்விக் கழக அங்கீகாரம் பெற்ற பள்ளிகளை துவக்குவது அல்லது அதனை விலைக்கு வாங்குவது, ஆங்கில பெயர்களை வியாபார நிறுவனங்களுக்கு வைப்பது, பிற மாநிலங்களில் வியாபார நிறுவனங்களை துவக்குவது என்ற வரிசையில் தற்போது முதலமைச்சரை பிரபலப்படுத்துவதற்காக இந்தி மொழியை தி.மு.க. அரசு பயன்படுத்தி வருவதாக செய்திகள் வந்துள்ளன.

அண்மையில், மத்திய உள்துறை அமைச்சர், நாடாளுமன்ற ஆட்சிமொழி குழு தலைவர் என்ற முறையில் ஆட்சி மொழி கூட்டத்தில் பேசியபோது, ‘ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி மொழியை பயன்படுத்துங்கள்’ என்று கூறியதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.

இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. பிற மாநிலங்களை சார்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழ்நாடு முதலமைச்சர் “இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்” என்று வீராவேசத்துடன் விமர்சித்தார். ஆனால், இன்று தன்னுடைய அறிவிப்புகளை இந்தி மொழியில் வெளியிடுகின்றார் முதலமைச்சர்.

தன்னலம் என்றவுடன் தடம் மாறுகிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். தமிழ் மொழியை வளர்ப்பது என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும், குறிப்பாக பிறமொழி பேசுபவர்களை தமிழ் கற்றுக் கொள்ள வழிவகை செய்வது, பிற மாநிலங்களில் உள்ள மக்கள் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது,

பிற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பது, தமிழுக்கான இருக்கைகளை தோற்றுவிப்பது, உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை தோற்றுவிப்பது போன்றவை ஆகும்.

ஆனால், தமிழ் மொழியை வளர்க்க வேண்டிய முதலமைச்சர் அதை செய்யாமல், தன்னை வளர்த்து கொள்ளும் பணியில், தன்னை பிரபலப்படுத்தி கொள்ளும் பணியில், இந்தி மொழியை வளர்த்து வருவதாக தகவல்கள் வருகின்றன.

அதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தேசிய தலைவராக பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், குறிப்பாக வட மாநிலங்களில் அவர் புகழ் பரவ வேண்டும் என்பதற்காகவும் சில நடவடிக்கைகள் தி.மு.க.வால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் முதல் கட்டமாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் வெளியிடப்படும்

அறிவிப்புகள் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டு தொல்லியல் துறை இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இந்தி மொழியில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு ஒன்றும் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.

ஒரு பக்கம் இந்தி திணிப்பு என்று கூறி தமிழுக்கு போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் இந்தியில் தி.மு.க. தலைவரை விளம்பரப்படுத்துவது என இரட்டை வேடம் போடுகிறது தி.மு.க.. தன்னை விளம்பரப்படுத்தி கொள்வதற்கு பேரறிஞர் அண்ணா கூறிய இருமொழி கொள்கையில் ஒன்றான ஆங்கிலத்தை பயன்படுத்துவதற்கு தில் ஏன் மும்மொழி கொள்கையில் ஒன்றான இந்தியை தி.மு.க. தலைவர் பயன்படுத்துகிறார் என்று மக்கள் கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள். ஒருவேளை ஊருக்கு தான் உபதேசம் போலும்!

தி.மு.க. அரசின் இந்த இரட்டை வேடத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க.வின் இந்த செயலை பார்க்கும்போது, “பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி, பாமர மக்களை வலையினில் மாட்டி, இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே” என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகள் தான் என் நினைவிற்கு வருகின்றன

தி.மு.க.வின் செயல்பாடுகளை கண்டு மக்கள் பெருத்த ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த ஏமாற்றம், வருங்காலத்தில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் அமர வழிவகுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.