சிறப்பு செய்திகள்

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஆளுநரை குறை கூறுகிறார்கள் – தி.மு.க.வுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலடி

சென்னை,

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சூட்சுமமும், வித்தையும் எங்கே போனது. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் மற்ற கட்சிகளையும், ஆளுநரையும் குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள் என்று தி.மு.க.வுக்கு, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சீமான் திராவிடர் குறித்து பேசியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், உண்மையிலே இது கண்டிக்கத்தக்க விஷயம்.

ஏன் என்றால் திராவிடம் என்ற பெயரில் தான் எங்கள் இயக்கம் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், திராவிடத்தை இழிவுபடுத்தும் வகையிலே எருமை மாட்டுடன் ஒப்பிட்டு சொல்வது என்பது, நிச்சயமாக பகுத்தறிவு உள்ளவர்கள் எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இது பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயம். பகுத்தறிவு கொண்டவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். எனவே அவரை பொறுத்தவரையில் அரசியல் ரீதியாக கருத்துகள் சொல்லாம். ஆனால் ஒரு எருமை மாட்டோடு ஒப்பிட்டு பேசுவது என்பது உண்மையில் திராவிடர்கள் அத்தனை பேர்களையும் கொச்சைப்படுத்துகின்ற, இழிவுபடுத்துகின்ற விஷயமாகத்தான் நாம் இதனை பார்க்க முடியும். எனவே அவருக்கு எங்களது கண்டனத்தை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.

கேள்வி: நீட் தொடர்பு அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்போவதாகத் தகவல் உள்ளதே.

பதில்: எப்போது பார்த்தாலும் அனைத்து கட்சி கூட்டம் தான். ஒரு தீர்வு என்ன. ஆட்சியாளர்கள் இதற்கு ஏற்ற வகையில் தீர்க்கமாக சிந்தித்து நடவடிக்கை எடுப்பது தான் ஆட்சியாளர்களின் கடமையாக இருக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு மு.க.ஸ்டாலினும், உதயநிதியும் நீட் தேர்வினை ஒரே கையெழுத்தில் ரத்து செய்வதற்கான அந்த சூட்சுமமும் வித்தையும் எங்களுக்குத்தான் தெரியும் என்று ஊர் ஊராக சென்று சொன்னார்கள்.

எங்கே போனது அந்த சூட்சுமமும் வித்தையும்? செய்ய வேண்டியது தானே? என்று தமிழக மக்கள் இப்போது இவர்களை கேள்வி கேட்கிறார்கள். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் மற்ற கட்சிகளையும், ஆளுநரையும் குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையிலிருந்து தப்பிக்கவே இவர்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுகிறார்கள்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.