தற்போதைய செய்திகள்

தொழில் துவங்க விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த கூடாது

பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி

வேப்பனஹள்ளி, தளி தொகுதி, ஓசூர் தொகுதிகளில் தொழில் துவங்குவதற்காக விவசாயிகளினுடைய நிலங்களை கையகப்படுத்த கூடாது என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ வலியுறுத்தி உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று தொழில்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சரும், வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்ற மக்களாவர்கள் அத்துடன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி தொகுதி, தளி தொகுதி, ஓசூர் தொகுதி ஆகிய 3 தொகுதிகள் கடல் மட்டத்திலிருந்து அமார் 1,000 மீட்டர் உயரத்தில் இருக்கின்ற காரணத்தால், அப்பகுதிகள் எப்போதும் குளிர்ப் பிரதேசமாகவே இருக்கின்றன.

அப்படி குளிர் பிரதேசமாக இருக்கின்ற அந்த மூன்று தொகுதிகளில் மலை பிரதேசங்களில் விளையக்கூடிய விவசாய விளைபொருட்கள், அது காலிஃபிளவராக இருந்தாலும் சரி, அது சௌசௌவாக இருந்தாலும் சரி, கேரட்டாக இருந்தாலும் சரி, உருளைக்கிழங்காக இருந்தாலும் சரி, அதிகமாக விளையக்கூடிய பகுதிகளாக இருக்கின்றன.

அதுமட்டுமல்ல, பசுமைக்குடில்கள் அமைத்து, அங்கே மலர்களை தயார் செய்கின்றனர். அங்கே கிட்டத்தட்ட 75 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் விவசாயிகள் அந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த பசுமைக் குடில்களில் விளைகின்ற மலர்கள் ஆசியா கண்டத்திற்கு மட்டுமல்லாமல், ஐரோப்பியா கண்டத்திற்கும் கூட ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அப்படி ஏற்றுமதி செய்கின்ற அந்தச் சூழலில், ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட ரூபாய் 200 கோடி அந்நிய வருவாயாக வருகிறது. இப்படி, அந்த விவசாயத்தையே நம்பி கொண்டிருக்கிற அந்த விவசாய பெருமக்கள் அந்த மண்ணையே தன்னுடைய தாயாக நினைத்து வாழ்கின்ற அந்த விவசாயிகளினுடைய நிலங்களை தொழில் துவங்குவதற்காக கையகப்படுத்த வேண்டாம் என்று முதலமைச்சரையும்,, தொழில் துறை அமைச்சரையும் கேட்டுக்கொள்கிறேன்.

நான் இந்த இடத்தில் இதை குறிப்பிடுவதற்கு காரணம், ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டம் தொழில்கள் நிறைந்த மாவட்டம். சிறு தொழில்களில், கிட்டத்தட்ட 5,0000 தொழிற்சாலைகள் இருக்கின்றன.

பெருந்தொழில் என்றால் 100 தொழிற்சாலைகளுக்கு மேல் இருக்கின்றது. ஏற்கனவே கடந்த ஆட்சிக் காலத்தில் நம்முடைய எதிர்க்கட்சி தலைவர் அங்கே மூன்றாவது சிப்காட்டுக்கு ஆயிரம் ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டிருக்கிறது.

அதோடு ஓசூரிலேயிருந்து போடப்பட்டிருக்கிறது. தருமபுரிக்கு செல்கின்ற நான்குவழிப் பாதை இப்போது ஏற்கெனவே நம்முடைய உறுப்பினர் கே.பி.அன்பழகன் கூட அமைச்சரிடம் கேள்வி கேட்டபோது தருமபுரியிலே கடந்த ஆட்சியில் 1,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதிலே 1,200 ஏக்கர் அரசு நிலம். மீதியுள்ள 500 ஏக்கர் மற்றவர்களுக்கு சொந்தமான நிலம். அதை எப்போது நீங்கள் பயன்படுத்துவீர்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

எனவே, ஏற்கனவே வளமாக இருக்கின்ற இந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தொழில் துறையில் வலமாக இருக்கின்ற
கிருஷ்ணாகிரி மாவட்டத்தில் அங்கேயிருக்கின்ற விவசாயிகளையும் நீங்கள் வளமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் விவசாயிகள் ஒரு கோரிக்கை வைத்தார்கள். அங்கே விளைகின்ற மலர்களை ஏற்றுமதி செய்வதற்கு ஒரு ஏல மையம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்று கேட்டார்கள்.

அந்த விவசாயிகளினுடைய கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்டு, அன்றைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமி 20 கோடி ரூபாய் செலவு செய்து, சர்வதேச மலர் ஏல மையத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

அநேகமாக ஆசியா கண்டத்திலேயே அது ஒன்று தான் சர்வதேச அளவிலே நடக்கக்கூடிய ஏல மையமாக இருக்கும். அந்த மையம் ஆன்லைனில் வந்திருக்கிறது.

அவ்வளவு உயர்வான நிலையிலே அங்கே விவசாயம் செய்கின்ற அந்த விவசாய பெருமக்களினுடைய உணர்வுகளை மதித்து, அவர்களை காப்பாற்ற வேண்டுமென்று மீண்டும்
உங்களிடத்திலே கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி பேசினார்.