தற்போதைய செய்திகள்

அரசுக்கு லாபம் ஈட்டுவதற்காக தேயிலை தோட்ட தொழிலாளர்களின் போனசை குறைக்கக்கூடாது

பேரவையில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வேண்டுகோள்

சென்னை

அரசுக்கு லாபம் ஈட்டுவதற்காக தேயிலை தோட்ட தொழிலாளர்களின் போனசை குறைக்கக்கூடாது என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று வனம், சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் குறித்த மானிய கோரிக்கை விவாதத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

மனித விலங்கு மோதலை தவிர்த்து உயிர் இழப்பை தடுப்பதற்கான பணிக்கு இன்றியமையாதவர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் தான். அவர்கள்தான் வனத்தின் கண்கள் என அழைக்கப் படுகிறார்கள் என்பதை வனத்தை பற்றி அறிந்தவர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள்.

தற்போது திண்டுக்கல் கோட்டத்தை பொறுத்தவரை வேட்டை தடுப்பு காவலர்கள் 50 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 11 பேர் மட்டுமே உள்ளனர்.

அம்மாவின் அரசின் போது இருந்த எண்ணிக்கையை விட பாதிக்கு மேல் பணி ஓய்வு பணிமாற்றம் போன்ற காரணத்தினால் இந்த பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்ததால் தான் யானை தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அரசின் செலவினத்தில் மிகவும் அவசியமானது எது என்பதை நிதி ஒதுக்கும் அதிகாரிகளும் அரசும் உணர்ந்து செயல்பட வேண்டும் என கேட்டு கொள்வதோடு, வேட்டை தடுப்பு காவலர்களை உடனே நியமனம் செய்ய உங்களை வேண்டுகிறேன்.

மேலும் அம்மா அவர்களின் அரசு வேட்டை தடுப்பு காவலர்களின் மாதாந்திர தொகுப்பூதியத்தினை கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.6750 யிலிருந்து 10,000, அதன் பின் ரூ 10,000லிருந்து 12500 என உயர்த்தி அவர்களின் அத்தியாவசிய பணியினை அங்கீகரித்து வழங்கியது. தற்போது தடுப்பு காவலர்களின் தன்னலமற்ற

பணியினை மேலும் அங்கீகரிக்கும் முகமாக வேட்டை தடுப்பு காவலர்களின் தொகுதிப்பூதியத்தினை ரூ.12500 லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி தந்து அவர்களின் இடர்படும் வாழ்க்கையிலிருந்து சற்றே இன்பமுறும் வாழ்க்கையாக மாற்றும்படி அரசை கேட்டுக் கொள்கிறேன்.

வன வளங்கள், வன வள ஆதாரங்கள் மற்றும் வன வாழ்விடங்களை பாதுகாக்க வேண்டிய வனத்துறையில் காலி பணியிடங்கள் இருந்து வருகின்றன. இதனால் வனத்துறையில் பணி சுணக்கம் நிலவி வருவதோடு இது வனத்துறைக்கே சவாலாக இருந்து வருகிறது என்பதை 22.4.22 அன்றைய இந்து பத்திரிக்கை கூட கட்டிக் காட்டி உள்ளது.

தற்போது நீங்கள் பத்து ஆண்டுகள் இருந்தீர்களே என்ன செய்தீர்கள் என எங்களை நோக்கி நீங்கள் உங்கள் கேள்வி கணைகளை தொடுக்கலாம். அதற்கும் நான் தயாராக தான் வந்துள்ளேன் என்பதற்கு அம்மா அவர்களின் அரசு பதவியில் இருந்தபோது நியமனம் செய்த பணியாளர்களின் விவரங்களை தருகிறேன்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த 2016 முதல் 2021 வரை 5 ஆண்டுகளில் மட்டும 14 உதவி வன பாதுகாவலர்கள் மற்றும் 154 வன பயிற்றுநர்கள் நேரடி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் 300 வனவர்கள், 726 வன காப்பாளர்கள் 61 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வன காப்பாளர்கள், 564 வன காவலர்கள் 196 மிகை பணியிட தோட்ட காவலர்கள்/ வேட்டை தடுப்பு மிகை பணியிட வனக்காவலர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

தமிழ்நாடு வனத்துறை வரலாற்றில் முதன் முறையாக 190 பெண் வனக்காப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிலும் முதன் முதலாக மூன்றாம் பாலினத்தவர்களும் ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கு வசதி செய்து கொடுக்கப்பட்டதோடு
கேள்வித்தாள்கள் ஆன்லைன் மூலமாக question paper tool software மூலம் தேர்வு நடைபெறுவதற்கு முன்னர் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் தான் கேள்விதாளே நேரடியாக ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு எந்தவித தவறுகளுக்கும் இடம் அளிக்காது தேர்வு நடத்தப்பட்டது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் ஏப்ரல் 20.4.2022 அன்று நம் பாரதப் பிரதமர் மோடி உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சிமாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில் விரைவில் பாரம்பரிய சிகிச்சை பெற வெளிநாட்டவர்களுக்கு ஆயுஷ் விசா வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

எனவே இனி வரும் காலங்களில்நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் மருத்துவ குணம் கொண்ட செடிகளின் உள்நாட்டு தேவையும் ஏற்றுமதிக்கான வாய்ப்பும் அதிகரிக்கும் சூழல் நிலவுவதால், வனத்துறையின் மூலம் அம்மா அவர்களின் ஆட்சியின் போது மருத்துவத் தன்மை வாய்ந்த தாவர இனங்களை கொண்டு பெரும் மருத்துவ தாவரப் பூங்கா அமைக்கும் திட்டம் ரூ.26.64 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது எனவே, மருத்துவ தாவரங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை மீண்டும் மருத்துவ தாவரங்களின் சாகுபடிக்கு மானியம் மற்றும் ஏனைய சலுகைகளை கொடுக்க வேண்டும் என இந்த மாமன்றத்தின் மூலம் இந்த அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த 2021 மானிய கோரிக்கையின் வெளியிட்ட அறிவிப்பில் 12-வது அறிப்பாக அரசுக்கு சொந்தமான வன நிறுவனங்களில் லாபம் ஈட்டுவதற்கான வழிமுறைகள் ஆராயப்படும் என்று அறிவித்து இருந்தீர்கள்.

இதில் தாங்கள் லாபம் ஈட்டுவதாக நினைத்துக் கொண்டு தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்திற்கு நாங்கள் பல்வேறு நிதி நெருக்கடியிலும் வழங்கிய 20 சதவீத போனசை 10 சதவீமாக குறைத்து லாபம் ஈட்ட வழி தேடி உள்ளீர்கள் என்பதனை நினைக்கும் போது சற்றே வருத்தமாக உள்ளது.

எடப்பாடியார் இருந்தபோது வனத்துறை சார்ந்த நிறுவனங்களில் லாபம் ஈட்ட வேண்டுமென்றால், இயந்திரங்கள் நவீனமயமாக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து ரூ 16 கோடியை டான்டீ நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்தார். அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை கொண்டுதான், குன்னூர் டான்டீ நிறுவனத்தில் டீத்துாளை உற்பத்தி செய்யக்கூடிய இயந்திரங்கள் எல்லாம் இன்றைய தேதியிலும் நவீனமயமாகி கொண்டிருக்கின்றன வனத்துறை அமைச்கரும் குன்னூரை சேர்ந்தவர் என்பதால் நன்கு அறிவார்.

ஆக நாங்கள் ஆட்சியில் இருந்தபோது லாபம் ஈட்ட இயந்திரங்களை நவீனமயமாக்கினோம். நீங்களோ லாபம் ஈட்ட தொழிலாளர்களின் போனசை 20 சதத்திலிருந்து 10 சதவீதமாக
குறைத்து லாபம் காட்ட முயலுகிறீர்கள்.

மேலும் தொழிலாளர்களின் போனசில் கை வைத்து அவர்களின் வாழ்வாதாரத்திலும் கை வைப்பதுதான் லாபம் ஈட்டுவதற்கான வழியா? எனவே நான் தொழிலாளர் நலனை அக்கறையுடன் கவனித்து அவர்களின் தகுதிக்கேற ஊதியத்துடன் போனசையும் வழங்கிய பிறகு, லாபம் ஈட்டுவதற்கான வழியினை கண்டறிந்தால் அது தான். லாபம் ஈட்டுவதற்கான உண்மையான முறையாக இருக்கும் என இந்த நேரத்தில் உங்களுக்கு நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் எம்.எல்.ஏ. பேசினார்.