தற்போதைய செய்திகள்

இனி தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்

மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா திட்டவட்டம்

மதுரை,

விலைவாசி உயர்வால் கடும் அவதிக்குள்ளாகி உள்ளதால் இனி எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக அமைப்பு தேர்தல் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளர்களான கடலூர் பேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் கே.முருகுமணி, மாநில அம்மா பேரவை இணை செயலாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோரிடம் மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா தனது விருப்ப மனுவை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பேசியதாவது:-

புரட்சித்தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்து 50 ஆண்டுகள் ஆகிறது. தமிழகத்தில் தற்போது ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக உருவெடுத்துள்ளது. இந்த இயக்கத்தை யாராவது அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள் என்பது கடந்த கால வரலாறு உள்ளது. ஜனநாயகத்தை பற்றி பேச தி.மு.க.வுக்கு அருகதை கிடையாது.

தற்போது தி.மு.க. 11 மாத கால ஆட்சியில் மக்களுக்கு எந்த தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மாறாக பால் பொருட்கள், கட்டுமான பொருட்கள், வீட்டு வரி ஆகியவற்றை உயர்த்தியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இன்றைக்கு தமிழக மக்கள் மீண்டும் எப்போது அம்மா ஆட்சி மலரும் என்று எதிர்பார்த்து இருக்கின்றனர். இனி எந்த தேர்தல் என்றாலும், தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். மீண்டும் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி மலரும். அப்போது தி.மு.க. ஆட்சியால் கைவிடப்பட்ட திட்டங்களான தாலிக்கு தங்கம் திட்டம், பெண்களுக்கு இரு சக்கர வாகனம் திட்டம், அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவோம்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.