சிறப்பு செய்திகள்

சட்டசபையில் அமைச்சர் தரக்குறைவாக பேச்சு

எதிர்க்கட்சி துணைத்தலைவர் தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

சென்னை

தமிழக சட்டப்பேரவையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டபோது ஆரம்ப நிலைளிலேயெ இதனை எதிர்ப்பதாக கழக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

இந்த மசோதா குறித்து பல்வேறு கட்சியினர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சி குழு தலைவர் செல்வ பெருந்தகை பேசும்போது முன்னாள் முதல்வர் குறித்து சில வார்த்தையை தெரிவித்தார்.

அப்போது கழக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி அவரின் பேச்சு குறித்து பேரவை தலைவரை நோக்கி முறையிட்டார். தொடர்ந்து கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அவையில் சில நிமிடங்கள் கூச்சல் குழப்பம் நிலவியது.

அப்போது கழக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமியை நோக்கி அமைச்சர் பெரியகருப்பன் குரல் எழுப்பினார். தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று கழக உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு
தெரிவித்தனர். கூச்சல் குழப்பத்திற்கு இடையே கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து பேரவை தலைவரின் இருக்கை அருகே சென்று பேரவையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக அவரிடம் முறையிட்டனர்.

இதைத்தொடர்ந்து அவை முன்னவர் பேசினார். பின்னர் முதல்வர் பேசினார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து சபையில் கண்ணியத்தை காக்க உறுப்பினர்கள், அமைச்சர்களும் ஒரு சேர அதற்குறிய மரியாதையை தர வேண்டும்.

ஒரு அமைச்சர் எழுந்து மரியாதைக்குறைவான வார்த்தைகளை சொன்னால், அது சபை மரபுக்கு உரியதுதானா? என்பதை சபாநாயகர்தான் முடிவு செய்ய வேண்டும். அமைச்சர் பேசியது அவைக்குறிப்பில் இல்லை என்பது ஏற்புடையதாக இல்லை. இதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று

பேசினார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சட்டமன்ற நடவடிக்கையில் கழகத்தின் சார்பாக உறுப்பினர் கோவிந்தசாமி எழுந்து நின்று பேச முற்பட்டபோது,அமைச்சர் பெரியகருப்பன் மரியாதைக்குறைவாக உட்காருடா என்ற வார்த்தையை,கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் பேசிய காரணத்தினால் கழகத்தின் சார்பாக அமைச்சர் பெரியகருப்பனை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்.

கேள்வி:- இன்று பேரவையில் பல்கலைக்கழக திருத்த மசோதா கொண்டு வந்துள்ளார்கள். இதற்கு கழகம் ஆரம்ப கட்டத்திலே எதிர்ப்பு தெரிவித்துள்ளதே?

பதில்:- பல்வேறு கட்டங்களில், பல்வேறு கருத்துக்கள் இந்த சட்ட மசோதாவின் உட்பொருள் குறித்து பேசப்பட்டிருக்கிறது. சட்டமன்றத்தில் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை யாரும் சட்ட முன்வடிவை கொண்டு வந்து நிறைவேற்றவில்லை என்பதை நாங்கள் இங்கே கருத்தாக பதியவைக்க கடமைப்பட்டுள்ளோம்.

கேள்வி:- 1995-ம் ஆண்டு இதேபோன்று ஒரு அரசினர் தீர்மானம் கொண்டு வந்தபோது அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது. இதன் மீது உங்கள் கருத்து என்ன?

பதில்:- சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு தி.மு.க. இரட்டை வேடம் போடுவதை தான் அது காட்டுகிறது.

கேள்வி:- இன்றைக்கு முதல்வர் பேசும்போது ஆளுநர் போக்கு குறித்து குற்றம் சாட்டி பேசினாரே?

பதில்:- இந்திய அரசியல் சட்டத்தில் ஆளுநர் குறித்து தனிப்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்திற்கு உட்பட்டுதான் யார் ஆளுநராக இருந்தாலும் செயல்பட முடியும். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு புறம்பாக எந்த ஆளுநரும் செயல்பட முடியாது.

இந்திய அரசியல் சட்டத்தின்படி துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டத்தில் இல்லை. ஆனால் பல்வேறு கருத்துக்கள் இருக்கிறது. அரசு நியமிக்கவேண்டும் என்ற கருத்தும், இல்லை ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் இருக்கிறது. இதனை தமிழ்நாடு அரசு தான் முடிவு செய்யும்.

இவ்வாறு எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கழக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி கூறுகையில் நாங்கள் வெளிநடப்பு செய்ததற்கு காரணமே அமைச்சர், சட்டமன்ற உறுப்பினரை கடுமையாக விமர்ச்சனம் செய்த காரணத்தினால் தான். அதனை அவையில் இருக்கின்ற முதல்வர் டுப்படுத்தாமல், ஆதரவு
தெரிவிக்கின்ற வகையில் கருத்து சொன்ன காரணத்தினால் தான் வெளிநடப்பு செய்தோம் என்றார்.