தற்போதைய செய்திகள்

சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம் – மதுராந்தகம் அருகே போக்குவரத்து பாதிப்பு

செங்கல்பட்டு

மதுராந்தகம் அருகே அரையப்பாக்கம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்காததால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் சாலையில் நெல்லை கொட்டி மறியல் செய்ததோடு வாகனங்களையும் சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அரையப்பாக்கம் கிராமத்தில் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து அரையப்பாக்கம் புதியதாக அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்க கோரி விவசாயிகள் சாலையில் நெல் மணிகளை கொட்டி மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது பற்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:-

கடந்த 6 மாத காலமாக புதியதாக எங்களுக்கு அரசின் நேரடி கொள்முதல் நிலையம் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த பயனும் இல்லை.

நெல் கொள்முதல் நிலையம் வரும் என நம்பி நாங்கள் நெல்லை களத்தில் குவித்து வைத்துள்ளோம். எந்த நேரத்தில் மழை வரும் என்பது தெரியாது.

எங்கள் உழைப்பு உழைப்பு வீணாகி விடுமோ? நெல் மணிகள் அனைத்தும் முளைத்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. ஆகவே அரசு உடனடியாக புதியதாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இக்கிராமத்தில் திறக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்தனர்.

விவசாயிகளின் மறியல் குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்து வந்த படாளம் போலீசார், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.