சம்பவத்தை மூடி மறைக்க தி.மு.க. அரசு முயற்சி – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

சென்னை
விக்னேஷ் மரணத்திற்கு காவல்துறையினர் தான் காரணம் என்பது தெள்ளத்தெளிவாகிறது. ஆட்சியில் இல்லாத போது சிறியதை பெரிதாக்குவதும், ஆட்சிக்கு வந்து விட்டால், மூடி மறைப்பதும் தி.மு.க.விற்கு வாடிக்கை.
அந்த வகையில், மேற்படி சம்பவத்தை மூடி மறைக்க தி.மு.க. அரசு முயற்சி செய்கிறது என்கிற சந்தேகம் அனைவர் மனதிலும் தற்போது எழுந்துள்ளது என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆட்சிக்கு வருவதற்காக மக்கள் மீது அக்கறை இருப்பது போல் காட்டிக்கொள்வதும், போலி வாக்குறுதிகளை அளிப்பதும், சிறிய சம்பவங்களை பெரிதாக்குவதும், சாத்தியமில்லாததை சாத்தியமாக்குவதாக கூறுவதும், ஆட்சிக்கு வந்த பிறகு பிறர் மீது பழி போடுவதும், ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றுவோம் என்று சாக்குபோக்கு சொல்வதும், மக்களை பற்றி கவலைப்படாமல் இருப்பதும் தி.மு.க.விற்கு கைவந்த கலை.
அண்மையில், புரசைவாக்கம், கெல்லீஸ் அறிவிப்புக்குறி அருகே காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஆட்டோவில் சென்று கொண்டிருந்த திருவல்லிக்கேணியை சேர்ந்த சுரேஷ் மற்றும் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தை சேர்ந்த விக்னேஷ் ஆகியோரை மடக்கியதாகவும்,
அவர்களிடம் கஞ்சா மற்றும் கத்தி இருந்ததாக தெரிவித்து அவர்களை தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததாகவும், அதன்பின் ரகசிய இடத்திற்கு கூட்டி சென்று அடித்து சித்ரவதை செய்ததாகவும், இந்த சித்ரவதையில் குதிரை ஓட்டி பிழைப்பு நடத்தி வந்த ஏழை இளைஞன் விக்னேஷ் மறுநாள் வாந்தி எடுத்து உயிரிழந்ததாகவும் பத்திரிகைகளிலும்,
ஊடகங்களிலும் செய்திகள் வந்தன. காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது ஏற்பட்ட இந்த உயிரிழப்பிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
விக்னேஷின் குடும்பத்தாருக்கு விக்னேசுக்கு பணி கொடுத்தவர் ஒரு லட்சம் ரூபாய் ஈமச்சடங்கிற்காக கொடுத்ததாகவும், இந்த பணத்தை காவல்துறையினர் அளித்ததாகவும் அவர் விக்னேஷின் சகோதரரான வினோத்திடம் கூறி இருப்பதாகவும் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் செய்திகள் வந்தன.
மேற்படி சம்பவத்தில் காவல் துறையினர் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் அவரது குடும்பத்தினருக்கு கொடுக்கப்படுகிறது என்றால், அங்கே காவல்துறையினர் தவறு புரிந்திருக்கிறார்கள் என்று தான் அதற்கு பொருள். ‘மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும்’ என்பதற்கேற்ப காவல்துறையின் நடவடிக்கை அமைந்திருக்கிறது. இதன்மூலம், அந்த இளைஞனின் மரணத்திற்கு காவல்துறையினர் தான் காரணம் என்பது தெள்ளத்தெளிவாகிறது.
ஆட்சியில் இல்லாத போது சிறியதை பெரிதாக்குவதும், ஆட்சிக்கு வந்து விட்டால், மூடி மறைப்பதும் தி.மு.க.விற்கு வாடிக்கை. அந்த வகையில், மேற்படி சம்பவத்தை மூடி மறைக்க தி.மு.க. அரசு முயற்சி செய்கிறது என்கிற சந்தேகம் அனைவர் மனதிலும் தற்போது எழுந்துள்ளது.
இதில் தொடர்புடைய காவல் துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, வழக்கு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றப்பட்டு இருந்தாலும், இந்த துறை மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் வருவதால், தங்களுக்கு நீதி கிடைக்காது என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கருதுகின்றனர்.
விக்னேஷின் மரணத்திற்கு நீதி கிடைக்க காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வகையில் மேற்படி வழக்கினை மத்திய புலனாய்வுத்துறை, அதாவது சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும், காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்த போது மரணமடைந்த விக்னேஷ் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.