காவலர்கள் தாக்குதலில் இறந்த விக்னேஷ் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்

பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு
சென்னை
ெசன்னையில் உள்ள காவல்நிலையத்தில் வாலிபர் விக்னேஷ் மரணமடைந்திருப்பது குறித்து தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரமில்லா நேரத்தின் போது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-
சென்னை, புரசைவாக்கம், கெல்லீஸ் சிக்னல் பகுதியில் 19.4.2022 அன்று இரவு நடைபெற்ற வாகன தணிக்கையின் போது ஆட்டோவில் பயணித்த விக்னேஷ், ரமேஷ் ஆகிய இருவரையும் சோதனை செய்த போலீசார் அவர்கள் இருவரிடமும் கஞ்சா, கத்தி ஆகியவை இருந்ததாகவும் அவர்களை விசாரணைக்காக தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். விசாரணையின் போது காவலர்கள் தாக்கியதால் விக்னேஷ் வலிப்பு வந்து இறந்து போனதாகவும் காவல்துறையின் தரப்பில் சொல்லப்படுகிறது.
இந்நிகழ்வின் போது ஒரு எஸ்.ஐ, ஒரு காவலர் மற்றும் ஊர்க்காவல்படை காவலர் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர் விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் காவலர் தாக்குதலால் கொல்லப்பட்ட விக்னேஷ் குடும்பத்தாரிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் விக்னேஷின் சகோதரர் தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்துள்ளார்.
காவலர் தாக்குதலில் இறந்த விக்னேஷ் சென்னை கடற்கரையில் வயிற்றுப்பிழைப்புக்காக சுற்றுலா பயணிகளுக்கு குதிரை
சவாரி செய்ய வைத்து வாழ்க்கை நடத்தி வரும் ஒரு சாதாரண ஏழைத்தொழிலாளி.
அவர்களது குடும்பமே வறுமையில் உள்ளது. அவருக்கு பெற்றோரும் இல்லை. அவர்கள் ஏதேனும் குற்றம் செய்திருந்தால், அவர்களை விசாரித்து வழக்கு பதிவு செய்து முறைப்படி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இது காவல்துறையினரின் கடமை.
ஆனால் அவ்வாறு செய்யாமல், விக்னேஷ் காவல் நிலையத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு, மரணமடைந்துள்ளார் என்ற செய்தி மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அம்மாவின் அரசு காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்ற போது உடனடியாக முதலில் சிபிசிஐடி வசமும், பிறகு அதனை சிபிஐ வசம் மாற்றினோம்.
காவலர் தாக்குதலில் இறந்த விக்னேஷ் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், மேலும் இவ்வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மேலும் இதனை முழுமையாக விசாரித்து தவறு இழைத்த காவலர்கள் மீது சட்ட ரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.