தமிழகம்

துயரமான சம்பவத்தை நியாயப்படுத்தி பேசுகிறீர்களா?

பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அடுக்கடுக்கான கேள்வி

சென்னை

தி.மு.க ஆட்சி குறித்து செல்வபெருந்தகை பேசியதை நாங்கள் பேசலாமா? துயரமான சம்பவத்தை நியாயப்படுத்தி பேசுகிறீர்களா என்று பேரவையில் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று முன்தினம் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து பேசினார்.

நேரமில்லா நேரத்தில் முக்கியமான பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது வழக்கம். அனைத்து ஆட்சி காலத்திலும் இது இருந்துள்ளது. இதைத்தான் நாங்கள் கேட்கிறோம். நேற்றைய தினம் கூட (நேற்றுமுன்தினம்) அப்படி தான். முக்கியமான பிரச்சனை. 11 பேர் உயிரிழந்த பிரச்சினை.இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம் என்று ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து பேசினார்.

தொடர்ந்து கழக சட்டமன்ற உறுப்பினர்கள் உணவு அளித்தனர் என்று பேசிய போது, பேரவை தலைவர் அவர்களுக்கு உணவு அளித்ததை இங்கு பதிவு செய்ய வேண்டுமா என்று கேட்டார். இதற்கு எதிர்கட்சித்தலைவர் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்று நடந்தது குறித்து அவையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அதேபோல பிரதான எதிர்க்கட்சி நடந்த சம்பவங்கள் குறித்து பேசுவதில் என்ன தவறு உள்ளது. இதை பதிவு செய்ய விடவில்லை என்றால் எப்படித்தான் பேசுவது. நாங்கள் எதுவுமே சொல்லக்கூடாது என்று நினைக்கிறீர்கள். இந்த இருக்கையிலிருந்து கொண்டு நடுநிலையோடு செயல்பட வேண்டும். இடையில் இடையில் மறித்தால் எப்படி என்றார்.

பின்னர் பேரவைதலைவர் தொடர்ந்து பேச அனுமதி அளித்தார். பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அதுபோல நேற்றைய தினம் நேரமில்லா நேரத்தில் ஒரு பிரச்சினையை எழுப்பினோம். முக்கிய பிரச்சினை. விதி 56-ன் கீழ் நாங்கள் அளித்தோம். நேரமில்லா நேரத்தில் எழுப்பினோம். அது ஒரு துயரமான சம்பவம்.

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் தேர்த்திருவிழா நடைபெற்ற போது தேர் விபத்துக்குள்ளாகி 11பேர் இறந்த சம்பவம். முதல்வர் காலையில் இது தொடர்பாக இரங்கல் தீர்மானம் கொண்டு வந்தார். அனைவரும் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்தோம். அதன் அடிப்படையில் அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வந்தோம்.

ஏற்கனவே மதுரையில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறக்கும் சம்பவத்தின் போது, நெரிசலில் இருவர் இறந்தனர். அந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது அறநிலையத்துறை அமைச்சர் பேசியதை நாங்கள் சுட்டிக் காட்டினோம். அதையொட்டி தான் நேற்றைய தினம் நாங்கள் பேசினோம்.

இதனை ஒரு பாடமாக நாங்கள் எடுத்துக்கொண்டு இனி எதிர் வருகின்ற காலங்களில் இப்படிப்பட்ட திருவிழாக்களில் எந்த ஒரு துயர சம்பவங்களும் ஏற்படாமல் நாங்கள் பாதுகாப்போம் என்று உத்தரவாதத்தை இந்த அவையிலே தெரிவித்தார். இதனை கோடிட்டி காட்டி நாங்கள் பேசினோம்.

இந்த அரசு ஏற்கனவே கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றாத காரணத்தினால் அதனை கண்டித்து வெளிநடப்பு
செய்தோம். இதில் என்ன தவறு இருக்கிறது. காங்கிரஸ் கட்சி குழு தலைவர் செல்வபெருந்தகை வேண்டுமென்றே திட்டமிட்டு, ஒவ்வொரு முறை அவர் பேசுகின்ற பொழுதும், அ.தி.மு.க.வை அவதூறாக பேசுகிறார்.

முன்னர் நடைபெற்ற எங்கள் ஆட்சி குறித்து அவதூறாக பேசுகிறார். இது எந்த விதத்தில் நியாயம். நாங்கள் இந்த அரசு வந்த பிறகு இந்த அரசில் நடைபெற்ற நிகழ்வு பற்றி தான் நாங்கள் பேசினோம். ஆனால் 28 ஆண்டுகளுக்கு முன்பு அதை கோடிட்டு காட்டுகிறார். அதனையும், இதனையும் எப்படி பொருத்திப்பேசுவது. துயரமான சம்பவத்தை நியாயப்படுத்தி பேசுகிறீர்களா. இவருக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்.

இவர் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறார். செல்வபெருந்தகை 2006-ல் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணியிலிருந்து வெற்றிபெற்று வந்தவர். அப்போது ஆளும் கட்சி தி.மு.க இருந்தது.

அப்போது என்ன என்ன பேசினார் என்று எல்லா குறிப்பும் இருக்கின்றது. நாங்கள் அதனை பேசலாமா. இது சரியா.
அதுமட்டுமில்லை தேவையில்லாத ஒரு கருத்தை சொல்லி இன்றைக்கு பதிவு செய்கிறார்.

இது உதாரணமாகி விடும். ஏற்கனவே நடந்த சம்பவத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு, அவதூறு செய்தியை இங்கு பதிவு செய்துள்ளார் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை. இதனை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்.

இவ்வாறு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.