சிறப்பு செய்திகள்

அம்மா வகுத்துக்கொடுத்த பாதையில் இஸ்லாமியர்களின் அரணாக கழகம் திகழும்

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

சென்னை

அம்மா அவர்கள் வகுத்துக்கொடுத்த பாதையில் இஸ்லாமியர்களின் அரணாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் திகழும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக கூறி உள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நேற்று சென்னை, நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற இஃப்தார் விருந்தில் கலந்து கொண்டு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் ஆற்றிய உரை வருமாறு:-

இஸ்லாமிய சமுதாயத்தின் கலங்கரை விளக்கமாக திகழும் திருக்குரான் அருளப்பட்ட புனித மாதமான ரமலான் மாதத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நடைபெற்று கொண்டிருக்கும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் எங்களின் அழைப்பினை ஏற்று இங்கு வருகை புரிந்துள்ள அனைவருக்கும் எனது அன்பார்ந்த வணக்கத்தினையும், நெஞ்சார்ந்த நன்றியினையும் தெரிவித்து கொள்கிறேன்.

இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ் ஆகியவை இஸ்லாத்தின் ஐந்து முக்கியக் கடமைகள் ஆகும். இவற்றில், இறை நம்பிக்கை, தொழுகை, தர்மம், ஹஜ் போன்றவை வெளிப்படையாகத் தெரியக்கூடியவை. ஆனால், ஒருவர் நோன்பாளியா, இல்லையா என்பதை மற்றவரால் வெளிப்படையாக அடையாளம் காண முடியாது.

“நோன்பு நோற்பவர்களுக்கு நானே நேரடியாக கூலியை கொடுப்பேன்” என்று எல்லாம்வல்ல இறைவன் உறுதி அளிக்கிறார். இறைவனே நேரடியாக கூலிதரும் இந்த நோன்புக்கடமை மிக வலிமையும், புனிதமும் கொண்டது.

ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதன் மூலம், அகமும், புறமும் தூய்மையடைகிறது. தூய்மையடைவதன் மூலம் இறைப்பற்றும், அன்பும் மேலோங்குகிறது.

தர்ம சிந்தனை தழைத்தோங்குகிறது. கெட்டவைகள் நம்மைவிட்டு அகலுகின்றன. இஸ்லாமிய நெறிமுறைகளில் இருந்து சற்றும் வழுவாமல் வாழ்ந்தவர் சுலைமான் நபி அவர்கள். அவர் மரணத்திற்குப் பிறகு சொர்க்கம் அடைந்தார்.

“சுலைமான் உனக்கு சொர்க்கம் எதனால் கிடைத்தது என்று தெரியுமா?” என்று இறைவன் கேட்டார். சுலைமான் சொன்னார். “இறைவனே, உம்மை நாள்தோறும் தவறாமல் ஐந்து முறை தொழுததால் கடவுளின் கருணை எனக்கு கிடைத்திருக்கலாம்” என்று சொன்னார்.

“இல்லை மகனே, ஒரேயொரு வேளை மட்டும் நீ தொழாமல் இருந்தாய் அல்லவா? அதற்காகவே நீ இன்று சொர்க்கத்தில் இருக்கிறாய்” என்று கூறினார் இறைவன். சுலைமான் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. தொழாமல் இருந்ததற்குப் பரிசா? என்று நினைத்து வியப்பில் ஆழ்ந்திருந்தார்.

இறைவன் தொடர்ந்தார். “மகனே, ஒரு குளிர் கால காலைப்பொழுதில் பள்ளிவாசலின் அழைப்பொலி கேட்டு நீ அவசரமாக பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக புறப்பட்டாய். அப்போது, அந்தக் கடுமையான பனியில் பூனைக்குட்டி ஒன்று நடுங்கிக்கொண்டு இருந்தது.

அந்தக் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த அந்த பூனைக்குட்டியை ஓடிச்சென்று, அள்ளி அணைத்து, உன்னுடைய விரல்களால் அதன் உடலை வருடி ஆறுதல் அளித்தாய். நீ பூனையை தழுவிக்கொண்டதால் உன் உடல் வெப்பம் கிடைத்து பூனைக்குட்டி சமநிலையை அடைந்தது.

நெஞ்சில் அனைத்த பூனைக்குட்டியை நிலத்தில் விட்டுவிட்டு நீ நிமிர்ந்தபோது பள்ளிவாசல் தொழுகை முடிந்துவிட்டது. அதனால், உன்னால் தொழுகைக்கு செல்ல முடியவில்லை. பிற உயிர்களிடம் காட்டும் பெரும் கருணை தான் எனக்கு மிகவும் பிடித்தமான செயல். என் அன்பின் பரிசாக உனக்கு இந்த சொர்க்கம் கிடைத்தது.” என்றார்.

எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு மனிதநேயம் இருக்கும். எங்கு மனிதநேயம் இருக்கிறதோ அங்கு மத நல்லிணக்கம் தாண்டவமாடும். இது தான் இறைவனின் விருப்பம். இறை நம்பிக்கையுடைய இஸ்லாமிய பெருமக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய பெருமை அம்மா அவர்களுக்கு உண்டு.

உலமாக்கள் ஓய்வூதியம் உயர்வு, உமறுப்புலவர் பெயரில் விருது, தர்காக்களில் அன்னதான திட்டம், நோன்பு கஞ்சி தயாரிக்க விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், மாவட்ட காஜிகளுக்கு மாதந்தோறும் 20000 ரூபாய் மதிப்பூதியம் என பல திட்டங்களை உதாரணமாக சொல்லலாம்.

அம்மா அவர்கள் வகுத்துக்கொடுத்த பாதையில் இஸ்லாமியர்களின் அரணாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் திகழும் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்களது வேண்டுகோளினை ஏற்று, இந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை மீண்டும் உரித்தாக்கிக்கொள்வதோடு, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க புரட்சித்தலைவி அம்மா நாமம் வாழ்க.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.