சிறுபான்மையினரின் பாதுகாவலனாக அ.இ.அ.தி.மு.க. இருக்கும் -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதம்

சென்னை
கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன்படி இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் இவ்வாண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் நேற்று மாலை சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் இஃப்தார் விருந்து வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், இஸ்லாமிய சமுதாய பெருமக்கள், தோழமைக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு:-
இஸ்லாமியர்களின் புனித நூலாகிய திருக்குர்ரான் அருளப்பட்ட புனித ரமலான் மாதத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நடைபெற்று கொண்டிருக்கும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் எங்களின் அழைப்பை ஏற்று வருகை தந்திருக்கும் இஸ்லாமிய சமய பெரியவர்களுக்கும்,
இஸ்லாமிய சமூக சகோதர, சகோதரிகளுக்கும், தோழமை கட்சிகளின் தலைவர்களுக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகளுக்கும், கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பெரியோர்களுக்கும் ஊடகத்துறை நண்பர்களுக்கும், முதற்கன் என் இதயமார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நிழலின் அருமை வெயிலில் தெரியும் !
தண்ணீரின் அருமை தாகத்தில் தெரியும் !
மின்சாரத்தின் அருமை மின்வெட்டில் தெரியும் !
என்பதுபோல், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆளுமை, அவர் இல்லாமல் நாம் வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும் தெரிகிறது. நோன்பு இருப்பதன் மூலம், நோன்பு இருப்பவருக்கும் இறைவனுக்கு ஒரு புனிதமான தொடர்பு ஏற்படுகிறது. சமய அமைப்புகளும், தனி மனிதர்களும், நிறுவனங்களும் நடத்துகின்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கு பெறுவதைத்தான் பார்த்திருக்கிறோம்.
ஆனால், ஓர் அரசியல் இயக்கம், அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் தாமே பொறுப்பேற்று நோன்பு திறப்பு நிகழ்ச்சியை தனது சொந்த செலவில் நடத்துவதும், அந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய சமயத்தவரை அழைத்து, இறை வணக்கம் செய்து, நோன்பாளர்களை வாழ்த்தி, அவர்களுக்கு நோன்பு திறப்பு விருந்து அளிப்பதும், இந்தியாவிலேயே புரட்சித்தலைவி அம்மா அவர்களும், அவருடைய சீரிய தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் மட்டுமே முதன் முதலாகவும், தொடர்ந்தும், நடத்தி வருவதை இந்த நேரத்தில் நான் நினைவு கூர்ந்து மெய்சிலிர்க்கிறேன்.
ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் இந்த புனிதமான தொடர்புக்கு தங்களுக்கு தானே வைத்துக்கொள்ளும் பரிசோதனை தான் நோன்பு. இதில் ஒருவர் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் நோன்பை கடைபிடிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் இறைவனின் கருணைக்கும், அன்புக்கும், அருளுக்கும் பாத்திரமாக விளங்குவார்.
இதனால் அவர்களின் மனதையும், உடலையும் நன்கு பாதுகாக்க முடியும். இப்படிப்பட்ட தனிச்சிறப்பை பெற்றது ரமலான் மாதத்தில் கடைபிடிக்கப்படும் நோன்பு. உலகில் உள்ள இஸ்லாமியர்கள் சமூக உண்ணா நோன்பு மற்றும் கூட்டுத்தொழுகைகளில் ஈடுபடுவதால் ரமலான் மாதம்- நன்மையும், ஒழுக்கமும் நிறைந்த சமூகச்சூழலை தோற்றுவிக்கிறது. நன்மைகள் பூத்துக்குலுங்கும் பருவகாலமாக திகழ்கிறது.
“நோன்பாளர்களுக்கு இறைவன் விரும்பிய அளவுக்கு கூலி கொடுப்பார்”
என்று நபிகளார் எடுத்துரைக்கிறார்.
“ரமலான் மாதத்தில் இறைவனிடம் கையேந்துங்கள், சொர்க்கத்தை கேளுங்கள். சொர்க்க வாழ்வு என்பது அலாதியான, அற்புதமான வாழ்வின் இருப்பிடமாகும்”
என்று புனித ரமலான் குறித்து நபிகளார் கூறுகிறார். இறைவனை அடைய சோம்பலோ, தயக்கமோ, தடுமாற்றமோ இருக்கக்கூடாது. இதற்காகவே புனித ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.
இறைவனின் கட்டளைப்படி நோன்பு இருந்து, தொழுகையில் ஈடுபட்டு, தான தர்மங்கள் வழங்கி, நற்செயல்கள் புரிந்து, நன்மைகளை அதிகம் செய்து சொர்க்கத்தை பெற்றுக்கொள்ள நாம் அனைவரும் முன்வர வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
”நமது நாடு பல மதங்கள் வேறூன்றி உள்ள நாடு என்பதை மறுப்பதற்கில்லை. ஒவ்வொரு மதத்திற்கும் அதற்குரிய இடம் அளிக்கப்பட வேண்டும். ஒரு மதம் மற்றொரு மதத்தின் கோட்பாடுகளின் வழியில் குறுக்கிடக்கூடாது. பெரும்பான்மையின மக்கள் பெறும் அனைத்து சலுகைகளும், உரிமைகளும், சிறுபான்மையினருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே நமது மதச்சார்பற்ற அரசியலமைப்பு சட்டத்தின் சாராம்சம்” என்றார் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.
ஆகவே தான், புரட்சித்தலைவி அம்மா அவர்களும், தொடர்ந்து கழகமும், அனைத்து மக்களையும் தம் மக்களாக நினைத்து, ஒற்றுமையை மட்டுமே வேதமாக கருதி செயல்பட்டதன் விளைவாகத்தான், தமிழ்நாட்டு மக்கள் மத, இன வேறுபாடுகளை கடந்து, இன்றும் மதநல்லிக்கணத்துடன் வாழ்ந்து, இந்தியாவிற்கே ஓர் உதாரணமாக வாழ்ந்து வருகிறார்கள்.
அம்மாவின் அரசு இஸ்லாமிய மக்களுக்காக பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. அவற்றில் ஒரு சிலவற்றை பற்றி மட்டும் இங்கே குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க அரசின் சார்பில் அரிசி வழங்கும் ட்டம் 2001-ம் ஆண்டு துவக்கப்பட்டு இன்று வரை சிறப்பாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.
நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக்கட்டைகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல் நாகூர் தர்காவிற்கு சொந்தமான குளக்கரை, சுற்றுச்சுவர் ஆகியவை பருவமழையின் போது சேதமடைந்துள்ள செய்தி அறிந்து நான் நேரடியாக நாகூர் சென்று, நாகூர் தர்காவில் பிரார்த்தனை செய்தேன். பாதிப்படைந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்தேன். பிறகு உடனடியாக அவற்றை சீரமைப்பதற்கு நான்கு கோடியே 25 லட்சம் ரூபாயை ஒதுக்கி, அப்பணிகள் முடிக்கப்பட்டு விட்டன என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இஸ்லாமிய வகுப்பினருக்கு நேரடி நியமனம் முறையில் நிரப்பப்படாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறையை நீட்டிக்க அரசாணை வெளியிடப்பட்டது.
2018 வரை ஹஜ் புணித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு மத்திய அரசு மானியம் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது. 2019 முதல் அம்மாவின்அரசு ஹஜ் பயணம் மேற்கொள்ள 6 கோடி ரூபாய் மானியமாக வழங்கி, பிறகு அதனை 10 கோடியாகவும் தொடர்ந்து 12 கோடி ரூபாயை ஒதுக்கி முஸ்லீம் பெருமக்களின் இறை நம்பிக்கையில் பங்கெடுத்த அரசு அம்மாவின் அரசு.
மாநில ஹஜ் குழுவிற்கு வழங்கப்பட்டு வரும் நிர்வாக மானியம் 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாகவும், பிறகு 30 லட்சமாகவும் கடைசியாக 50 லட்சமாக உயர்த்திய அரசு அம்மாவின் அரசு.
உலாமாக்கள் ஓய்வூதியம்-பயனாளிகள் எண்ணிக்கை 2,400லிருந்து 2,600 ஆக உயர்த்தப்பட்டு, ஓய்வூதிம் 750 ரூபாயாக வழங்கப்பட்டது, இது 1000 ஆகவும், பின்னர் 1500 ஆகவும், கடைசியாக ரூ.3,000 ஆக உயர்த்திய அரசு அம்மாவின் அரசு.
பள்ளி வாசல்கள், தர்காக்கள் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள தொகுப்பு நிதி 3 கோடியை ஒதுக்கியது அம்மாவின் அரசு.
உலாமாக்களுக்கு புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க ரூ.25,000- அல்லது 50 சதவீதம், இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கிய அரசு, அம்மாவின் அரசு. ஹஜ் பயணிகள் சென்னையில் தங்கி செல்ல வசதியாக 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஹஜ் இல்லம் புதிதாக கட்டப்படும் என்று அறிவித்து அரசாணையும் வெளியிடப்பட்டது. மேலும் ஹஜ் இல்லம் கட்டுவதற்கு பல்லாவரத்தில் 1 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அம்மா அவர்களுக்கு பிறகு, சிறுபான்மைப்பிரிவை சேர்ந்த முகமது ஜானுக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி வழங்கியது அனைத்திந்திய அண்ணா தி.மு.க. முதன்முதலில் இசுலாமிய மதத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி யாஸ்மின் அகமதுவை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு தலைவராக்கி (2001-ம் ஆண்டு) அழகு பார்த்தவர் அம்மா அவர்கள்.
அம்மா அவர்கள் 2002-ம் ஆண்டு, இந்தியாவின் 11-வது ஜனாதிபதியாக ஏவுகனை நாயகன் பாரத ரத்னா, ஏ.பி.ஜெ.அப்துல் கலாமை ஜனாதிபதியாக வரவேண்டும் என்று முயற்சி எடுத்து, ஆதரவு அளித்தார். ஆனால் அப்போது அவரை எதிர்த்தவர் மறைந்த கருணாநிதி. அவருக்கு எதிராக வாக்களித்த கட்சி தி.மு.க என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன். சிறுபான்மை மக்கள் நலன் தொடர்பாக என்றைக்குமே அனைத்திந்திய அண்ணா தி.மு.க. இரட்டை வேடம் போட்டதில்லை.
எல்லா காலத்திலும் இறைவழிப்பாடான நோன்பு கட்டாய கடமையாக்கப்பட்டதற்கு காரணம் மனித வாழ்வு முழுவதும் ஒருவர் இறைவனுக்கு செய்கிற இறைவழிபாடாக இருக்க வேண்டும் என்பது தான்.
“இறைவனின் கட்டளைக்கு இம்மியும் பிசகாத ஓர் இறைத்தொண்டராக ஒருவர் இருக்க வேண்டும் என்பதே வாழ்வியல் நோக்கம்” என்கின்றது புனித திருகுர்ரான். “எப்போது ஆன்மீக கடலில் மூழ்கி உன்னுள் இருக்கும் நான் என்கிற செருக்கை அழிக்கின்றாயோ அப்போது தான் உன்னுள் ஆன்ம ஞானம் சுரக்கும்” என்கிறது திருகுர்ஆன்.
இஸ்லாமிய சமயத்தின் அறநெறி கோட்பாடுகள் அற்புதமானவை. அமைதியையும், சகோதரத்துவத்தையும், இறைவனுக்கு பணிந்து, வணங்கி வாழ்வதையும் இஸ்லாம் வலியுறுத்தி, சமத்துவத்தை வளர்க்கும் வாழ்க்கை நெறியாக இஸ்லாம் திகழ்கிறது. இச்சமயத்தில் ஒரு அறநெறி கதையினை நான் உங்களிடம் கூற விரும்புகிறேன்.
யாத்திரை சென்ற மூன்று மனிதர்கள் தங்கள் பயணத்தின் போது ஏற்பட்ட ஒரு பெரும் சூறாவளி, புயல், மழையில் சிக்கிக் கொண்டனர். தங்களை காப்பாற்றிக் கொள்ள ஒரு குகையில் அவர்கள் அண்டி இருந்த போது, சூறாவளியால் பெரும்பாறை ஒன்று அந்தக்குகையை மூடி விட்டது.
மூன்று யாத்ரிகர்களும் வாயிலை மறித்து நின்ற பாறையை அப்புறப்படுத்தி வெளியே செல்ல எவ்வளவோ முயன்றும் பாறையை ஓர் அங்குலம் கூட நகர்த்த முடியவில்லை.
இனி நம் கையில் எதுவுமில்லை. இறைவனிடம் முறையிட்டு தங்களை காப்பாற்று என்று மன்றாடுவதை தவிர வேறு வழியே இல்லை என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.
முதலாம் யாத்ரிகர் – “இறைவா உன் கட்டளைகளை ஏற்று, உனக்கு அஞ்சி நான் எப்போதும் நடந்து கொண்டேன். ஒருநாள் என் வயதான பெற்றோர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அவர்கள் பசியாற வேண்டும் என்பதற்காக நான் பால் கறந்து வைத்து காத்திருந்தேன். என் பிள்ளைகள் பாலுக்கு அழுத நேரத்திலும்.
வயதான பெற்றோரின் பசி தீர்ந்த பின்னரே மற்றவர்க்கு, என்று உமது கட்டளையை நிறைவேற்ற உறுதியாய் இருந்தேன். அவர்கள் கண் விழித்து பால் அருந்திய பிறகே என் பிள்ளைகளுக்கு பருகக்கொடுத்தேன்”. என்று தான் செய்த ஒரு நற்செயலை சொல்லி தன்னை மரணத்தின் பிடியில் இருந்து விடுவிக்க இறைவனை மன்றாடினார்.
அப்போது அந்த குகையை மறைத்திருந்த பாராங்கல் சிறிதளவு நகர்ந்தது. ஆனால் குகையை விட்டு வெளியே வரும் அளவு நகரவில்லை. தொடர்ந்து இரண்டாவது யாத்ரிகர்- “இறைவா உம்முடைய கட்டளையில் ஒழுக்கமான வாழ்வுக்கு நீர் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறீர் என்பதால், ஒருமுறை என்னுடைய ஒழுக்கத்திற்கு சவாலான ஒரு சந்தர்ப்பம் நேர்ந்த போது, கற்பு நெறி தவறி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து, என்னை நான் ஒழுக்க சீலனாக காப்பாற்றி கொண்டேன்.
இறைவனுக்கு அஞ்சி வாழ வேண்டும் என்ற உணர்வாலேயே நான் அவ்வாறு நடந்து கொண்டேன். இந்த நற்செயலுக்காகவாது என்னை இந்த மரணக்குகையில் இருந்து காப்பாற்றுவாயாக” என்று வேண்டினார். இப்போழுது அந்த குகையை மறைத்திருந்த பாறாங்கல் மேலும் சற்றே விலகியது. ஆனால் அந்த இடைவெளியாலும் யாத்ரிகர்கள் குகையை விட்டு வெளியே வர முடியவில்லை. தொடர்ந்து மூன்றாவது யாத்ரிகர்
“இறைவா நானும் உனது கட்டளைகளை சிரமேற்கொண்டு வாழ்ந்தவன் தான். என்னிடம் சில வேலையாட்கள் இருந்தனர். அவர்களுக்கு நான் நியாயமான கூலி கொடுத்து வந்தேன். ஒரு வேலையாள் மட்டும் சில நாட்கள் கூலி வாங்காமல் எங்கோ சென்று விட்டான். நான் அவனுக்கு சேரவேண்டிய கூலியை கொண்டு ஒரு ஆட்டுக்குட்டி வாங்கி வளர்த்தேன்.
அந்த ஆட்டுக்குட்டி மேலும் ஒரு குட்டி போட்டது. குட்டி மேல் குட்டியாக அந்த ஒற்றை ஆடு, சில ஆண்டுகளில் ஒரு பெரும் ஆட்டுப்பண்ணையாகவே மாறிவிட்டது. கூலி வாங்காமல் சென்று விட்ட அந்த வேலையாள் சில ஆண்டுகளுக்குப்பின் வந்து, “ஐயா, என் கூலியை தாருங்கள்” என்று கேட்டான். நான் உடனே “அதோ வீட்டிற்கு வெளியே உள்ள ஆட்டு மந்தையை எடுத்துக்கொள். அதுதான் உன்னுடைய கூலி” என்றேன்.
அவனோ நான் அவனை சீண்டுவதாக நினைத்து,
“ஐயா, என்னுடைய கூலியான சொற்ப பணத்தை கொடுங்கள் என்று அழாத குறையாக கேட்டான். உன்னுடைய கூலித்தொகையில் நான் வாங்கிவிட்ட ஆட்டுக்குட்டி தான் இன்று இவ்வளவு பெரிய பண்ணையாக வளர்ந்துள்ளது.
இது உனக்குத்தான் சொந்தம் என்று சொல்லி, வற்புறுத்தி அந்த ஆட்டுப்பண்ணையை அவனிடம் ஒப்படைத்தேன். இறைவா உன் நீதிக்கும், தர்மத்திற்கும், கட்டளைக்கும் பயந்து தான் நான் அவ்வாறு செய்தேன். இதற்காகவேனும் என்னை இந்த மரணக்குகையிலிருந்து காப்பாற்று” என மன்றாடினான்.
என்ன ஆச்சரியம்? அந்த குகையை மறைத்திருந்த பாறாங்கல் முற்றிலுமாக விலகியது. மூன்று யாத்ரிகர்களும் அந்த மரண குகையில் இருந்து வெளியே வந்தனர். இக்கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்வது பாசத்தால் மட்டுமல்ல, ஒழுக்கத்தால் மட்டுமல்ல, நியாயத்தால் தான் இறைவனுடைய கருணையை நாம் பெற முடியும்.
உழைப்பவர்களின் உழைப்பை சுரண்டாமல், நியாயமான முறையில் நீ முறையின்படி நாம் கூலி கொடுப்பதன் மூலம் தான், நாம் அனைவருமே இறைவனின் அன்பைப்பெற முடியும் என்று இஸ்லாம் நீதியையும், நியாயத்தையும், எவ்வளவு ஆழமாக வலியுறுத்துகிறது என்பதை இந்த கதை மூலம் உணர்கிறோம்.
அனைத்து மக்களும் நலமாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என்று, இந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியின் மூலம் எல்லாம் வல்ல இறைவனை உளமார வேண்டுகிறேன்.
கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும், தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா அவர்களும், மறைந்த இருபெரும் தலைவர்களை தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து சிறுபான்மையினரின் பாதுகாவலனாக, வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல், செயலிலும் கடைபிடித்து வருபவர்கள் நாங்கள் என்பதை பெருமிதத்துடன் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.