தற்போதைய செய்திகள்

இஸ்லாமியர்களுக்கு கழகம் என்றும் துணை நிற்கும் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம்

கோவை

இஸ்லாமியர்களுக்கு கழகம் என்றும் துணை நிற்கும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி திட்டவட்டமாக கூறினார்.

கோவை மாவட்டம் சுகுனாபுரம் கிழக்குப் பகுதியில் உள்ள நூருல் இஸ்லாம் ஹனபி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் புனித ரமலானையொட்டி அதிமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளரும். கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

இஸ்லாம் மத முக்கிய கடமைகளில் ஒன்றான ரம்ஜான் நோன்பை மேற்கொள்ளும் இஸ்லாமிய பெருமக்களுக்கு கழகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான கழகம் சிறுபான்மை மற்றும் இஸ்லாமிய மக்களுக்கும் என்றும் துணை நிற்கும்.

இஸ்லாமிய பெருமக்களுக்கும் ரமலான் நோன்பு மேற்கொள்ளும் இஸ்லாமியருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமிய புனித பயணம் மேற்கொள்ளும் ஹஜ் யாத்திரை மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தபோது எடப்பாடியார் இருந்த போது ஹஜ் பயணம் மேற்கொள்ள 6 கோடியை பெற்றுத்தந்தவர்.

அதுமட்டுமன்றி கோவை மாவட்டத்திற்கு எடப்பாடி வருகை தந்தபோது அனைத்து இஸ்லாமிய சமுதாய மக்களின் வேண்டுகோளுக்கிணங்க 6 கோடி மானியத்தை 10 கோடியாக உயர்த்தி தந்தார்.

கஜா புயலால் நாகபட்டிணத்தில் நாகூர் தர்காவில் பாதிக்கப்பட்ட குளம் மற்றும் சுவர்களை சீரமைக்க ரூ. 5 கோடி ஒதுக்கியது அதிமுக அரசு தான். மேலும் டவுன் ஹாஜிகளுக்கு தொகுப்பூதியம் ரூ 20,000 பெற்று தந்ததும் கழகம் தான். உலமாக்களுக்கான ஓய்வூதியத்தை 1500 லிருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டது. கபார்ஸ்தானுக்கு இடம் தேர்வு செய்ய ரூ 1 கோடி ஒதுக்கியதும் அம்மா ஆட்சி தான்.

மேலும் கோவையில் குனியமுத்தூர், குறிச்சி, காளவாய் பகுதியில் உள்ள இஸ்லாமியரின் கபார்ஸ்தான்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தந்துள்ளோம்.

வக்பு வாரியத்திற்கு வழங்கப்பட்டு வந்த நிர்வாக மானியம் 2 கோடியாக உயர்த்தினோம். பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் இதர வக்ஃப் நிறுவனங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக புனரமைப்பு மானியம் ஆக ஆண்டுதோறும் ரூ60 லட்சம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு வழங்கப்பட்டு வரும் நிர்வாக மானியம் ரூ30 லட்சமாக உயர்த்தப்பட்டு, ஆண்டுதோறும் வழங்கப்பட்டது.

மேலும் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அறிமுகப் படுத்தப்பட்ட புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க கழக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 3000க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு 5145 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இஸ்லாமிய நலன் காக்க ஏராளமான திட்டங்களை கழக ஆட்சியின்போது நிறைவேற்றியுள்ளோம்.

மேலும் அனைத்து இஸ்லாமியர்களும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கோவை சுகுணா புரத்தில் இஸ்லாமியர்களுக்காக மிகச் சிறந்த முறையில் கபர்ஸ்தான் அமைத்து தந்துள்ளோம். சிறுபான்மையின மக்கள் மீது மிகுந்த அக்கறை காட்டி இஸ்லாமிய சமுதாய பாதுகாவலராக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விளங்கினார்.

அவரது வழியில் எடப்பாடியார் அவர்களும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறார். அதுமட்டுமன்றி என்றைக்குமே இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக தான் நாங்கள் இருந்து வருகிறோம்.

அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை இந்த நேரத்தில் அதிமுக சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கும் சிறுபான்மையின மக்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.