திட்டங்களை செயல்படுத்துவதில் நாட்டுக்கே தமிழகம் முன்னோடி-அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதம்

தருமபுரி
திட்டங்களை செயல்படுத்துவதில் இந்திய நாட்டுக்கே தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதத்துடன் கூறினார்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கொத்தலம், போடரஅள்ளி, தும்பலஅள்ளி ஆகிய 3 இடங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் க.ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-
இந்திய அளவில் பல மாநிலங்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் கிராமப்புற ஏழை, எளிய மக்கள் உள்ளூரிலேயே மருத்துவ வசதி பெறும் வகையில் அம்மா மினி கிளினிக்குகளை தமிழக அரசு தொடங்கி வருகிறது. கிராமப்புற ஏழை, எளிய குழந்தைகள் கல்வி பெறும் வகையில் பள்ளி கல்வித்துறை மூலம் 14 வகையான விலையில்லா பொருட்களை மாணவ, மாணவிகளுக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்து வழங்கினார்.
இந்த திட்டம் இந்தியாவில் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. திட்டங்களை செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. அதேபோல தான் ஏழை, எளிய மக்களுக்காக தமிழகம் முழுக்க 2000 இடங்களில் அம்மா கிளினிக் அமைக்கப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்துக்கு 45 அம்மா மினி கிளினிக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் என 3 பேர் ஒவ்வொரு கிளினிக்கிலும் பணியாற்றுவர். அதன்படி தற்போது தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 45 மருத்துவர்கள், 45 செவிலியர்கள், 45 மருத்துவ பணியாளர்கள் பணியமர்த்த முன்னுரிமை அளித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் காலை 8 முதல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் 7 மணி வரையிலும் பணியாற்றுவர்.
அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவம் பயில முடியாத நிலை ஏற்பட்டது. தமிழக அரசு இதை மாற்ற அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீத உள் சிறப்பு ஒதுக்கீட்டை வழங்கியது. இதன் மூலம், தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 413 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் 22 பேர் இதுவரை சேர்ந்துள்ளனர். அரசு கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ.13 ஆயிரத்து 500 கட்டணம். தனியார் கல்லூரிகளில் ரூ.5 லட்சம் கட்டணம். அதையும் அரசு பள்ளி மாணவர்களால் செலுத்த முடியாது என்பதால் அவர்களுக்கான மருத்துவப் படிப்புக்கான கட்டணத்தையும் அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.
ஏழை, எளிய மக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்த பெருமையும் முதலமைச்சரை சாரும். இவ்வாறு மருத்துவக் கல்லூரிகள் வருவதன் மூலம் அங்குள்ள அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்படும். இதுதவிர, மேலும் பல மாணவ, மாணவிகள் மருத்துவம் பயிலும் வாய்ப்பும் ஏற்படும்.
மேலும் முதலமைச்சர் கொரோனா காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி என விதி எண் 110-ன் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது.
இதன்மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர். இவ்வாறு பொதுமக்களின் தேவையை கண்டறிந்து பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. இத்திட்டங்களை பொதுமக்கள் உரியமுறையில் பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.
இவ்விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், துணைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில்குமார், வட்டாட்சியர்கள் கலைச்செல்வி, ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன், மீனா, வட்டார மருத்துவ அலுவலர் அனுராதா உள்பட பலர் கலந்து கொ