சிறப்பு செய்திகள்

அம்மா ஆட்சி மீண்டும் அமைய சிறப்பாக மக்கள் பணியாற்றுங்கள்

மே தின விழா பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எழுச்சி உரை

விழுப்புரம்,

கள்ளக்குறிச்சி மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். உடன் கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், கழக அமைப்புச் செயலாளர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள அம்மா திடலில் மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாக்கண்ணு அனைவரையும் வரவேற்றார்.

இதில் கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார், கழக அமைப்பு செயலாளர் ப.மோகன், சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன், வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனி பி.சதீஷ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரபு, அழகுவேல் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று ஏழை எளிய 5 நபர்களுக்கு தலா ரூபாய் 25 ஆயிரம், 100க்கும் மேற்பட்டோருக்கு தையல் இயந்திரங்கள், சலவை பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதன்பின்னர் அவர் பேசியதாவது:-

உழைப்பாளி ஏற்றம் பெற வேண்டும் என்றால் உழைப்பால் தான் முடியும். தொழிலாளர்களின் உரிமைகளை வென்று எடுத்த தினம் இந்த மே தினம் ஆகும். உழைப்பாளிகளை கவுரவிக்க தினம் மே தினம். மே 7-ம் தேதி வந்தால் திமுக ஆட்சி அமைத்து ஓராண்டு ஆகப்போகிறது.

கழகம் 10 ஆண்டுகளாக நிறைவேற்ற முடியாத திட்டங்களை ஒராண்டில் நிறைவேற்றியதாக மக்களை ஏமாற்றுகிறார். நாட்டு மக்களை ஏமாற்றுகிற கட்சி என்றால் அது தி.மு.க கட்சி தான். விஞ்ஞான ரீதியாக தமிழக மக்களை ஏமாற்றுகிற தலைவர் ஸ்டாலின். தற்போது வரை திமுக அரசை காப்பாற்றி வருவது ஊடகமும், பத்திரிக்கையும் தான்.

தி.மு.க அரசு மக்களுக்காக சரியான முறையில் திட்டமிடவில்லை. எப்போதெல்லாம் தி.மு.க ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழக மக்களுக்கு மின்வெட்டு ஏற்படுகிறது. கழக ஆட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். தி.மு.க ஆட்சியில் தமிழக மக்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை.

கொள்ளையடிக்கும் கும்பல் ஆட்சிக்கு வந்துவிட்டது. மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்து விட்டார்கள். மக்கள் மனதை கொள்ளையடிப்பதற்கு பதிலாக நாட்டை கொள்ளையடித்து வருகின்றனர்.

11 மருத்துவக்கல்லூரிகளை தி.மு.க கொண்டு வந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் கூறுகிறார். கழகம் பெற்ற பிள்ளைக்கு தி.மு.க பெயர் வைக்க பார்க்கிறது. கழக ஆட்சியில் நானும் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு அங்கே சில மாட்டு பண்ணைகளை பார்த்தேன். அவைகளை பார்த்து தான் கள்ளக்குறிச்சி அருகே 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1023 ஏக்கர் பரப்பளவில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டது.

முதலமைச்சர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சியில் உள்ள கால்நடை பூங்காவை வந்து பார்க்க வேண்டும். ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்காவை அம்மா அரசு அமைத்து கொடுத்தது. கள்ளக்குறிச்சியை மாவட்டமாக அறிவித்து மக்களுக்கு பரிசாக கொடுக்கப்பட்டது. ஒரே ஆண்டில் மாவட்டத்தில் 385 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவக்கல்லூரி கொண்டு வரப்பட்டது கழக ஆட்சியில் தான்.

தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்கிறார்கள். ஆனால் ஸ்டாலின் சென்ற நிகழ்ச்சிலேயே மின் வெட்டு ஏற்படுகிறது. நாட்டு மக்களை பார்க்க ஸ்டாலினுக்கு நேரமில்லை, தன் வீட்டு மக்களை பார்க்க தான் ஸ்டாலினுக்கு நேரம் உள்ளது.

கழக ஆட்சியில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஏற்படுகின்ற மின்வெட்டு காரணமாக விவசாயிகள், நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களுக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை சந்திக்கும் அரசு அம்மா அரசு தான். தி.மு.க அரசு மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது இல்லை. இனி முதற்கொண்டு எந்த காலத்திலும் தி.மு.க ஆட்சிக்கு வர முடியாது.

தி.மு.க மக்களின் எதிர்ப்பை தான் சம்பாதித்துள்ளனர். அம்மா அரசால் கொண்டு வந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதையும், திறப்பதையும் தான் ஸ்டாலின் செய்து வருகிறார். தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.

பேராசிரியராக இருந்த பொன்முடி நீட் தேர்வை அம்மா அரசு கொண்டு வந்ததாக சட்டமன்றத்தில் சொல்கிறார். நீட் தேர்வுக்கு அடிதளமிட்டதே தி.மு.க-காங்கிரஸ் தான். பொய்யின் மொத்த உருவமாக தி.மு.க திகழ்கிறது. நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க. அதை தடுக்க போராடியது கழகம் தான். அம்மா இருந்த போதிலிருந்தே கழகம் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க போராடியது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அளித்து ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றியது அம்மா அரசு தான். தற்போது வரை 540 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவர்கள் ஆகியுள்ளனர். இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள் கழக ஆட்சி தான்.

சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தியது தி.மு.க. தில்லுமுல்லு செய்து தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தி.மு.க.வினர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது ம் மக்களுக்கு தி.மு.க கொடுத்த பரிசு தான் சொத்து வரி ஏற்றம் ஆகும். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக மக்கள் துன்பப்படுகிறார்கள்.

சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கூட்டு பாலியல் பலாத்காரம், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகள் போன்ற சமூக பிரச்சினைகள் அதிகரித்துள்ளது.

சட்டம்-ஒழுங்கு அடியோடு சரிந்து விட்டது. பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் எளிதில் கிடைக்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது.

2000 அம்மா மினி கிளினிக் மூடப்பட்டுள்ளது. மூடு விழா காணுவதில் தான் சாதனை படைத்துள்ளது தி.மு.க. பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கு திட்டம் அனைத்தையும் நிறுத்தி விட்டது தி.மு.க. தமிழகம் முழுவதும் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்த அரசு அம்மா அரசு தான்.

மாணவர்களின் அறிவுப்பூர்வமான கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. கழகம் கொண்டு வந்த திட்டத்தை மூடி வருகிறது தி.மு.க அரசு. சிமெண்ட் விலை அதிகரித்துள்ளது.

கம்பி, ஜல்லி, செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை விண்ணை எட்டியுள்ளது. நடுத்தர மக்கள் வீடு கட்டும் கனவு கானல் நீராகி விட்டது. சிமெண்ட் மூட்டைக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டு, ஆண்டுக்கு 1500 கோடி வருமானம் தி.மு.க.வுக்கு போகிறது.

மக்களுக்கும், பெண்களுக்கும், மாணவர்களுக்கும் ஒட்டு மொத்தமாக பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கை காப்பாற்றியது அம்மா அரசு தான். ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டது கழக ஆட்சியில் தான். தி.மு.க சரியாக வாதடாததால் ஆன் லைன் ரம்மி விளையாட்டு நீதிமன்றத்தில் ரத்தாகவில்லை.

இதனால் இளைஞர்கள் தற்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கி மீள வழியில்லாமல் தொடர்ந்து தற்கொலை செய்து வருகின்றனர். இதனை தி.மு.க அரசு கண்டு கொள்வதாக இல்லை. நாட்டு மக்களை பற்றி தி.மு.கவுக்கோ, தற்போது உள்ள தமிழக அரசுக்கோ கவலை இல்லை.

யாரும் மறக்க முடியாத வகையில் பொங்கல் பரிசு கொடுத்த அரசு தி.மு.க. அரசு தான். பொங்கல் பரிசு வழங்குவதில் மெகா ஊழல் செய்த அரசு தி.மு.க அரசு. மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களில் கூட 500 கோடி ரூபாய் ஊழல் செய்த அரசு தி.மு.க அரசு. மக்கா சோளத்திற்கு இழப்பீடு குவிண்டாலுக்கு 2500 ரூபாய் கொடுக்கப்படும் என்ற சொன்னவர்கள் தற்போது வரை ஏன் கொடுக்கவில்லை.

விவசாயிகள் வியர்வை சிந்தி உழைத்து நெல் மணிகளை நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றால் அங்கு உள்ள அதிகாரிகள் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம் வசூலித்து விவசாயிகளின் வயிற்றில் தி.மு.க அடிக்கிறது.

3 லட்சம் நெல் மூட்டை மழையில் நனைந்து வீணாகிறது. நிர்வாக திறமை இல்லாத ஆட்சி தி.மு.க ஆட்சி. நெல் கொள்முதல் நிலையங்களை பாதுக்காக்க தவறிய அரசு தி.மு.க அரசு.

தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட குடும்ப தலைவிக்கான உரிமை தொகை தற்போது வரை வழங்கப்படவில்லை. இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை மறுந்து ஆட்சிக்கு வந்த கட்சி தி.மு.க. முதலமைச்சர் ஸ்டாலின், படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் நாமம் போட்டு விட்டார்.

100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய உயர்வு செய்யப்படும் என சொல்லியும் செய்யவில்லை. ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என சொன்னவர்கள், மத்திய அரசு குறைத்தும் 25 மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைத்தனர். ஆனால் தற்போது வரை தமிழ்நாட்டில் ஸ்டாலின் குறைக்கவில்லை.

12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர் கடனை தள்ளுபடி செய்த அரசு கழக அரசு. தி.மு.க. ஆட்சியில் 45 லட்சம் பேரில் 15 லட்சம் பேருக்கு தான் நகை கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. தி.மு.க.வை நம்பினால் நெடுத் தெருவிற்கு தான் வர வேண்டும். தி.மு.க அரசால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை.

எளிய தொண்டனாக இருந்த என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தவர்கள் கழக தொண்டர்கள் தான். கிராமம் கிராமமாக பெட்டி வைத்து மனு வாங்கிய ஸ்டாலின், இதுவரைக்கும் எத்தனை மனுக்களில் உள்ள மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டு உள்ளார். பெட்டியை நிரப்புவதில் தான் கவனம் செலுத்தினார் ஸ்டாலின். மக்கள் வழங்கிய மனுக்கள் மீது ஸ்டாலின் கவனம் செலுத்தவில்லை.

81 லட்சம் முதியவர்களுக்கு முதியோர் உதவி தொகை வழங்கிய அரசு அம்மா அரசு தான். கள்ளக்குறிச்சி கலைக்கல்லூரிக்கு அம்மா அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் இதுவரை கட்டிடம் கட்டப்படவில்லை. இந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் கழகத்தின் எக்கு கோட்டை என நிரூபிக்க வேண்டும்.

மக்களை சந்திக்க திராணியற்ற கட்சி தி.மு.க. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்புள்ளது. எனவே கழக தொண்டர்கள் சிறப்பாக மக்கள் பணியாற்றி அம்மா ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.