உழைப்பவர்களுக்கு கழகத்தில் மரியாதை நிச்சயம் உண்டு

மே தின விழா பொதுக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்
சென்னை
உழைப்பால் உயர்ந்தவர்கள் பலர் உன்னதமான இடத்தை பெற்றிருக்கிறார்கள். உழைப்பவர்களுக்கு கழகத்தில் மரியாதை நிச்சயம் உண்டு என்று சென்னையில் நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக கூறி உள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நேற்று சென்னை, புரசைவாக்கம், தானா தெருவில் நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும்,‘ சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் ஆற்றிய உரை வருமாறு:-
உழைப்பின் மேன்மையினையும், உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்கு உணர்த்தும் வண்ணம் தொழிலாளர் தினத்தை கொண்டாடி கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ‘மே தின’ நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொழிலாளர்கள் என்றாலே உழைப்பாளிகள் தான். உழைப்பில்லாமல் உயர்வு இல்லை என்று சொல்வார்கள். அதற்காக ஓய்வில்லாமல் உழைக்க முடியுமா? உழைத்திருக்கிறார்கள். 18-ம் நூற்றாண்டு வரை ஒரு நாளைக்கு 18 மணி நேரம்
வரை தொழிலாளர்கள் உழைத்திருக்கிறார்கள்.
இந்த பணி நேரத்தை குறைக்க பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றாலும், 1886-ம் ஆண்டு மே ஒன்றாம் தேதி எட்டு மணி நேர வேலை கோரிக்கையை முன் வைத்து நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்தது. இந்த போராட்டம் தான் மே தினம் உருவாக அடித்தளம்.
இதனைத் தொடர்ந்து பல போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்ற நிலையில், 1890-ம் ஆண்டு எட்டு மணி நேர வேலை என்பது அமெரிக்க அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த வெற்றிக்கு அடித்தளமாக விளங்கும் மே ஒன்றாம் தேதியை தொழிலாளர் தினமாக, உழைப்பாளர் தினமாக நாம் கொண்டாடி கொண்டு இருக்கிறோம். இதனை ஒட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர பொழுதுபோக்கு, எட்டு மணி நேர ஓய்வு என்பதை நாம் இன்றைக்கும் அனுபவித்து கொண்டு இருக்கிறோம் என்றால் இந்த உரிமைக்கு பின்னால் நூறாண்டு கால போராட்டம் இருக்கிறது. இதற்கு பின்னால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உயிர்த்தியாகங்கள் இருக்கின்றன.
இதற்கு பின்னால் ஆயிரக்கணக்கான போராளிகளின் இரத்தம் தோய்ந்த வரலாறு இருக்கிறது. இவற்றையெல்லாம் இந்த நாளில் நினைவுகூருவது என்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு எனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
தொழிலாளர்கள் நலன்களுக்காக பணிக்கொடை சட்டம், ஊதியம் வழங்குதல் சட்டம், குறைந்தபட்ச ஊதிய சட்டம், தொழிலாளர் இழப்பீடு சட்டம் என பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தொழிலாளர்களின் மேன்மையை உணர்ந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், தனது ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு பிழைப்பூதியம் வழங்குதல் சட்டம், தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (பணியாளர்களுக்கு நிரந்தர தகுதி வழங்கல்) சட்டம், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் (பணி முறைப்படுத்துதல் மற்றும் பணி நிலைமைகள் சட்டம்), குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் ஆகியவற்றை இயற்றினார்.
அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்திலே அமைப்பு சாரா தொழிலாளர்களாக இருக்கக்கூடிய கட்டுமான தொழிலாளர்களின் நலன்களுக்காக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் துவக்கப்பட்டது. இந்த வாரியத்தின் மூலம் கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, விபத்து மரணம், இயற்கை மரணம் போன்றவற்றிற்கு நிதி உதவி இன்றளவிலும் வழங்கப்பட்டு வருகிறது. விவசாய தொழிலாளர்களுக்காக கருவறை முதல் கல்லறை வரை பயனளிக்கும் உழவர் பாதுகாப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
ஒருவர் வாழ்க்கையில் வெற்றிபெற்று மிகச்சிறந்த இடத்தை அடைய வேண்டுமாயின் அதற்குத் தேவை அர்ப்பணிப்பு உணர்வும், ஈடுபாட்டுடனான உழைப்பும் தான். உழைப்பில்லா பிறப்பு இறப்பிற்குச் சமம் என்கிறார்கள்.
மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் சோம்பலை கைவிட்டு, கடினமாக உழைத்தால் மட்டுமே வையகத்தில் வாழ்வாங்கு வாழ முடியும் என்பதை தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய கடின உழைப்புதான் உங்களை சிறப்பான பாதைக்கு அழைத்துச்செல்லும். எனவே, உழைப்பை மூலதனமாக வைத்து வாழ்வில் உயர்ந்த இடத்தை நீங்கள் எல்லாம் பெற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இதைத்தான்,
“தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்”
என்கிறார் திருவள்ளுவர். அதாவது, முன்வினையால் ஒரு காரியம் நடைபெறாமல் போனாலும், நாம் உடலை வருத்தி உழைக்கும்போது அதற்கான பலன் கிடைக்கும் என்கிறார் வள்ளுவர். உழைப்புதான் நமக்கு வெற்றியை தரும் என்பதை தொழிலாளர்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். ஆறறிவு படைத்த மனிதர்களுக்கும் சரி, ஐந்தறிவு படைத்த உயிரினங்களுக்கும் சரி, ஒவ்வொருவருக்கும் உழைப்பு என்பது மிக முக்கியமானது.
தேனீக்கள் சிறிய வகை தேனை சேகரிக்க எவ்வளவு கடினமாக உழைக்கின்றன என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். உழைப்பு என்பது ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்ட வேலையை முமு முயற்சியுடன் செய்தல் ஆகும். இதனை கடைபிடித்தால் அனைவரும் உயர்ந்த நிலையை அடைய முடியும். சாதாரணமானவர்களாக பிறந்து அசாதாரணமாணவர்கள் பலர் இந்த உலகில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்களது உழைப்பே.
ஆப்ரகாம் லிங்கன், தாமஸ் ஆல்வா எடிசன், அப்துல் கலாம் என பலரை நாம் குறிப்பிடலாம். ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் நான் உங்களிடையே இந்த தருணத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அமெரிக்க ஜனாதிபதியாக புகழுடன் விளங்கியவர் ஜான் எஃப் கென்னடி. அவர் வெள்ளை மாளிகையில் தம்மைக்காண வந்திருக்கும் பார்வையாளர்களுடன் தினமும் உரையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
ஒரு நாள், பார்வையாளர்களில் பளிச்சென்று புன்னகையுடன் இருந்த மாணவன் கன்னத்தை தட்டி, “உன் எதிர்கால இலட்சியம் என்ன?” என்று கேட்டார் அமெரிக்க ஜனாதிபதி கென்னடி. அதற்கு அந்த மாணவன், “இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் நாளை நான் இருக்க வேண்டும். இதுதான் என் லட்சியம்” என்றான்.
விழிகளை உயர்த்தி, ” குட்” என்றார் அமெரிக்க ஜனாதிபதி. அமெரிக்க ஜனாதிபதியாக ஆவது தான் என் லட்சியம் என்ற அந்த சிறுவன், தன் கடுமையான உழைப்பினால், விடா முயற்சியினால் அமெரிக்க ஜனாதிபதி ஆனான். அவர் வேறு யாருமல்ல, புகழ்பெற்ற பில் கிளிண்டன். நூறு பேரை விட நீங்கள் சிறந்தவராக விளங்க வேண்டுமென நீங்கள் நினைத்தால், 99 பேரை விட கடினமாக நீங்கள் உழைக்க வேண்டும்.
கடின உழைப்பு உங்களை சிறப்பான பாதைக்கு அழைத்துச்செல்லும் என்பதை மனதில் நிலைநிறுத்தி, வாழ்வின் உயர்ந்த இடத்தை நீங்கள் எல்லாம் அடைய வேண்டும்
என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த உலகம் உழைப்பவர்களாலே வாழ்கின்றது. அதனால் அது உழைப்பவர்களுக்கே சொந்தமானது. இத்தகைய சிறப்பிற்கு சொந்தக்காரர்களான தொழிலாளர்கள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்ற
கருத்தினை வலியுறுத்தும் வகையில்,
“உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்”
என்று உழைப்பாளர்களின் உயர்வை உயர்த்தி பாடினார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவர் அவர்களும் சரி, புரட்சித்தலைவி அம்மா அவர்களும் சரி, இருவருமே உழைப்பால் உயர்ந்தவர்கள்.
ந்த உழைப்பிற்கு, கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தில் மரியாதை நிச்சயம் உண்டு. உழைப்பால் உயர்ந்தவர்கள் பலர் உன்னதமான இடத்தை பெற்றிருக்கிறார்கள். அதேபோல் தொழிலாளர்களாகிய நீங்களும் கடுமையாக உழைத்து உயர் பதவிகளுக்கு வர வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்துக் கொண்டு, உழைப்பின் மேன்மையை உள்ளத்தில் பதிய வைத்து, உழைப்பால் வீட்டையும், நாட்டையும் உயர்த்திடும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ‘மே தின’ நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்தில்