சிறப்பு செய்திகள்

காலத்திற்கு தகுந்த மாதிரி தி.மு.க. இரட்டை வேடம்- முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை

மும்மொழி கொள்கைக்கு நேரடியாக ஆதரித்து தெரிவித்திருப்பதன் மூலம் காலத்திற்கு தகுந்த மாதிரி தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்று முன்னாள் அமைச்சர் டி.ெஜயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள்

அமைச்சருமான டி.ஜெயக்குமார் நேற்று ஆஜராகி நிபந்தனை ஜாமீன் கையெழுத்திட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- இ.சி.ஆர். சாலைக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைக்கப்பட்டுள்ளதே?

பதில்:- நீண்ட காலமாக இ.சி.ஆர். ரோடு, இ.சி.ஆர். ரோடு என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பரிச்சயமான ஒரு சாலைக்கு அவர் பெயர் வைப்பதை பொதுமக்களே விரும்ப மாட்டார்கள்.

இது நிதர்சனமான உண்மை. போகிற போக்கை பார்த்தால் அதாவது சிலை வைப்பது போன்றவற்றை பார்த்தால் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என்று மாற்றினாலும் மாற்றி விடுவார்கள். இதனை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கேள்வி:- ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு உங்கள் பெயரும் அடிபடுகிறதே?

பதில்:- கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதுதான் இறுதி முடிவு. எல்லோரும் கட்சிக்கு கட்டுப்பட்டவர்கள். கட்சி என்ன பொறுப்பு கொடுத்தாலும் சரி, என்ன பணி கொடுத்தாலும் சரி அதனை தலை மேற்கொண்டு சிறப்பாக செய்வது தான் எல்லோருடைய முனைப்பும். எனவே இது கட்சி எடுக்கின்ற முடிவு.

கேள்வி:- தி.மு.க.வில் அனைத்து விஷயங்களுக்கும் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்துகிறார்களே?
நேற்று மாணவர் அணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது விஷயம் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதே?

பதில்:- இப்போது நடப்பது தி.மு.க. அரசு. பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். இன்றைய அரசுக்கு ஒரு கிங் மேக்கர் என்றால் சபரீசன், உதயநிதி. இவர்கள் இருவரும் தான் உள்ளார்கள். கனிமொழிக்கு இதில் எந்த ரோலும் இல்லை. முழுவதும் அப்செட் ஆகியுள்ளார் கனிமொழி.

இந்த இருவர் தான் தமிழகத்தின் நிழல் முதலமைச்சர்களாக இருந்து தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இதில் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அப்பா முதல்வர். மகன் சட்டமன்ற உறுப்பினர். மருமகன் பின்புலத்திலிருந்து செயல்படுகிறார். மகனை முன்னிலைப்படுத்துவதற்காக முயற்சிகள் நடக்கும்.

இன்றைக்கு அதிகாரத்தில் இருப்பதால் அவர்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம். மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே நீங்கள் ஒரு எதிர்ப்பு தெரிவித்தோ, நான் ஒரு எதிர்ப்பு தெரிவித்தோ ஒன்றும் ஆகப்போவது கிடையாது. அவர்கள் நினைப்பது மகுடம் உதயநிதிக்கு சூட்டவேண்டும் என்பதுதான்.

அதனுடைய முன்னேற்பாடு நடவடிக்கையை கொஞ்சம், கொஞ்சமாக செய்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் அவருக்கு மிகப்பெரிய பதவியை அளிப்பதற்கான வேலையை செய்து வருகிறார்கள். எங்கள் கட்சியில் கொடி பிடிக்கின்ற தொண்டன் கூட முதலமைச்சராக வர முடியும்.

கொடி கட்டிய காரில் போக முடியும். தி.மு.க.வில் எத்தனையோ முன்னோடிகள் உள்ளார்கள். எனக்கு பின்னால் முதல்வராக வருவதற்கு தகுதி உள்ளவர் துரைமுருகன், நேரு, பெரியசாமி என்று முன்னிலைப்படுத்துவாரா? ஸ்டாலின்.

இது வாரிசு அரசியல். அப்பா, மகன், பேரன் என்று தான் தொடருகிறது. இதற்கு எல்லாம் தமிழக மக்கள் தான் பதில் சொல்லக் கூடியவர்கள்.

கேள்வி:- சட்டப்பேரவையில் பேரவை மாண்பை மீறி அமைச்சர் பொன்முடி ஒருமையில் பேசுகிறாரே?

பதில்:- தி.மு.க. அமைச்சர்களிடமும் சரி, தி.மு.க. உள்ளாட்சி பிரநிதிகளிடமும் சரி மரியாதையை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் பொதுவாக ஜனநாயக அரசியலைவிட ஜமீன்தார் அரசியலைதான் நடைமுறையில் கடைபிடிப்பார்கள்.

வாயா போயா என்று ஜமீன்தார் அரசியல் செய்வார்கள். புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் எங்களுக்கு
கற்றுக் கொடுத்தது போல அதிகாரிகளை நாங்கள் மதிப்போம். மரியாதை கொடுத்து அழைப்போம். இது காவல்துறையினருக்கும் நன்றாக தெரியும்.

ஆனால் அவர்களால் வெளியில் சொல்ல முடியாது. தமிழகத்தின் உரிமை சார்ந்த ஒரு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் பங்கேற்க தமிழக அமைச்சர்களுடன் நானும் சென்று இருந்தேன். அப்போது நான் ஒரு கேள்வி கேட்டேன்.

அதற்கு செகரட்டரி பதில் சொல்ல வேண்டும். உடனே சம்பந்தப்பட்ட அமைச்சர் செகரட்டரியை பார்த்து சொல்கிறார். யோவ் செகரட்டரி இங்கு வந்து பதில் சொல்லு என்று சொல்கிறார். நானே அசந்து போனேன், அவர் ஒரு செகரட்டரி.

வெளியில் சொல்ல முடியாத நிலை இன்றைக்கு உள்ளது. செகரட்டரி ப்ளீஸ் நீங்கள் வந்து பதில் சொல்லுங்கள். இது எங்கள் பாணி. அதிகார தோரணை, ஜமீன்தார் தோரணை. வானத்திலிருந்து குதித்து வந்தது போல அவர்கள நடந்து கொள்வார்கள்.

மூன்று சதவீத வாக்கு வித்தியாசத்தில் தப்பி தவறி வந்து விட்டார்கள். அடுத்து 2026-ல் நாங்கள் அந்த மூன்று சதவீதத்தை தாண்டி

10 சதவீதத்திற்கு மேல் எடுத்து மீண்டும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆட்சி அமைப்போம். தமிழ்நாடு மக்கள் வெறுப்பில் உள்ளார்கள். இன்றைக்கு சட்டம்- ஒழுங்கு எப்படி உள்ளது. காவல்துறையில் உள்ள காவல்துறை உதவி ஆய்வாளருக்கு பாதுகாப்பு இல்லை. பெண் காவல் உதவி ஆய்வாளர் கழுத்தறுக்கப்படுகிறார்.

போதை பொருட்களின் நடமாட்டம் அதிகமாகி விட்டது. லாக் அப் மரணங்கள் அதிகரித்து விட்டது. விலைவாசி உயர்ந்து விட்டது. தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றுகூட நிறைவேற்றாத நிலை. மக்கள் கொதித்துப்போய் இருக்கிறார்கள்.

2024-ல் நாடாளுமன்ற தேர்தல் வரும்போது இதன் பாதிப்பு தெரியும். இந்த ஆட்சியின் அவலத்தை மக்கள் உணர்ந்து நிச்சயமாக மகத்தான வெற்றியை எங்களுக்கு தருவார்கள். அனைத்து இடங்களிலும் நாங்கள் மகத்தான வெற்றி பெறுவோம். அதே நேரத்தில் சட்டமன்ற தேர்தலிலும் மகத்தான வெற்றியை
பெற்று புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆட்சி கண்டிப்பாக மலரும். அந்த அளவுக்கு தான் இன்றைக்கு நிலைமை இருக்கிறது.

கேள்வி:- மதுரை மருத்துவக் கல்லுரி பட்டமளிப்பு விழாவில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்தது தொடர்பாக டீன் மாற்றப்பட்டுள்ளாரே?

பதில்:- தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இரு மொழி கொள்கைதான். தி.மு.க. வேண்டுமானால் காலத்திற்கு தகுந்த மாதிரி இதில் இரட்டை வேடம் போடலாம். இவர்கள் சாதனைகள் எல்லாம் இந்தியில் இணையத்தில் போடுவதும், இந்தியில்
பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்புவதும் என வழக்கமாக தி.மு.க. செய்து வருகிறது.

ஆங்கிலம் இணைப்பு மொழி. தமிழ் நமது ஆட்சி மொழியாக இருக்கும் நிலையிலே ஆங்கிலம் நமக்கு இணைப்பு மொழி. இணைப்பு மொழிக்கு இந்தியை பயன்படுத்துகிறார்கள் என்றால் எந்த அளவுக்கு இவர்கள் தமிழுக்கு துரோகமும், மும்மொழி கொள்கைக்கு நேரடியாக ஆதரிப்பது தான் இன்றைக்கு தி.மு.க.வின் நிலைபாடு.

சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற வகையில் கொள்கைகளை மாற்றிக்கொள்வதில் அடிக்கடி நிறத்தை மாறி கொள்ளக்கூடிய பச்சோந்திகளாக இன்றைக்கு தி.மு.க. உள்ளது.

கேள்வி:- அக்னி நட்சத்திரம் 4-ந் தேதி தொடங்குகிறது. தேர்வு 6-ந் தேதி தொடங்குகிறது. இதன் மீது உங்கள் கருத்து என்ன?

பதில்:- ஒவ்வொரு துறையிலும் ஆட்சியின் திறமையின்மை தெளிவாக தெரிகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு திருப்புதல் கேள்விதாள் அவுட். இதில் இப்படி என்றால் முக்கிய தேர்வுகள் எப்படி இருக்கும்.

இதற்கு அதிகாரிகளை பலியாக்குகிறார்கள். ஏன் அமைச்சர் பொறுப்பேற்றுக் கொள்வது தானே? ஒவ்வொரு முறையும் அடுத்த முறை நடக்காது என்பார்கள்.

ஆனால் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. பள்ளிகளை பொறுத்தவரையில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பெற்றோர்களின் கருத்தை கேட்க வேண்டும். எங்கள் ஆட்சியில் சரியான நேரத்தில் செய்தோம். இவர்கள் செய்த தவறியதன் விளைவுதான் இதுபோன்ற வெயில் நேரங்களில் தேர்வு என்பது.

கேள்வி:- தற்போது மாணவிகளும் சாலைகளில் சண்டை போடும் நிலைமை வந்து விட்டதே?

பதில்:- இது ஒரு கவலைக்குரிய விஷயம். பள்ளி கல்வித்துறை விழிப்போடு இருந்தால் இதுபோன்ற சம்பங்கள் நடக்காது. எங்கள் ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இருந்ததா? சமூக ஊடகங்களில் மாணவ, மாணவிகளின் விஷயங்கள் தொடர்ந்து
வந்து கொண்டிருக்கிறது. பள்ளி கல்வித்துறை தூங்கி கொண்டிருக்கிறதா? அமைச்சர் தூங்கி கொண்டிருக்கிறரா?

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.