சிறப்பு செய்திகள்

மின்வெட்டே தி.மு.க. அரசின் சாதனை – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் விளாசல்

திண்டுக்கல்

மின்வெட்டு தான் தி.மு.க. அரசின் சாதனை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் பாகல் நகரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் டாக்டர் அ.தமிழ்மகன் உசேன், தலைமை கழக பேச்சாளர்
ருத்ராதேவி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-

சினிமாவை சமூகத்தின் பழுது நீக்கும் ஆயுதமாய் பயன்படுத்தியவர் தான் புரட்சித்தலைவர். தன் திரைப்படங்களை சமூகத்திற்கு வாழ வழி காட்டும் பாடங்களாக மாற்றியவர். வியர்வை சிந்தி உழைக்கும் ரிக்சா தொழிலாளிகளின் உன்னதத்தை ரிக்சாக்காரன் திரைப்படம் மூலம் சமூகத்திற்கு உணர்த்தினார்.

அதேபோல வாழும் மீனவ சமூகத்தின் உழைப்பின் மேன்மையை படகோட்டியில் நடித்து காட்டினார். விவசாயி அழத்தொடங்கினால் அந்த நாடு வீழ தொடங்கி விடும் என்பதை விவசாயி படம் மூலமாக திரையிட்டு காட்டினார். இதேபோல தோட்ட தொழிலாளர்களின் அயராத உழைப்பை இதயக்கனி மூலமாகவும் வெளிப்படுத்தியவர் நம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

நெசவாளர்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்பதற்காக தான் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கினார் அம்மா. சட்டசபையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில் அம்மாவின் ஆட்சி காலத்தில் மின் உற்பத்தியில் தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்ந்தது. அம்மா மறைவிற்கு பின்னர் நான்கரை ஆண்டு கால கழக இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் ஆட்சியில் வானில் வேண்டுமானால் மின்வெட்டு இருக்கலாம்.

தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது என்ற நிலை இருந்து வந்தது என ஆணித்தரமாக கூறினார். அதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி புள்ளிவிபரம் தெரிவித்தார். அது எதுவுமே எடுபடவில்லை.

ஏன் மின்தடை வந்தது என காரணம் மட்டுமே அவரால் கூற முடிந்ததே தவிர, 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கினோம் என அவரால் கூற முடியவில்லை.

ஆற்காடு வீராசாமி மின்துறை அமைச்சராக இருந்தபோது தி.மு.க ஆட்சி போனால் அதற்கு மின்வெட்டே காரணம் என கூறினார். அந்த வருடமே தி.மு.க ஆட்சி விடைபெற்றது. இப்பொழுது அடுத்தபடியாக செந்தில்பாலாஜி வாய் மலர்ந்து உள்ளார்.

இந்த ஒரு வருட ஆட்சியில் தி.மு.க அரசு செய்திருக்கிற சாதனை மின்வெட்டு, மின்வெட்டு, மின்வெட்டு தான். மக்களுக்கு கொடுத்துள்ள வேதனை தான். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால் ஆட்டோ தொழிலாளர்கள் மிகுந்த கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். பயணிகளின் கட்டணமும் அதிகரித்து உள்ளது.

தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்று நாட்களில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்றார்கள். பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 மட்டுமே குறைத்துள்ளனர். டீசல் விலையை குறைக்கவில்லை. மற்ற மாநிலங்களில் எல்லாம் லிட்டருக்கு ரூ.10 வரை குறைத்துள்ளனர்.

சட்டசபையில் எடப்பாடியாரும், ஓ.பன்னீர் செல்வமும் குடும்பத்தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்குவோம் என்று கூறினீர்களே, அது என்னாச்சு என கேட்டனர். அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் எந்த தேதியில் இருந்து குறைப்போம் என கூறியுள்ளோமா? பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முயற்சி செய்வோம் என்றார்.

தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆயிற்று? எதையாவது நிறைவேற்றி உள்ளார்களா? கிடையாது.இலங்கை அரசுக்கு உதவி செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் தி.மு.க. அரசு அனுமதி கேட்கிறது. அந்த தீர்மானத்தை கழகம் ஆதரித்துள்ளது.

வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இலங்கைக்கு உதவி செய்யக்கூடாது. தமிழர்களை கொத்துக்கொத்தாக கொன்று சாய்த்த இலங்கைக்கு என் உதவி செய்ய வேண்டும் என்று கூறினார்.
உண்மையில் இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்ளும் என்பதற்கு ஏற்றார் போல் அன்று லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு இறைவன் தண்டனை அளித்துள்ளான். இலங்கை அதிபருக்கும், பிரதமருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. சகோதரர்களுக்குள்ளே கடும் யுத்தம் நடைபெறுகிறது.

இருந்தாலும் மறப்போம் மன்னிப்போம். இலங்கை அரசுக்கு உதவி செய்வோம் எனக்கூறி சட்டமன்றத்தில் தி.மு.க. அரசு கொண்டு வந்த தீர்மானத்தை எடப்பாடியாரும், ஓ.பன்னீர்செல்வமும் ஆதரித்தனர்.

மக்களுக்கான நலத்திட்டங்களோ, செயலோ எதுவானாலும் அதனை ஆதரிக்கின்ற முதல் கட்சி அ.தி.மு.க. தான். மக்களுக்கு எதிரான திட்டங்கள் இருந்தால் அதனை கழகம் கடுமையாக எதிர்க்கும்.

கடந்த கால தி.மு.க. ஆட்சியில் திண்டுக்கல்லுக்கு மருத்துவக்கல்லூரி கொண்டு வருவதாக கூறி ஒரு கல்லை மட்டும் வைத்து பூஜை செய்தனர். ஆனால் அதற்கான இடமும் நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. கடைசி வரை கல்லூரி வரவில்லை. கழக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அம்மாவிடம் நேரடியாக இதுகுறித்து முறையிட்டேன்.

துரதிர்ஷ்டவசமாக அம்மா மறைவுக்கு பின்னர் எடப்பாடியாரும், ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியிடம் முறையிட்டு 11 மருத்துவக்கல்லூரிகள் தமிழகத்துக்கு வருகை பெற செய்தனர்.

அதில் முதல் மருத்துவக்கல்லூரி திண்டுக்கலுக்கு கிடைத்த பெருமை எடப்பாடியாருக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் தான். ஆனால் திறப்பு விழாவுக்கு கூட என்னை அழைக்கவில்லை. நாங்கள் பெற்ற பிள்ளைக்கு இவர்கள் பெயர் வைக்கிறார்களே இது நியாயமா?

தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றனர். ஆனால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாமல் தமிழக மக்களின் நெற்றியில் நாமம் தான் போட்டுள்ளனர்.

நகைக்கடன்களை அனைவருக்கும் திருப்பி தரப்படும் என கூறிவிட்டு தற்போது பல சட்ட திட்டங்களை விதிப்பது முறையா? சொத்து வரியையும் பல மடங்காக உயர்த்தி விட்டனர். நரிக்குறவர் வீட்டில் வெள்ளித்தட்டில் ஸ்டாலின் சாப்பிட்டாராம். எந்த நரிக்குறவர் வீட்டில் வெள்ளித்தட்டு இருக்கிறது.

சாதாரண தட்டே கிடையாது. இதுவெல்லாம் ஸ்டாலின் நடத்தும் நாடகம். மக்களை ஏமாற்றும் செயல். சாதாரண எளிய முதல்வராக இருந்தவர் தான் எடப்பாடியார்.

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கழகம் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் தோல்வியை தழுவியது. இதனால் தி.மு.க. ஆட்சியை பெற முடிந்தது. அம்மா எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது 62 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால், தற்போது 75 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற்றுள்ளனர்.

இப்பொழுது தி.மு.க புதிய போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர். ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டுக்கு ஆளுநர் எதற்கு என்கின்றனர். தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த பொழுது ஸ்டாலினே தனது சட்டையை கிழித்துக்கொண்டு சந்திப்பதற்கு ஆளுநர் தேவை. இப்பொழுது தேவை இல்லையாம்.

கழக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு தரமாக வழங்கப்பட்டது. ஆனால், தற்போதுள்ள தி.மு.க. ஆட்சியில் தரமற்ற பொருட்களை வழங்கி ஊழல் நடைபெற்றுள்ளது.சித்திரை திருவிழாவில் 4 பேர் பலி, தஞ்சை தேர் திருவிழாவில் 11 பேர் சாவு, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீ என விபத்துகள் தி.மு.க .ஆட்சியில் நடந்து கொண்டே வருகிறது.

துபாய்க்கு அரசு செலவில் தனது குடும்பத்துடன் சென்ற ஸ்டாலினை எடப்பாடியார் தட்டி கேட்டார். அதற்கு பதிலளித்த தங்கம் தென்னரசு தி.மு.க செலவில் தான் சென்றோம் என்றார். தி.மு.க செலவில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செல்லலாமா? தி.மு.க ஆட்சி விரைவில் வீட்டிற்கு செல்ல இந்த மே தினத்தில் அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு வேண்டுவோம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.