விளம்பரத்தால் மட்டுமே ஓடுகிறது தி.மு.க. அரசு

எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு
கோவை
கொலை, கொள்ளைகள் அதிகரித்து தமிழ்நாடு முழுவதும் சட்டம்- ஒழுங்கு சீரழிந்து விட்டதால் விளம்பரத்தால் மட்டுமே தி.மு.க. அரசு ஓடுகிறது என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார்.
கோவை புறநகர் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பொள்ளாச்சியில் மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பி.ஆர்.கே.குருசாமி தலைமை வகித்தார்.
கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், நகர கழக செயலாளருமான கிருஷ்ணகுமார், தொழிற்சங்க மாவட்ட நிர்வாகிகள் பொன் துரைசாமி, இ.கே.பழனிசாமி, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ். பி.வேலுமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
கோடான கோடி மக்களின் நெஞ்சங்களில் குடி கொண்டிருக்கும் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் தொழிலாளர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களின் நலன் காக்கும் பொருட்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார்கள்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தொழிலாளர்களின் நலன் காப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகிறார்கள்.
ஆனால் தமிழகத்தில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தி.மு.க. தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. மேலும் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கியுள்ளது.
தேர்தல் வாக்குறுதியின் போது பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக கூறினார்கள். அதுவும் செய்யவில்லை. பத்திரிகைகளில் விளம்பரங்கள் மட்டுமே கொடுத்து ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு.
தற்போது தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை மற்றும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை அதிகரித்துள்ளது. மேலும் சமீபகாலமாக தமிழகம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மக்களுக்காக எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை.
கழகத்தின் மீது பொய் வழக்கு போட்டு முடக்க நினைக்கின்றனர். தி.மு.க. ஆட்சியில் காவல்துறை மிக மோசமாக நடந்து கொள்கிறது. தி.மு.க.வுக்கு அடிமையாக காவல்துறையினர் உள்ளனர். எங்களுக்கு வழக்குகளை பற்றி கவலையில்லை.
கழக ஆட்சியில் மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்தோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அத்திட்டங்களை தொடராமல் கிடப்பில் போட்டு விட்டது. சட்டமன்ற தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்ற தி.மு.க. மக்களுக்கு தந்த பரிசு சொத்துவரி உயர்வு தான். கழக ஆட்சியில் 10 ஆண்டு காலமாக சொத்து வரியை உயர்த்தவில்லை. மக்களை பற்றி கவலைப்படாத அரசாக தி.மு.க. அரசு உள்ளது.
தி.மு.க. ஆட்சியில் கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சாதாரண மக்கள் வீடு கட்ட முடியுமா?
மேலும் சொத்து வரியை உயர்த்தி மக்களை சீரழித்து வருகின்றனர். மக்களுக்கான திட்டங்களை தி.மு.க. நிறைவேற்றாவிட்டால் நாங்கள் போராடியாவது பெற்று தருவோம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பேசினார்.
முன்னதாக தலைமை கழக பேச்சாளர்கள் கோபி.காளிதாஸ், எஸ்.சாரதா, அண்ணா தொழிற்சங்க தோட்ட தொழிலாளர் பிரிவு செயலாளர் பொன்.ஜெயசீலன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரையாற்றினர்.