தற்போதைய செய்திகள்

மத்திய அரசை காரணம் காட்டி தி.மு.க அரசு தப்பிக்க முயற்சி – மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் குற்றச்சாட்டு

அம்பத்தூர்

விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசை காரணம் காட்டி தி.மு.க. அரசு தப்பிக்க முயற்சிக்கிறது என்று திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் பேசினார்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன் தலைமையில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர், முன்னிலையில் அம்பத்தூர் ஓட்டி பேருந்து நிலையம் அருகே மே தின பொதுக்கூட்டம் மற்றும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி எஸ்.ஆர்.விஜயகுமார், முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம், தலைமை கழக பேச்சாளர்கள் இடிமுரசு ரவி, கழக கலைப்பிரிவு செயலாளர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியோடு ஆட்டோ ஓட்டுனர் மற்றும் தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கு சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் பேசியதாவது:-

விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் உயர்வு போன்றவற்றுக்கு மத்திய அரசை காரணம் காட்டி தி.மு.க அரசு தப்பிக்க முயற்சிக்கிறது. அதுமட்டுமில்லாமல் தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக கேள்விக்குறியாகி உள்ளது.

எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பலாத்காரம் போன்ற கொடூர சம்பவங்கள் தி.மு.க ஆட்சியில் சர்வ சாதாரணமாக நடக்கிறது. கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கும் போது கவுன்சிலர், முதல் எம்.எல்.ஏ, அமைச்சர் வரை என்று அனைவரும் பொதுமக்களுக்கு செலுத்தினர்.

அப்போது மத்திய அரசாங்கத்தின் மீது பழி சொல்லாத திமுக தமிழகம் முழுவதும் மின் வெட்டு ஏற்படும் போது மட்டும் மத்திய அரசின் மீது குறை கூறுகிறது. அ.தி.மு.க.விலிருந்து வந்தவர்களை அமைச்சராக்கி நீங்கள் தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கிறீர்கள் என்று கூறினார்.

கழக மாணவரணி செயலாளர் முன்னாள் எம்.பி.எஸ்ஆர் விஜயகுமார் பேசுகையில், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நடித்த ஒரு படத்தின் காட்சியில் அங்கு படப்பிடிப்பில் இருந்த சில பெண்கள் கிழிந்த உடையில் வந்திருந்ததை பார்த்த புரட்சித்தலைவி அம்மா படப்பிடிப்பை காரணம் சொல்லாமலேயே சில நாட்கள் தள்ளி வைத்துள்ளார்.

பின்னர் தனது சொந்த செலவில் 250 புடவைகள் வாங்கிக்கொடுத்து வேலைக்காரியாக நடிக்கும் நான் மட்டும் நல்ல புடவை எடுத்துக் கொள்வேன் மற்ற அனைவரும் கிழிந்த புடவை உடுத்துவதா என்று கேட்டார் இது தான் புரட்சித்தலைவி அம்மா.

புரட்சித்தலைவர் ஒருமுறை நடித்துக்கொண்டிருக்கும் போது அங்கு இருந்த ஒரு லைட் திடீரென நின்று விட்டது அந்த லைட்மேனை வரச்சொன்ன புரட்சித்தலைவர், அவரின் மகள் படிப்பு செலவிற்காக இரவும் பகலும் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருந்ததால் அவர் மயங்கி விழுந்தது தெரிய வந்தவுடன் அவரது மகளின் பள்ளிப்படிப்பை படிப்பிற்கு அந்த காலத்திலேயே பத்தாயிரம் ரூபாயை கொடுத்து அவரை தனது காரில் வீட்டுக்கு அனுப்பி ஓய்வு எடுக்க சொன்னார் நமது தலைவர். இதுபோன்ற காரணங்களால் தான் உழைப்பாளர் தினம் அ.தி.மு.க.வுக்கு மிகவும் உகந்த தினமாக கருதப்படுகிறது என்றார்.

கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் திண்டு உத்தமராஜ், முகப்பேர் பாலன், காமராஜ் நகர் ரவி, இந்திராணி, பகுதி செயலாளர்கள் கே.பி.முகுந்தன், சிவிமணி, ஜான், எம்.டி.மைக்கேல்ராஜ், எல்.என்.சரவணன், வக்கீல் அறிவரசன், வழக்கறிஞர் சுருளிராஜன், வனிதா சாக்ரடீஸ், கே.மலைராஜன், முல்லை தயாளன், பிரகாஷ், சங்கர், ஹேமந்த், உட்பட மாவட்ட கழக பகுதி கழக வட்ட கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். டன்லப் எஸ்.வேலன் நன்றி கூறினார்.