தற்போதைய செய்திகள்

தி.மு.க.வினர் வாயால் வடை சுடுவார்கள்-முன்னாள் அமைச்சர் செ.செம்மலை கடும் தாக்கு

தருமபுரி

தி.மு.க.வினர் வாயால் வடை சுடுவார்கள். தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர், அமைச்சர்கள் யாருக்கும் நிர்வாக திறமைகள் இல்லை என்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செ.செம்மலை கூறி உள்ளார்.

தருமபுரி மாவட்ட கழகத்தின் சார்பில் கழக பொன்விழா நிறைவு மற்றும் 51ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தருமபுரி குமாரசாமி பேட்டை வாரியார் திடலில் கழக அமைப்பு செயலாளரும், தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

கழக அமைப்பு செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சிங்காரம், கழக விவசாய பிரிவு தலைவர், மாவட்ட பால் வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, அரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வே.சம்பத்குமார், மாவட்ட கழக அவைத் தலைவர் தொ.மு.நாகராஜன், மாவட்ட கழக துணை செயலாளர்கள் செண்பகம் சந்தோஷம், ராஜேந்திரன், மாவட்ட கழக பொருளாளர் நல்லதம்பி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர கழக செயலாளர் பூக்கடை ரவி வரவேற்புரையாற்றினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செ.செம்மலை, முன்னாள் எம்.பி. எஸ்.முத்துமணி, புதூர் மணி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

இதில் முன்னாள் அமைச்சர் செ.செம்மலை பேசியதாவது:-

தி.மு.க.வினர் வாயால் வடை சுடுவார்கள். தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர், அமைச்சர்கள் யாருக்கும் நிர்வாக திறமைகள் இல்லை. எதற்கெடுத்தாலும் குழு அமைக்கிறது திமுக அரசு. கழக அரசில் இந்தியாவில் உயர்கல்வித்துறை முதலிடம் பெற்றது. நீட் பிரச்சினையில் மக்களை, மாணவர்களை திமுக ஏமாற்றியது. நீட் என்பது மத்திய மாநில அரசுகள் கையில் இல்லை.

உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதின் அடிப்படையில் நீட்டுக்கு விதிவிலக்கு கொடுக்க முடியாது. ஏனென்றால் என்ன நோக்கத்திற்காக இந்த நீட் கொண்டு வரபட்டதோ அந்த நோக்கம் சரியான நோக்கம் அது சரியான நோக்கமாக இருக்கின்ற காரணத்தால் இந்த நீட் விதிவிலக்கு யாருக்கும் கிடையாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. யார் நினைத்தாலும் நீட் விதிவிலக்கு செய்ய முடியாது. இதைபற்றி சிந்திக்க நிர்வாக திறமை ஸ்டாலினுக்கு இல்லை.

ஆனால் எடப்பாடியார் என்ன செய்தார் தெரியுமா? 7.5 சதவீத இடஒதுக்கீடு தந்தார். அதன் மூலம் அரசு பள்ளிகளில் கிராமத்தில் படித்த 595 பேர் இன்று ஆண்டு தோறும் மருத்துவர்களாகிருக்கின்றனர். இது தான் சாதனை இது தான் ஒரு ஆட்சியாளரின் நிர்வாக திறமையை எடுத்து காட்டுவதாக அமைகின்றது. ஒரு ஆட்சி என்றால் ஒரு சிக்கலும் தீர்வு ஏற்படுத்த வேண்டும். குழு அமைத்து ஒரு பிரயோஜனம் இல்லை. எடப்பாடியார் கூறியது போல இது குழு அரசாங்கம். இது நியாயம் இல்லை.

அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் காவல்துறையினர் நிம்மதியாக இருந்தார்கள். ஆனால் இப்போது திமுக ஆட்சியில் ஒரே டார்ச்சர். கழக தொண்டர்கள் நிர்வாகிகள் மனதை தளரவிட வேண்டாம். அமைதியாக இருங்கள். மக்கள் இன்று வெறுத்து போய் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதாவது சூழ்நிலை நமக்கு சாதகமாக உள்ளது. நாம் அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் செய்ய வேண்டியது கடமையே கண்ணாக இருக்க வேண்டும். அதுதான் நமக்கு மிக மிக முக்கியம்.

அடிப்படை அறிவு இல்லாமல் தி.மு.க.வினர் பேசுகின்றனர். தலைக்கு மேல் கத்தி இருப்பதை செந்தில் பாலாஜி போன்றவர்கள் மறந்து விடக்கூடாது. அதிமுக மீது மக்களுக்கு ஒரு அவ நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் முன்னாள் அமைச்சர்கள் மீது ஒரு நம்பிக்கை இல்லாத நிலைமையை ஏற்படுத்த வேண்டும். ஆனால் திமுக மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் தெரிந்து கொண்டார்கள். யார் நல்லவர்கள், கெட்டவர்கள். குழப்பம் தீர்ந்து விட்டது.

இனி நீங்கள் மக்களை அனுக வேண்டும். கழக ஆட்சியில் செய்த சாதனைகள் எடுத்து சொல்லவும். 11 மருத்துவக்கல்லூரிகள் ஒரே ஆண்டில் வாங்கப்பட்டது கழக ஆட்சியில். வாய்ப்புகளை உருவாக்கி தருவது தான் அரசாங்கத்தின் கடமை. அந்த கடமையை சரியாக செய்ய வேண்டும். ஆனால் திமுகவினர் அதைப்பற்றி கவலைப்படவில்லை. திராவிட மாடல் தத்துவம். மக்கள் எப்படியோ பிழைத்து கொள்ளுங்கள். இந்த ஆட்சி உங்களை காப்பாற்றாது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

மக்கள் நல அரசாக திமுக நிச்சயமாக இல்லை. மக்கள் விரோத அரசாகத்தான் இது நடந்து கொண்டிருக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கும் விழும் அடி, அந்த கட்சி சட்டமன்ற தேர்தலில் ஓட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் எச்சரிக்கையாக இருந்து தேர்தல் மூலமாக இந்த ஆட்சியாளர்களுக்கு நமது எதிர்ப்பை தெரிவித்து நாடாளுமன்ற வெற்றி மூலமாக சட்டமன்ற தேர்தலில் கழக ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமைகிற அந்த ஒரு நல்ல காரியத்தை நீங்கள் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் செம்மலை பேசினார்.