இளைஞர் சமுதாயத்தை கசக்கிப்பிழிந்து பகல் கொள்ளை அடிக்கிறது தி.மு.க அரசு-சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம்

மதுரை,
வாகன விதிமீறல் என்ற பெயரில் மிகப்பெரிய பொருளாதார சுரண்டல் நடவடிக்கையை கையாள்கிறது தி.மு.க. அரசு என்றும் இளைஞர் சமுதாயத்தினரை கசக்கிப்பிழிந்து பகல் கொள்ளையடிக்கிறது விடியா தி.மு.க. அரசு என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
இன்றைக்கு 50 ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விதிக்கப்பட்டு வருகிறது. இந்திய அளவில் சாலை விபத்துக்கள் எண்ணிக்கை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது என்பது வருத்தமான செய்தி. கடந்த ஆண்டில் மட்டும் 11,419 பேர் சாலை விபத்துகளால் மரணம் அடைந்துள்ளனர்.
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் சாலை விபத்து குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். சட்டம் மக்களை பாதுகாக்க தான், சுதந்திரம் எல்லை மீறும் போது பாதுகாப்பான சட்டத்தை தர வேண்டும். ஆனால் மக்களுக்கான பாதுகாப்பு சட்டம் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் தற்போது உள்ளது.
கடந்த ஒரு வார காலமாக எங்கு பார்த்தாலும் வேதனை குரல். இளைஞர்கள் எழுப்பி வருகிறனர். அப்படி என்ன இந்த அரசு இளைஞர்களை கசக்கிபிழிகிறது என்று பார்த்தால், தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று கூறிய தி.மு.க. அது குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.ஆனால் கடமைக்காக பெட்ரோல் விலையை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.
கொரோனா காலத்தில் மக்கள் வேதனையில் கிடந்து பல்வேறு கடன் சுமையை ஏற்றனர். தற்போது திமுக அரசு பொறுப்பேற்றதும் சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு என்ற மிகப்பெரிய பொருளாதார சுமையை மக்கள் மீது சுமத்தியிருக்கிறது.
இந்தவேளையில், வாகன விபத்துகளை சீர்படுத்துகிறோம் என்ற பெயரில் மிகப்பெரிய பொருளாதார சுரண்டலை மக்களிடத்திலே, இளைஞர்களிடத்திலே தி.மு.க. அரசு செய்கிறது. இது தமிழக முழுவதும் மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு போய்விட்டது. இன்றைக்கு பத்தாயிரம், 20 ஆயிரம் என்று சாமானிய இளைஞர்கள் மாத சம்பளம் வாங்குகிறார்கள்.
இன்றைக்கு கொடுமை என்ன என்றால் லிப்ட் கேட்டவர் ஹெல்மெட் போடவில்லை என்ற காரணத்தினால் வாகன ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. லைசென்ஸ் இல்லையென்றால் 5000 ரூபாய், எல்எல்ஆர் இருந்தால் கூட அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதெல்லாம் இன்றைக்கு ஊடகங்களில் விவாதமாக நடந்து கொண்டிருக்கிறது.
பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் இளைஞருக்கு 22,000 அபராதம் விதித்தால், நான் எங்கே அபராதம் செலுத்த முடியும் என்கிறார்கள். அரசு மிகப்பெரிய கட்டமைப்பை வைத்துள்ளது. போக்குவரத்து விதிகளை செயல்படுத்துவதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, புதிய சட்டம் உருவாக்குவதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, ஆனால் அரசு செய்ய வேண்டிய பணிகளை செய்ய தவற விட்டது.
கட்டமைப்புகளை உருவாக்கி, மேம்படுத்தி, அதேபோல் பெட்ரோல் டீசல் விலையை குறைத்து, வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து அந்த இளைஞர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்க வேண்டிய அரசு, இன்றைக்கு இருள் சூழ்ந்த நடவடிக்கையை எடுத்ததால் வேதனையில் இருக்கிறது ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயம்.
தமிழகத்தில் ஏறக்குறைய இரண்டரை கோடி இருசக்கர வாகனங்கள் உள்ளன. இந்த இரண்டரை கோடி இருசக்கர வாகனத்திற்கும் இந்த அரசு அபராதம் விதிக்குமோ? இது மறைமுக பொருளாதார சுரண்டல் இல்லையா? இது மக்களை அச்சுறுத்தும் செயல். இளைஞர்களை முடக்கும் செயல்.
அபராதம் என்பது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர, அது பகல் கொள்ளையாக இருக்கக்கூடாது. இளைய சமுதாயத்தில் நம்பிக்கை ஒளி ஏற்ற வேண்டிய அரசு, இன்றைக்கு வாகன விதிமீறல் என்று சொல்லி அபாண்டமாக ஒரு பொருளாதார சுரண்டலை இந்த இளைய சமுதாயத்தின் மீது ஏவி விட்டு இருக்கிற மிகப்பெரிய தாக்குதல் ஆகும்.
ஆகவே இந்த அரசு கணிவுடன் பரிசீலிக்க வேண்டும், அரசின் நடவடிக்கையில் மனித நேயம் இருக்க வேண்டும், நோக்கம் சரியானதாக இருக்க வேண்டும், மக்களை பாதுகாக்கின்ற வழியாக இருக்க வேண்டுமே தவிர, புதை குழியில் தள்ளுவதாக அமைந்து விடக்கூடாது, ஏற்கனவே பொருளாதார சவால்களை எதிர்கொள்ளாமல் எத்தனை தற்கொலைகள் நடக்கும் அவல நிலையை, செய்திகளை பார்த்து நாம் வேதனை அடைகிறோம். கவலை அடைகிறோம் அரசு கட்டமைப்புகளை மேம்படுத்திட வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்கட்டும். ஆனால் அபராதம் என்பது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர, அபாயகரமான கட்டணமாக இருக்கக்கூடாது.
இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.