நிவாரண தொகையை தி.மு.க. அரசு இதுவரை முறையாக வழங்க வில்லை – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

மதுரை
வடகிழக்கு பருவழைக்கு தமிழகம் முழுவதும் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையை தி.மு.க. அரசு இதுவரை முறையாக வழங்கவில்லை என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.
மதுரை உயர்நீதிமன்ற மகா வழக்கறிஞர்கள் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் புதூர் வி.ராமகிருஷ்ணனுக்கு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் தமிழ்நாடு பிராமண சங்க மாநில துணைத்தலைவர் இல.அமுதன், மதுரையின் அட்சய பாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு ஆகியோர் இருந்தனர்.
பின்னர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மதுரை மாநகராட்சி மற்றும் மதுரை மாநகராட்சி ஒப்பந்த நிறுவனம் அலட்சியத்தாலும் பலியாகும் அப்பாவி தொழிலாளர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு இருக்கிறது. கடந்த ஏப்ரல் 6-ம்தேதி பழங்காநத்தம் தொடங்கி தற்போது கூடல்புதூர் வரை 6பேர் பலியாகி உள்ளனர்.
கூடல்புதூரில் பாதாள சாக்கடைக்கு குழி தோண்டும் பொழுது 10 அடி பள்ளத்தில் சக்தி என்பவர் பலியாகி உள்ளார். இவர் 5 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு சடலமாக மீட்கப்பட்டார். அவரை நம்பி அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.
மதுரையில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் பருவமழை காலத்தில் இதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைத்தான் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் வலியுறுத்தி வருகிறார்.
இந்த பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. இந்த காரணத்தினால் தான் இதுபோன்று உயிர்ப்பலி தொடர்கிறது. இதை தடுக்க மதுரை மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. மதுரை மாநகராட்சியின் அலட்சியப்போக்கால் தொழிலாளர்கள் உயிர்பலி அதிகரித்துக்கொண்டே இருப்பது வேதனை அளிக்கிறது.
மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக்கு இதுவரை 173 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதற்கெல்லாம் உரிய நிவாரணங்களை கணக்கெடுத்து அரசு நிவாரண உதவிதொகை வழங்க வேண்டும். அதேபோல் தமிழக முழுவதும் வடகிழக்கு பருவமழைக்கு இதுவரை 26பேர் இறந்ததாக அரசின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து அவர்கள் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் கூட கொடுக்கவில்லை. அதையும் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழையால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. அதை கணக்கெடுத்து நிவாரணம் மற்றும் இடுபொருள் நிவாரணம் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க வேண்டும்.
உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பல்வேறு பகுதியிலிருந்து மக்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். குறிப்பாக கீழ சித்திரை வீதியில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.
பொதுமக்கள் நிம்மதியாக சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வரும் போது துர்நாற்றம் வீசுகிறது. மழை நீரில் சாக்கடை கலந்து வருகிறது. இதையெல்லாம் சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வடகிழக்கு பருவமழையில் 48 சதவீதம் தண்ணீர் நமக்கு கிடைக்கும். ஆனால் இந்த பருவமழையில் 75 சதவீதம் தண்ணீர் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்று எடப்பாடியார் ஆட்சி காலத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி, கண்மாய், குளங்கள் எல்லாம் தூர்வாரப்பட்டு அதன் மூலம் நீர் சேமிக்கப்பட்டது.
இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் கூட இப்போது நெல்லை தென்காசி போன்ற மாவட்டங்களில் உள்ள 432 ஏரிகள் நீரின்றி வறண்டு போய் கிடக்கிறது. இந்த அரசு நீர் மேலாண்மையை முறையாக கையாளவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
வடகிழக்கு பருவமழையில் உயிரிழப்புகளை தடுத்திட உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து செய்தியாளர் முத்துகிருஷ்ணன் என்பவர் பலியாகி உள்ளார். அவருக்கு பேரிடர் நிதியில் இருந்து முழுமையாக நிதியை வழங்க வேண்டும். ஆனால் அரசுக்கு தர மனம் வரவில்லை.
சென்னையில் நடைபெறும் கள நிலவரங்களை அமைச்சர்கள் தயக்கமில்லாமல் மக்களிடத்தில் எடுத்துச்சென்று, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆனால் மழைநீர் வடிகால் பணிகளை 30 சதவீதம் முடித்துவிட்டு, 90 சதவீதம் முடித்ததாக ரெடிமேட் பதிலை கூறுகிறார்கள்.
எடப்பாடியார் கஜா புயல், ஒக்கி புயல், வருதா புயல் போன்ற புயல் காலகட்டத்தில் பல்வேறு அனுபவங்களை பெற்றார். குறிப்பாக கொட்டும் மழையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மக்களின் நம்பிக்கையை பெற்றார்.
மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரடியாக சென்று அனைத்து மாவட்ட ஆட்சித தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தான் இன்றைக்கு இப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் செய்கிறார்.
ஆனால் எந்த தீர்வும் காணப்படவில்லை. உயிர்ப்பலி தொடர்கிறது. ஆகவே வடகிழக்கு பருவ மழையை உயிர்பலி இல்லாத வகையில் இந்த அரசு எதிர்கொள்ள வேண்டும்.
இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.