சட்டமன்ற தேர்தல் இப்போது வந்தால் 234 தொகுதிகளிலும் கழகம் வெற்றிபெறும்

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி திட்டவட்டம்
ராணிப்பேட்டை
விடியா தி.மு.க அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர். இந்த மாதமே சட்டமன்ற தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் தலைமையில் 234 தொகுதிகளிலும் கழகம் வெற்றிபெறுவது உறுதி என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி திட்டவட்டமாக கூறி உள்ளார்.
2024 பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக, பூத் கமிட்டி அமைத்தல் குறித்த ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நெமிலி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.வி.ஆர்.அருணாபதி தலைமையில் நெடும்புலி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. பேரூராட்சி கழக செயலாளர் எஸ்.கே.மணிவண்ணன், அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி. எம்எல்ஏ கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: –
கழகம் என்ற இயக்கமானது மிகப்பெரிய இயக்கமாகும். கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் ஒன்றிய, நகர, பேரூர் பகுதியில் பூத் கமிட்டி அமைக்கும் பணி சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. கழகம் என்ற இயக்கமானது கட்டுப்பாடான தொண்டர்கள் கொண்ட இயக்கம்.
எப்பொழுதும் எந்த தேர்தல் வந்தாலும் எழுச்சியாக பணியாற்றக்கூடிய திறமை பெற்ற தொண்டர்கள் கொண்ட இயக்கம் கழகம். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கொள்கையை பின்பற்றுகின்ற ஒரே இயக்கம் கழகம் மட்டும் தான். ஸ்டாலின் கட்டுப்பாட்டில் திமுக இல்லை. திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் கதறுகிறார். திமுக அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும், நிர்வாகிகளையும், ஸ்டாலின் கட்டுப்படுத்த தவறி விட்டார்.
19 மாத விடியா திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் மக்கள் செல்வாக்கை முற்றிலும் இழந்து விட்டார். திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர். இந்த நல்ல சூழ்நிலையை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கழக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஊடகங்கள், செய்தித்தாள்கள் நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை.
தேர்தல் நேரத்தில் 525 வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு ஒரு வாக்குறுதியும் முழுமையாக நிறைவேற்ற முடியாமல் ஸ்டாலின் திணறிக்கொண்டிருக்கின்றார். சொத்துவரி, குடிநீர்வரி, வீட்டு வரி, மின் கட்டணம், பால் விலை, கட்டுமான பொருட்களின் விலை அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் ஏழை எளிய, மக்கள், நடுத்தர மக்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்
குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000, முதியோர் உதவிதொகை ரூ.1500, நீட் தேர்வு, விவசாய கடன், கல்விக்கடன் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி ஸ்டாலின் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மாவின் திட்டங்களுக்கு ஸ்டாலின் மூடுவிழா நடத்திக்கொண்டிருக்கின்றார். முதல்வர் ஸ்டாலின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
விடியா தி.மு.க அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர். இந்த மாதமே தேர்தல் வந்தாலும் கழகம் எடப்பாடியார் தலைமையில் 234 தொகுதிகளிலும் வெற்றிபெறுவது உறுதி. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் கெட்டு சந்தி சிரிக்கின்றது.
மக்கள் மீளாத் துயரத்திற்கு சென்று விட்டனர். எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை, கற்பழிப்பு, ஆள் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை, ஒரு நபர் காட்டன் சூதாட்டம், கள்ளச்சாராயம், போலி மது பாட்டில்கள் விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் பெருகிவிட்டன.
கழகம் என்ற இயக்கத்தில் மட்டும் தான் சாதாரண தொண்டனும் முதல்வராகவும், அமைச்சர்களாகவும், எம்.எல்.ஏ எம்.பி மற்றும் உயர்ந்த பொறுப்புகளுக்கு வர முடியும். திமுகவில் கருணாநிதி குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டுமே முதல்வராகவும் மற்றும் உயர்ந்த பதவிகளுக்கு வர முடியும். விடியா திமுக அரசின் அவலங்கள், அராஜகங்கள், ஊழல்களை, பத்திரிகைகள், ஊடகங்கள் மறைக்கின்றனர்.
விளம்பரத்தில் ஸ்டாலின் ஆட்சி ஓடிக்கொண்டிருக்கின்றது. கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது. திமுகவினரின் அராஜகங்கள், ஊழல்கள், அத்துமீறல்களை, சமூக வலைதளங்கள் மூலம் உடனுக்குடனே மக்களுக்கு தெரிவிக்கின்றனர். எடப்பாடியார் முதலமைச்சராக வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் டாக்டர் கனவை நனவாக்கியவர் எடப்பாடியார். சமூக நீதியை நிலை நாட்டிய தேசிய தலைவர் எடப்பாடியார். ஸ்டாலினின் கைக்கூலியாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார்.
கழகத்தை எந்த கொம்பாதி கொம்பனாலும் அசைத்து பார்க்க முடியாது. அம்மாவின் மரணத்திற்கு காரணம் சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வம் தான் கழகம் என்ற பேரியக்கத்தில் இருந்த வரை அவர் ஓ.பன்னீர்செல்வம். கழகத்தை விட்டு தூக்கி எறிந்த பிறகு அவர் ஜீரோ பன்னீர்செல்வம்.
நியாயம், தர்மம், எடப்பாடியார் பக்கம் உள்ளது. தர்மம் நிச்சயம் வெல்லும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கழகம் கைப்பற்றும். பூத் கமிட்டிக்கு விசுவாசமிக்க தொண்டனை தேர்வு செய்ய வேண்டும். இந்த பணியை சிறப்பாக செய்தால் வருகின்ற தேர்தலில் தி.மு.க டெபாசிட் இழக்கும்.
நெமிலி மேற்கு ஒன்றியம், பனப்பாக்கம் பேரூராட்சி கழகத்தின் கோட்டை என நிரூபிக்கும் வகையில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் செயல்பட வேண்டும். தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமைய அனைவரும் அயராது பாடுபட வேண்டும்.
இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ பேசினார்.