நளினி, ரவிச்சந்திரன் உள்பட 6 பேரும் விடுதலை-உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி, ஹரிகரன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி உள்ளிட்ட 6 பேர் சிறையில் உள்ளனர். உச்ச நீதிமன்றம் கடந்த மே 18-ம்தேதி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது.
இதையடுத்து, முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நளினி, ஹரிகரன், ரவிச்சந்திரன் ஆகியோா் தங்களை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்த நிலையில் நேற்று தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு இந்த வழக்கில் தண்டனை பெற்ற ஆறு பேருக்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆறு பேருக்கும், பேரறிவாளன் வழக்கில் அளித்த தீர்ப்பு பொருந்தும் என்பதால், அனைவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளது.