வாயை பொத்தி இழுத்து வந்து வெளியேற்றிய எம்.எல்.ஏ. உதவியாளர்

சேலம்
அமைச்சர் கே.என்.நேருவை நிற்க வைத்து கேள்வி கேட்ட தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி வாக்குவாதம் செய்தார். குறைகளை தெரிவித்த அவரை வாயை பொத்தி தர தரவென இழுத்து வெளியே வந்து விட்டுள்ளார் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர். அப்போது வேதனையடைந்த ஒன்றிய தி.மு.க. பிரதிநிதி தி.மு.க.வால் தான்என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்து விட்டது என்று ஆவேசமாக கூறினார்.
சேலம் மாவட்டம், தாசநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த பனமரத்துப்பட்டி தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி கோவிந்தன், இவர் ரியல் எஸ்டேட் புரோக்கர் வேலை செய்து வருகிறார். கடந்த 7.11.2001 அன்று சேலம் மாவட்ட போலீசார் ரவுடி ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய போது தவறுதலாக கோவிந்தன் மகன் சண்முகம் (22) கொல்லப்பட்டார்.
கோவிந்தனின் மற்றொரு மகனான மணிகண்டனுக்கு அரசு வேலை வழங்குவதாக அப்போதைய மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணன் உத்தரவாதம் அளித்தார். இதுவரை வேலை வழங்கப்படவில்லை.
கோவிந்தன் கடந்த சில மாதங்களாக அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து மனு வழங்கி தனது மகனுக்கு அரசு வேலை வழங்குமாறு கேட்டு வந்தார். இதனையடுத்து நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் மரவள்ளி விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் குரு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அப்பொழுது கூட்டத்திற்கு வந்த கோவிந்தன் அமைச்சர் கே.என்.நேருவிடம் தனது மகனுக்கு அரசு வேலை கேட்டு வாக்குவாதம் செய்தார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்பொழுது சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அவரை தடுத்து நிறுத்தியதில் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் குறையை கூற வந்த தி.மு.க. பிரமுகர் கோவிந்தனின் வாயை பொத்தி தரதரவென என இழுத்து வந்து வெளியேற்றினார். அப்போது கோவிந்தன், தி.மு.க.வை சேர்ந்த எனக்கு தி.மு.க. உதவவில்லை என்றும், இவர்களால் தனது குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிட்டது என்று வேதனை தெரிவித்ததுடன், தி.மு.க. பிரமுகராக இருப்பதை நினைத்து நொந்துகொண்டார். அமைச்சர் நிகழ்ச்சியில் தி.மு.க. பிரமுகர் வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.