தற்போதைய செய்திகள்

தி.மு.க.வின் அப்பட்டமான உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது-முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கடும் தாக்கு

சென்னை,

சமூகநீதியைக் கட்டிக்காப்பாற்ற முயற்சிப்பது போல, அனைத்துக்கட்சி கூட்டத்தைக்கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று கபட நாடகம் ஆடி வருகிறது தி.மு.க. ‘கழுத்து வெளுத்தாலும் காகம் கருடனாக முடியாது’ என்பதைப்போல, பொருளாதார இடஒதுக்கீட்டில் தி.மு.க.வின் அப்பட்டமான உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது என்று முன்னாள் அமைச்சரும், கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தித்தொடர்பு செயலாளருமான முனைவர் வைகைச்செல்வன் கூறி உள்ளார்.

முன்னாள் அமைச்சரும், கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தித்தொடர்பு செயலாளருமான முனைவர் வைகைச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சாசன சட்டத்திருத்தம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்தால், மற்ற ஜாதியினருக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து வெற்றி பெறுவதைப்போல, அரசியலிலும் இரட்டை வேடம் போட்டு வெற்றி பெற்றுவிடலாம் என்கிற கனவில் மிதந்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவரது கனவு என்றுமே பலிக்காது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டு பிரச்சினையில் அனைத்துக்கட்சிகளையும் துணைக்கு அழைக்கிறார்.

பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு என்பது பிராமணர்கள் மட்டுமல்லாமல், முற்பட்டோர் பட்டியலில் உள்ள மொத்தம் 79 ஜாதியினர் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. 1985ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இரண்டாவது கமிஷன் அறிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் ‘முற்பட்ட வகுப்பினர்’ என வகைப்படுத்தப்பட்ட ஜாதிகளின் பட்டியலில் 79 ஜாதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த ஜாதிகள் அனைத்தும் 10சதசீத இடஒதுக்கீட்டால் பலனடையும்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒத்த கருத்துள்ள கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு எனும் சமூக அநீதியை எதிர்த்து போராட முன்வர வேண்டும் என குரல் கொடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

ஆனால், இது தங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், 2005-06ல், தங்களின் ஆட்சியில் அமைக்கப்பட்ட மேஜர் சின்ஹோ குழுவானது 2010ம் ஆண்டு அளித்த பரிந்துரையின் அடிப்பைடையில் தான் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாகியது என்றும், இன்றைய உச்சநீதி மன்ற தீர்ப்பை காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை கம்யூனிஸ்ட் கட்சிகள் முழுமையாக ஆதரித்ததோடு மட்டுமல்லாமல், அண்டை மாநிலமான கேரளாவில் அமல்படுத்தியும் உள்ளது. தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரட்டை வேடத்தை புரிந்து கொண்டு அவரது கோரிக்கையை நிராகரித்து, உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளது.

பொதுவாக, எந்த ஒரு இடஒதுக்கீடாக இருந்தாலும், அது மக்களை பாதிக்கக்கூடாது என்பதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது. இதேபோன்று, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கான 69சதவீத இடஒதுக்கீட்டிற்கு மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் பிரச்சனை வந்தபோது, புரட்சித்தலைவி அம்மா அவர்கள், அனைத்துக்கட்சி தலைவர்களையும் கலந்தாலோசித்ததோடு மட்டுமல்லாமல், அவர்களை அன்றைய பிரதமரை சந்திக்க வைத்து தனது நிலைப்பாட்டை எடுத்து வைத்தார்கள். மேலும், அரசியல் சாசன சட்டத்தின் 9வது அட்டவணையில் இதை சேர்த்து உறுதிப்படுத்தினார்கள்.

அதன் காரணமாகவே, திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி, புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு, ‘சமூகநீதிகாத்த வீராங்கனை’ என்ற பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தினார் ஆனால், தற்போது தி.மு.க மத்தியில் ஆளும் காங்கிரசுடன் சற்றேறக்குறைய 17 ஆண்டுகள் கூட்டணி ஆட்சியில் இருந்த போது மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நீட் மற்றும் 10 சதவீத பொருளாதார இடஒதுக்கீடு போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல் தலையாட்டி விட்டு, இன்று வறியவர்களை காக்க புதிய அவதாரம் எடுத்து வந்ததைப்போல வேஷம் போட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியிலான மத்திய அரசு பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்து மேஜர்சின்ஹா குழுவிற்கு அனுமதி வழங்கி அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்ய வைத்து பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு அளிக்க ஒருமித்த கருத்தை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியது தி.மு.க. மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த போது காற்றில் பறக்கவிட்ட சமூகநீதியை, தற்போது சமூகநீதியைக் கட்டிக்காப்பாற்ற முயற்சிப்பது போல,

அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று கபட நாடகம் ஆடி வருகிறது தி.மு.க. ‘கழுத்து வெளுத்தாலும் காகம் கருடனாக முடியாது’ என்பதைப்போல, பொருளாதார இடஒதுக்கீட்டில் தி.மு.க.வின் அப்பட்டமான உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிந்து கொள்வார்கள் என்பதே நிதர்சனம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தித்தொடர்பு செயலாளருமான முனைவர் வைகைச்செல்வன் கூறினார்.