திருவண்ணாமலை

சாலையோர வளையல் கடையை நொறுக்கிய நகராட்சி நிர்வாகம்

வாழ்வாதாரத்தை அழித்து விட்டீர்களே என கண்ணீர் விட்டு கதறிய பெண்

திருவண்ணாமலை,

பொதுப்பணித்துறை அமைச்சரின் உத்தரவை பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி திருவண்ணாமலையில் சாலையோர வியாபாரிகளின் வளையல் கடையை ஜேசிபி இயந்திரம் கொண்டு நகராடசி நிர்வாகம் நொறுக்கியதால் வாழ்வாதாரத்தை இழந்த பெண் சாலையில் அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

பொதுப்பணித்துறை அமைச்சரின் உத்தரவை பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி திருவண்ணாமலையில் சாலையோர வியாபாரிகளின் வளையல் கடையை ஜேசிபி இயந்திரம் கொண்டு நகராடசி நிர்வாகம் நொறுக்கியதால் வாழ்வாதாரத்தை இழந்த பெண் சாலையில் அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலையொட்டியுள்ள வட ஒத்தவாடை தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வளையல் கடை தீப திருவிழாவுக்கு இடையூறாக இருப்பதாக கூறி நகராட்சி நிர்வாகத்தினர் எந்த கால அவகாசமும் வழங்காமல் ஜேசிபி எந்திரத்தை கொண்டு அந்த கடையை நொறுக்கினர். இதனால் தனது குடும்ப வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்த கவிதா என்ற பெண் சாலையில் அமர்ந்து எங்கள் குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டீர்களே. எங்கள் வாழ்வாதாரத்தை அழித்து விட்டீர்களே என கண்ணீர் மல்க அழுதது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நகராட்சி நிர்வாகத்தினர் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் 25 ஆண்டு காலமாக அப்பகுதியில் வளையல் கடை வைத்திருந்த அந்த பெண்ணின் தள்ளுவண்டியை நகர்த்திக்கொண்டு செல்ல அறிவுரை வழங்காமல் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வளையல் கடையை நொறுக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நடைபெற்ற தீபத்திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கூட்டத்தின் போது தீபத்திற்கு இடையூறாக உள்ள கடைகளை எந்த அறிவிப்பும் இல்லாமல் இரவோடு இரவோடு அகற்றுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதாமலும், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை கூட பொறுப்பெடுத்தாமல் இப்படி ஒரு மனிதாபிமானமற்ற சம்பவத்தை அரங்கேற்றி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், சாதாரண தினங்களில் தங்களிடம் நகராட்சினர் வரி வசூல் செய்து கொண்டு தீபத்திருவிழாவின் போது எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் கடையை காலி செய்ய சொல்வது நியாயமா என கேள்வி எழுப்பி உள்ளனர்.