விடியா திமுக ஆட்சியில் கிராவல் மண் கொள்ளை – மானாமதுரை அருகே லாரிகளை பிடித்து கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை

சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது தெ.புதுக்கோட்டை கிராமம். சிவகங்கை ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இக்கிராமத்தில், சேர்வைக்காரன் ஊரணி என்ற ஊரணி உள்ளது. இதில் ஒரு கரை சிவகங்கை மாவட்டத்திலும், மற்றொரு கரை ராமநாதபுரம் மாவட்டத்திலும் அமைந்துள்ளது. இந்த ஊரணி கரையை 12 அடி ஆழத்திற்கு பொக்லைன் இயந்திரம் கொண்டு கிராவல் மண்ணை சிலர் திருட்டுத்தனமாக அள்ளி இருக்கின்றனர்.
இதனை அறிந்த கிராம மக்கள் கிராவல் மண் திருடி செல்லப்பட்ட 4 லாரிகளை சிறை பிடித்தனர். இதுபற்றி வருவாய்த்துறை, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த அதிகாரிகள், கிராம மக்களிடம், விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்வதாக கூறி 4 லாரிகளையும் மானாமதுரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் 4 லாரிகளையும் அதிகாரிகள் விடுவித்தது தெரியவந்துள்ளது. இதனை அறிந்த கிராமமக்கள் வானம் பார்த்த சிவகங்கை பூமியில் ஒரு போகம் விவசாயம் செய்து வந்த நிலையில், தங்கள் பகுதிகளில் இரவு நேரங்களில் அதிக அளவில் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது.
மணல் கொள்ளையர்களால் தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்குவதால் தங்கள் விவசாய நிலத்திற்கு வரவேண்டிய தண்ணீர் தடைபட்டு இருக்கிறது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர். நீர்நிலைகளை சேதபடுத்த துவங்கியுள்ள மணல் கொள்ளையர்களை பிடித்து கொடுத்தும் அதிகாரிகள் விடுவித்துள்ளனர். இந்த விடியா அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
அதிகாரிகள் ஆளுங்கட்சியினரின் அதிகாரத்திற்கு அடிபணிந்து கனிம வள கொள்ளையர்களுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்கள். அரசு அதிகாரிகளின் இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறோம் என்று அப்பகுதி விவசாயிகளும் கிராம மக்களும் தெரிவித்தனர்.