திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

செங்கல்பட்டு
கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்த திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தி.மு.க. தலைவரை கண்டித்து பேரூராட்சி கூட்டத்திலிருந்து கழக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் 5 வார்டுகளில் கழகத்தை சேர்ந்த மணிவணணன், நரசிம்மன், கவிதா மோகன்ராஜ், வரதராஜன், சுமிதா தினேஷ்குமார் ஆகியோர் கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.
இந்நிலையில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது வார்டுகளுக்கு சாலை வசதி, குடிநீர் மின்விளக்கு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் பேரூராட்சி நிர்வாகம் செய்து தர மறுப்பதாகவும் அந்த வார்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பேரூராட்சி நிர்வாகம் வீண் செலவு செய்து வருவதாக கழக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பேரூராட்சி மன்ற கூட்டத்தில் கழக கவுன்சிலர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில் அவர்களின் கேள்விகளுக்கு திமுக பேரூராட்சி மன்ற தலைவர் செவி சாய்க்கவில்லை. மேலும் பதில் அளிக்கவும் மறுத்துள்ளார்.
ஆளும் தி.மு.க.வினர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுக்கின்றனர் என்று 5 வார்டுகளை சேர்ந்த கழக கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டுகளை முன் வைத்ததோடு பேரூராட்சிமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.