குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

தேர்தலில் தி.மு.க.வுக்கு பாடம் புகட்டுவோம்-பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கொந்தளிப்பு
செங்கல்பட்டு
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குரோம்பேட்டை பேருந்து நிலையத்தை தி.மு.க.வினர் ஆக்கிரமித்து அராஜகத்தில் ஈடபட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, வருகின்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு பாடம் புகட்டுவோம் என்று கொந்தளிப்புடன் கூறினர்.
செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை பேருந்து நிலையத்தை ஆக்கிரமிப்பு செய்த பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அமைச்சர் தா.மோ.அனபரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதற்காக பேருந்து நின்று செல்லும் பேருந்து நிலையத்தை ஆக்கிரமிப்பு செய்து, முற்றிலும் பேரிகார்டு மூலம் தடுப்புகள் போட்டு பேருந்து நிலையத்தை மூடி விட்டனர். இதனால் கொழுத்தும் வெயிலில் பொதுமக்கள் ஜி.எஸ்.டி.சாலையில் நீண்ட நேரம் நின்றிருந்தனர்.
பேருந்துகளும் சாலையிலேயே நின்றது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதில் மாற்றுத்திறனாளிகள் பெரியவர்கள் முதியவர்கள் பெண்கள் உள்ளிட்டோர் பல மணி நேரம் வெயிலில் காக்க வைக்கப்பட்டதால் கடும் அவதிப்பட்டனர்.
முதல்வரின் மகன் என்பதால் ஒரு சாதாரண சட்டமன்ற உறுப்பினருக்காக குரோம்பேட்டை பேருந்து நிலையத்தை ஆக்கிரமிப்பு செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மண்டலத்தலைவர் ஜோசப் அண்ணாதுரை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேருந்திற்காக காத்திருந்த பயணிகள் புலம்பினர்.
இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் கடுமையாக கண்டனத்தை தெரிவித்துள்ளனர். ஆளும் விடியா திராவிட மாடல் அரசு வருங்கால வாரிசு அரசியலுக்காக அவரிடத்தில் நன்மதிப்பு பெற வேண்டும் என்ற நோக்கில் பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தக்கூடிய முக்கிய இடமான பேருந்து நிலையம் மற்றும் அருகில் உள்ள குரோம்பேட்டை அஞ்சலகம் நிலையம் அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்து தங்களது ஆளும் கட்சி என்ற மமதையில் கொஞ்சம் கூட பொதுமக்களுக்கு சேவை செய்ய தங்களை தேர்ந்தெடுத்து உள்ளார்கள் என்ற கவலையும் இல்லாமல் மிகப்பெரிய அராஜகத்தில் ஈடுபட்டது விடியா திமுகவின் உச்சபட்ச அராஜகத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டி உள்ளது.
இதேபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் வருகின்ற தேர்தலில் மக்கள் கண்டிப்பாக தி.மு.க.வுக்கு பாடம் புகட்டுவார்கள் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் தெரிவித்தனர்.