பிளாஸ்டிக் பைகளில் பொங்கல் பரிசுகள் -கழக எம்.எல்.ஏ. ஜெயசங்கரன் கண்டனம்

சேலம்,
பிளாஸ்டிக் பைகளில் பொங்கல் பரிசு பொருட்களை அடைத்து விநியோகம் செய்வதற்கு கழக எம்.எல்.ஏ. ஜெயசங்கரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் மஞ்சப் பை தரமற்றவையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் வ.உ.சி நகர் பகுதி ரேசன் கடையில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் பொங்கல் பரிசு தொகுப்பை ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் ஆய்வு மேற்கொண்டார்.
பொங்கல் தொகுப்புகளை துணி பையில் வழங்க உத்தரவிட்டிருந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்தும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பையில் அடைத்து வழங்க இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைககளை பயன்படுத்தக் கூடாது என அரசு அறிவித்துள்ளது. ஆனால் அரசு இது பேன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது. கடந்த ஆண்டு எடப்பாடியார் ரூ.2500 மற்றும் பொங்கல் பரிசு வழங்கினார்.
பொதுமக்கள் மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள். இந்த ஆண்டு ரொக்கப் பணம் வழங்காததால் மக்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.